சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Tuesday, July 24, 2012

இருட்டின் நிறம் இளமஞ்சள் சிவப்பு

எல்லோரும் துயிலச் செல்லும்
இரவு வேளைகளில் நாங்கள்
கண் விழிக்கிறோம்
எங்களது இருட்டு
எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு
வெளிச்சம் நிரப்பி
அனுப்படுகிறது!
நள்ளிரவில் இங்கிருந்து
வெள்ளைக்காரனுக்கு கூச்சமில்லாமல்
குட் மார்னிங் சொல்கிறோம்!
தினந்தோறும் வானத்தில் மட்டுமே
விடியலைப் பார்க்கிறோம்
இரவையும் பகலையும்
இருட்டையும்  வெளிச்சத்தையும்
தரம்பிரிக்கத்தெரியாது தவிக்கிறோம்.  
கண்மூடித் தூங்கும் பொழுது
எங்கள் கண்களிலும் 
ஒரு இருட்டு தெரிகிறது
ஆனால் எங்களின் இருட்டு மட்டும்
ஏன் இளமஞ்சள் நிறத்தில் இருக்கிறது?

Wednesday, July 11, 2012

ஆதாமிண்டே மகன் அபு ആദാമിന്റെ മകൻ അബു -2011

               அப்பாவிற்கு பணம் அனுப்பி நாளாகிறது, வீட்டிற்கு ஃபோன் பேசி மாதங்களாகிறது. இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என்று இயந்திரத்தனமாக  வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நேரத்தில், ஒரு மழை இரவில் இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. விருப்பமில்லாமல்தான் திரையிட்டேன், ஆனால் படம் முடிந்தவேளையில் என்னுள் பீறிட்டு எழுந்த கண்ணீரை பாத்தி கட்டி எழுத்தாக மாற்றி இப்படத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன்.

Premise: எழுபதைக் கடந்த ஒரு ஏழை இசுலாமிய தம்பதியினர் ஹஜ் புனித யாத்திரை செல்லப் படும் பாடு!

