சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Thursday, December 27, 2012

நிற்க அதற்குத் தக!



                                          என்றும் இல்லாத அளவுக்கு அன்று சற்று நெரிசலாகவே காணப்பட்டது அந்தச்சாலை. பொதுவாக அந்தச் சாலை நாய்களுகென்று குத்தகைக்கு விடப்பட்டது என்று சொல்லலாம். யார் யாரோ நடந்து சென்றாலும் கதைக்காக வேண்டி நாம் அந்த மூன்று பேரை மட்டும் உற்று நோக்க வேண்டும். அவர்களைப்  பார்க்க எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டே போவது போல் தெரிந்தது. அவர்களின் விவாதச் சத்தம் என் காதை கிழித்தது, ஆகவே நான் ஒட்டுக் கேட்டு வந்து உங்களிடம் சொல்வதாய் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் விவாதம் இந்தியாவின் கல்வி முறையைப் பற்றி இருந்தது. அவர்களுடைய  பெயர் எல்லாம் தெரியாது, ஒருவன், மற்றொருவன், மூன்றாமவன் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் சொன்னான், "இந்தியக் கல்விமுறை சுத்தமா சரியில்லை, நல்ல கல்வி என்பது ஒருத்தன முழு மனிதனா மாத்தி அவனுக்கு வாழ்க்கையல்ல சொல்லித் தரனும், ஆனா நம்ம கல்வி முறை பணம் பண்ற மெஷின்களத்தான உருவாக்கிட்டு இருக்கு". இன்னொருவன் பொங்கி, "அதெப்படி நீ சொல்லலாம், கல்வி முறையில எந்தக் குறையும் இல்ல, கற்பிக்கிறவன்ட்டதான் இருக்கு எல்லாக் குறையும். நல்லாப் படிச்சு வாத்தியாராப் போறவன் எத்தனை பேர் சொல்லு, பார்டர்ல பாஸ் ஆகி வேற வேலை எதுவும் கிடைக்காம வாத்தியார் ஆனவன்தான் அதிகமா இருக்கான்.அதுக்காக அவன நான் கொற சொல்லல, வேலைக்கு வந்த பின்னாவது நாம எடுத்திருப்பது புனிதமான கடம, இந்தியாவோட எதிர்காலமே நம்ம கையில்தான இருக்குன்னு நெனைச்சு அவன் பொறுப்போட நடந்துக்க வேணாமா". அதுவரைப் பொறுத்திருந்த மூன்றாமவன் "எல்லாக் ஸ்கூல்,காலேஜுலயும் இந்த நெலமை இல்ல. ஐஐடி எடுத்துக்கோங்க அங்க இல்லாத பெசிலிட்டீசா , வாத்தியாருங்களா, ஆனா அங்க படிக்குறவன்ல 90 சதவீதம் வெளிநாட்டுக்குத்தான போறான். எவனாவது இன்னோவேடிவா எதாவுது கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பேர் வாங்கித் தந்தானா. இல்லையே. ஆக நம்ம education system is not teaching anything morally good to the students.என்று தன் பிரசங்கத்தை முடித்தான். தன் வேளை வருமென்று காத்திருந்த இரண்டாமவன், "நான் ஸ்கூல் படிக்கும்போது கேம்ஸ் பீரியட மேத்ஸ் வாத்தியார் எடுத்துப்பார், ஆர்ட் பீரியட சைன்ஸ் வாத்தியாரும், கிராஃப்ட் பீரியட இஸ்ட்ரி வாத்தியாரும் எடுத்துப்பாங்க. இவுங்க இப்பிடி இருக்க கல்வி முறைய குறை சொல்லி என்ன பிரயோஜனம்". முதலாமவன் ஆரம்பித்ததோடு சரி, பின் ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்களுடை பேச்சு நீண்டு கொண்டெ போனது. சட்டென்று அவர்களை கடந்து வேகமாக முன் சென்ற லாரி ஒரு குட்டி நாயின் காலில் ஏற்றிவிட்டு நில்லாமல் சென்றது. மூவரும் செய்வதறியாது நின்று, கதறியபடி மெல்ல மெல்ல சாலையக் கடக்க முயற்சி செய்த நாயை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் சிறுதும் தாமதிக்காமல் சாலையின் மறுபக்கத்தில் இருந்து ஓடிவந்த, அந்த வறுத்தகோழி உணவகத்தின் காவலாளி லாவகமாக அக்குட்டியைத் தூக்கி சாலையின் மறுபக்கம் விட்டார். மூவரின் விவாதமும் தற்போது இந்தியாவில் தெரு நாய்களின் இன்றைய நிலையைப் பற்றித் திரும்பியது. நாயைக்  காப்பாற்றிய காவலாளி, வேலை நேரத்தில் வெளியில் சென்றதற்காகவும், வறுத்த கோழி உணவகத்தில் கோழி கொறிக்க வந்தவர்களுக்கு கதவை திறந்து விடாததற்கும் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். கையாலாகாத நான் இதைக் கதையாய் எழுதத் தொடங்கினேன்.
"கற்க கசடற கற்பவை - கற்றபின், 
நிற்க அதற்குத் தக"