சில குறிப்புகள் : அபு ஒரு ஏழை வாசனைத்திரவிய விற்பனையாளர், அவருக்கு ஒரு மனைவி ஆயிஷா. அவளுக்குப் பேச்சுத்துணை, அவர்கள் வீட்டில் வளரும் பசுக்களும், ஒரு பலா மரமுமே. ப்சுமையும், குளிர்ச்சியும் நிறைந்த கிராமத்தின் நடுவே அவர்கள் வீடு. எல்லாம் இருந்தும் அவர்களுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு ஏக்கம், ஹஜ் யாத்திரை செல்ல சீக்கிரம் பண்ம் சேர்த்து விட வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு, பெற்றவர்களைப் பற்றி கவைப்படாமல் துபாயில் தன் சம்பாத்யம், தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்பவன். அவனை நினைத்து அடிக்கடி ஆயிஷா அழுவதுண்டு. 
                           அந்த ஊரின் ஹாஜியார் அடிக்கடி மெக்கா, மதினா போய் வந்தவர். அந்த ஊரிலே பணக்காரரும் கூட. அவரிடம் சென்று அபு மக்கா செல்வதற்கான வழிமுறைகளை (Procedures) கேட்கிறார். ஹாஜியார் அடிக்கடி துபாயில் இருக்கும் தன் மகனைப் பற்றி பெருமை பேசிக் கொள்(ல்)வார். தன் மகன் தனக்கு கார் வாங்கித் தந்தான், மூன்று முறை மக்கா கூட்டி சென்றான், இப்படிப் பல. இதையெல்லாம் முகத்தில் புன்னகையோடும், கண்களில் சிறு கலக்கத்தோடும் கேட்டுக் கொள்வார் அபு. அபுவின் கண்கள் இப்படி பல இடங்களில் கலங்கியபோதெல்லாம் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி பீறிட்டு எழும். அது ஏன் என்று நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஹாஜியார் அபுவிடம் தனக்கு தெரிந்த ஒரு ட்ராவல் ஏஜென்சியின் விலாசத்தைக் கொடுத்து தான் அனுப்பியதாக கூறச்சொல்கிறார். 
                                   இங்கிருந்து ஆரம்பிக்கிறது ஆதாமின் ஹஜ் ஆயத்தப் பணிகள், மறுநாள் வெள்ளன எழுந்து கோழிக்கோட்டில் இருக்கும் அந்த மக்கா, மதினா ட்ராவல் ஏஜென்சியின் அஷ்ரஃபை சென்று பார்க்கிறார். அவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லாததை அறிந்து அவருக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான வழிமுறைகளை சொல்கிறான் அஷ்ரஃப். அவருக்கும், அவர் மனைவிக்கும் பாஸ்போர்ட் அப்ளை செய்யும் பணிகளில் துரிதமாக இறங்குகிறார் அபு. ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரைத் தேடிப் போலீஸ் வந்ததென ஆயிசா அவரிடம் அழுதுகொண்டே சொல்கிறார். பதறிப்போன அவர் தான் எந்த ஒரு தவறும் செய்துவிடவில்லையே என்று அல்லாவை பிரார்த்திக்கிறார். மறுநாள் காலை ஊரில் அதிகம் படித்தவரான கோவிந்தன் மாஸ்டரின் துணையுடன் போலீஸ் ஸ்டேசன் செல்கிறார். அங்கு போலீஸ் அவரைக் கேள்விகளால் துளைத்து எடுக்கிறது. நமக்குள்ளும் ஒரு பதற்றம் பீறிடும் வேளையில் அந்தப் போலீஸ்காரர் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காகத்தான் அபுவை அழைத்ததாக கூறுகிறார். அந்தக் காட்சியில் அபுவின் அறியாமையை இயக்குநர் அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார். 
                              கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கிறார் ஒரு ட்ரெங்குப் பெட்டியில், பெரும்பாலும் கடுஞ்சாயாவும், ரொட்டியுமே அவரின் உணவாகிப் போகிறது. தாகத்திற்கு சோடா குடிக்க பலமுறை யோசித்து பின் கிணற்றுத்தண்ணீரை பருகுகிறார். இப்படியெல்லாம் சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். ஆடு மாடுகளை விற்று விடுகிறார், அப்போது ஆயிசாவின் கண்கள் லேசாக கலங்குகிறது, நம் கண்களும்தான். மர வியாபாரியான ஜான்சனிடம் பலா மரத்தை ஐம்பதாயிரத்திற்கு விலை பேசிவிட்டார். ஒரு வாரத்தில் பணம் தருவதற்காக ஜான்சன் வாக்கு கொடுத்துவிட்டான். பணமும் சேர்த்துவிட்டார், தான் கொஞ்சநாளில் மக்கா செல்வதாகவும், தங்களுக்கு ஏதாவது கெடுதல் செய்தால் மன்னித்து விடுமாறும் சுற்றத்தார்களிடம் சென்று விருந்தோம்பல் செய்கிறார். அவர்கள் இவரை ஆரத்தழுவி கண்ணீர் மல்குகிறார்கள். குறிப்பாக கோவிந்தன் மாஸ்ட்டர் இவரைத்தன் அண்ணன் போலவே பாவிக்கிறார். முன்பொரு காலத்தில் இவரிடம் நிலத்தகரறில் சண்டையிட்ட சுலைமான் வாதம் வந்து படுத்துக் கிடக்கிறான். அவனிடம் சென்று தன்னை மன்னிக்குமாறு கேட்கும் காட்சியில் நம்மில் புதைந்து கிடக்கும் ஈகோ என்னும் அரக்கனின் கழுத்தை கத்தி கொண்டு அறுக்கிறார். சுலைமான் இவரின் கைகளை பிடித்துக் கொண்டு அழுகிறான். 
                                          ஒரு வாரம் கடந்தது. ஜான்சனின் மரக்கடைக்கு செல்கிறார். ஜான்சன் சிரித்த முகத்துடன் அவருக்கு ஐம்பதாயிரத்தைக் கொடுக்கிறார். அதை கைகள் நடுங்க ஒரு வெற்றிக் களிப்புடன் வாங்கிக் கொள்கிறார் அபு. மெல்லத்தயங்கியவாறே ஜான்சன் அவரிடம் தான் பலா மரத்தை வெட்டி விட்டதாகவும், மரம் உள்ளீடற்று(hollow) இருப்பதாகவும், அது பலகை செய்ய பயன்படாது, விறகாகத்தான் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறான். அதிர்ச்சியில் உறைந்த அபு, ஜான்சனிடம் பின் ஏன் எனக்கு பணம் தந்தாய் என்று கேட்கிறார். அதற்கு ஜான்சன், நீங்கள் நல்லபடியாக மக்கா போக வேண்டும் என்றுதான் என்கிறான்.ஆனால் அபு அதை வாங்க மறுத்துவிடுகிறார். விஷயம் கேள்விப் பட்டி கோவிந்தன் மாஸ்ட்டர் தயங்கியவாறே அபுவிற்கு ஒரு ஐம்பதாயிரம் கொடுக்க முற்படுகிறார். ஆனால் கடன் வாங்கி தான் ஹஜ் செல்ல விரும்பவில்லை என்று மறுத்துவிடுகிறார். இந்த இரண்டு இடத்திலும் தன் தன்மானத்தை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் அபு. 
                                                இரவில் ஆயிஷாவிடம் அடுத்த வருடம் நாம் ஹஜ்  போய்க் கொள்ளலாம் என்கிறார். அதற்கு ஆயிசா, அபுவை மட்டும் ஹஜ் போய் வருமாறு கேட்கிறாள். அதற்கும் அபு மறுத்து விடுகிறார். காலையில் சீக்கிரம் எழுந்து ட்ராவல் ஏஜெண்ட் அஷ்ரஃபை சந்திது தாங்கள் இந்த வருடம் ஹஜ் பயணம் வரவில்லை என்று கூறுகிறார். அதற்கு அஷ்ரஃப் ஐம்பதாயிரம் தான் தருவதாகவும், இறந்து போன தன் பெற்றோர்களை பணத்தட்டுப் பாடினால் ஹஜ் அனுப்ப முடியாத குறையை உங்களை அனுப்பி தீர்த்துக் கொள்கிறேன் என்கிறான். அதற்கு வெடித்து அழும் அபு, உங்களைப் போல ஒரு மகன் பெற்றதனால் அவர்கள் ஆயிரம் முறை ஹஜ் சென்ற பலனை அடைந்து விட்டதாக கூறி அஷ்ரஃபின் உதவியையும் மறுத்து விடுகிறார். அவர் ஒவ்வொருவரின் உதவியை மறுக்கும் போதும் ஒரு விசயத்தை நாம் உணர முடிகிறது. பெற்று வளர்த்த மகன் தனக்கு எதுவும் செய்யாத விரக்தியிலேயே மற்றவர்களின் உதவிகளையெல்லாம் மறுத்து, ஹஜ் போனால் தன் சொந்தச் செலவிலேயே போவேன் என்று உறுதியோடிருக்கிறார்.
                                                    இரவு உண்விவின் போது ஆயிசாவிடம் , தாங்கள் விற்ற கால்நடைகளை திரும்ப வாங்க வேண்டும் என்று சொல்கிறார். இரவு விடிகிறது, எழுந்து போய் வெட்டப் பட்ட பலா மரத்தின் அருகில் சிறு குழி தோண்டி மரக் கன்றை நடுவதோடு படம் நிறைவடைகிறது. அந்த நடுதல் நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது.


நான் பல மாதங்களுக்கு பின் ஊருக்கு செல்ல முடிவெடுத்து விட்டேன்,  ஆதாமின் மகன் அபுவிற்கும் ,கருப்பையாவின் மகன் குமரேசனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவர் ஹஜ் போக வேண்டும், இவருக்கு ஒரு வீடு கட்ட வேண்டும்.

Tuesday, July 10, 2012

இசைப் பிரியர்கள்இதைத் தவறவிடாதீர்கள்

                                       வெகு நாட்களாக மனதை உறுத்தி வந்த ஒரு விஷயம், இன்று கொட்டித் தீர்த்து விடுகிறேன். முகநூலிலும், துவிட்டரிலும் கீழ்க்கண்ட ஒரு பாடலை முன்பொரு காலத்தில் பகிர்ந்திருந்தேன், லயா ப்ராஜக்ட் என்ற இசைக்குழுவினரால் கம்போஸ் செய்யப் பட்ட ஒரு பாடல், 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களைக் கொண்டு அவர்கள் நல் வாழ்வுக்காக தொடங்கப் பட்ட ஒரு இசைக் குழு. அவர்கள் இந்திய இசைக் குழு அல்ல, ஆயினும் தமிழக மீனவ வாழ்க்கையை மையமாக வைத்து அய் ல சா என்று ஒரு பாடலும், நாகூர் இசுலாமிய குருமார்களை வைத்து ‘யா அல்லா’ என்றொரு பாடலும் தமிழில் வெளிவந்திருந்தது. வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனபின்ன்னும் நம்மில் பலருக்கு இந்தப் பாடல் தெரியாமல் இருப்பது வெட்கக் கேடான ஒரு விசயம். அப்படி ஒன்றும் மோசமான பாடலை அவர்கள் கொடுத்துவிடவில்லை. இந்தப் பாடலை மூன்று வருடங்களுக்கு முன் கேட்க நேர்ந்தது, அன்றிலிருந்து இன்று வரை தினம் ஒருமுறையாவது என்னைக் கேட்கத்தூண்டிவிடும் இப்பாடல்.இந்தியாவின் பாரம்பரிய இசையை மையமாக வைத்து ஐலசா பாடலை கம்போஸ் செய்திருப்பார்கள். இப்பாடலை நீங்கள் முன்னமே கேட்டிருந்தால் தயவு செய்து பகிருங்கள், இல்லாவிடில் தயை கூர்ந்து ஒரு முறை கேளுங்கள். ஒரு நல்ல இசைக் கோர்வையை இசை ஆர்வலர்கள் தவறவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப்பதிவு . உங்களுக்கு பிடிக்காமல் போகாது என்ற நம்பிக்கையுடன் பகிர்கிறேன்,