Tuesday, December 25, 2012

பாரதி இறந்த அடுத்த சில நிமிடங்கள்...

பிள்ளைங்களா இன்னிக்கு உங்களுக்கெல்லாம் பாரதிக் கதை சொல்லப் போறேன் என்று ஆரம்பித்தார் தாத்தா, குழந்தைகளும் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தனர். 
காலா என் காலருகே வாடா உன்னை காலால் உதைக்கிறேன் போடா என்று கால்களை ஆட்டியபடி பாரதி மரணப் படுக்கையில் படுத்திருந்த வேளை, பாசக் கயிற்றுடன் பக்கம் வந்தான் எமன். பாரதியின் கால்களருகே வந்த சித்திர குப்தனுக்கு வசமாக ஒரு உதை கிடைக்க தாடை தெறிக்க எகிறி விழுந்தான். ஒருவழியாக எமனும் சித்திரகுப்தனும் பாரதியிடம் மன்றாடி அவனது ஆன்மாவை உடலில் இருந்து எடுத்துச் சென்றார்கள் . செல்லும் வழியில் தங்கப் பல்லக்கை தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் வான் வெளியில் இருந்து வந்து கொண்டிருந்தது. எமா, அந்தப் புனித ஆத்மாமை எங்களிட்ம கொடுத்துவிடு அது சுவர்க்கத்தை ஆள வேண்டியது என்று அக்கூடடத்தலைவன் கட்டளையிட பாரதியின் ஆத்மா அவனிடம் ஒப்படைக்கப் பட்டது. இவ்வேளையில்  கோபம் கொண்டு விழித்தெழுந்த பாரதியின் ஆத்மா! அடேய் மூடர்களே, எனது ஆன்மாவை பூமியிலேயே விட்டு விடுங்கள் என்றது. அய்யா உங்கள் உடல் இறந்து விட்டது, இனி உங்களால் பூமியில் வாழமுடியாது என்றது தங்கப் பல்லக்கு கூட்டம். அது எனக்கு தெரியும் என் உடல் சுமை தாளாததால் அதை நான் கழட்டி எறிந்து விட்டேன். என் ஆன்மாவை புவியில் எப்படி வாழ வைப்பது என்று எனக்கு தெரியும் என்றான் பாரதி. ஐயா உங்கள் ஆன்மாவை விடுவிக்க நாங்கள் யார், உங்களுக்கு இங்கு வரவிருப்பமில்லை என்றால் நீங்கள் பூமிக்குச் செல்லலாம், என்ற அடுத்த நிமிடம் பூமியை நோக்கி பாய்ந்தது பாரதியின் ஆன்மா. என்று கதையை முடித்தார் தாத்தா. உடனே சிறார்கள் தாத்தாவிடம், “அது சரி தாத்தா பாரதியோட ஆத்மா இப்போ பூமியில் எங்க இருக்கு?” என்று கேட்க. உடனே தாத்தா பக்கத்தில் இருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்துக் காட்டி இதுதான் பாரதியின் ஆத்மா என்றார். அத்துடன், “ இதை உணர்ந்து படித்து உள்ளத்தில் ஏற்றிக் கொள்ளும் ஒவ்வொருவனுக்குள்ளும் அவன் ஆத்மா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது” என்றார்.
   துள்ளி எழுந்த குழந்தைகள், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று உரக்கப் பாடியபடி விளையாடச் சென்றனர்.

சொலவடை