பாடல் : ஐ ல சா


பாடல் : யா அல்லா

Monday, July 9, 2012

மனம் எனும் மாயக் குரங்கு

என் கண்கள் 
இறுக்கமாக கட்டப்பட்டன
நான் தீயதையே பார்க்கிறேனாம்....

என் காதுகள்
பஞ்சால் அடைக்கப்பட்டன
நான் தீயதையே கேட்கிறேனாம்....

என் வாய்
துணிகள் கொண்டு பொத்தப்பட்டன
நான் தீயதையே பேசுகிறேனாம்....

என் உடல் 
யாருமற்ற தீவில்
தூக்கி வீசப்பட்டது

என் மனம் 
தன் கோரைப் பல் கொண்டு
என் உடலை கிழித்து வெளிவந்து
அவர்கள் தீயது என்று சொன்னதை 
தேடிச் சென்றது!!!

Saturday, July 7, 2012

தமிழ் சினிமாவின் பசலைப் பாடல்கள்

இது சத்தியமா இலக்கியப் பதிவு அல்ல தொடர்ந்து படிக்கவும்

               சங்க கால இலக்கியங்களில் பசலை நோய் என்ற ஒன்றை அடிக்கடி குறிப்பிடுவார்கள். திருக்குறளில் கூட காமத்துப்பாலில் ஒரு அதிகாரத்தில் தலைவனைக் காணாத தலைவியின் அழகு சுருங்கி பசலை நோய் பீடித்தது போல் ஆனாள் என்று கூறுவார்.ஆக பசலை நோய் என்பது தலைவனைப் பிரிந்த சோகத்தில் தலைவிக்கு வருவது. 
                 என்னுடைய விருப்ப பாடல்களின் ஒரு பெண் தனியாக பாடிய பாடல்களே அதிகமாக இருக்கும். அதாவது ஆண் காதல் தோல்வியில் பாடும் சோகப் பாடல்கள் போல பெண் ஆணை நினைத்துப் பாடும் மோகப் பாடல்கள், நன்றாக கவனியுங்கள் சோகம் அல்ல மோகம். இவ்வகையான பாடல்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவாகவே வந்துள்ளன. சமீபகாலமாக தமிழ் இளைஞர்கள் சோகப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவதால் இவ்வகையான பாடல்கள் வருவதே இல்லை. இவ்வகையான பாடல்களுக்கு என்னபெயர் என்று தெரியாமல் நானே தாந்தோன்றித்தனமாக பசலைப் பாடல்கள் என்று வைத்துவிட்டேன். இலக்கியவாதிகள் மன்னிக்க. 
                          எனக்கு விருப்பமான சில பசலைப் பாடல்களைக் காணலாம், இந்த பாடல்களின் வீடியோக்களை ஆவென்று பாராமல் உன்னிப்பாக வரிகளை கேளுங்கள், அனைத்தையும் கேளுங்கள் ஆண்மகனென்ற வீரியம் கொள்ளுங்கள்.

1) படம் - அரசாட்சி 
    பாடல் - இருபது வயசு ஆர்வக்கோளாறு
   பிடித்த வரிகள் - எல்லாமே
                                     
   
   
2) படம் - காதல் கவிதை 
    பாடல் - தத்தோம் தக்திமி தோம் இசை - இளையராஜா
 பிடித்த வரிகள் -யுத்தம் செய்யாத தேகம், நீ மோகம் கொண்டு போராடு,முத்தம் என்றாலே யாகம் வாய் நீரில் நீயும்  நீராடு

3)  படம்:  ஆயுதம் 
     பாடல்: ஆலகால விஷம் சிவனே இசை: தீனா
     பிடித்த வரிகள்: தப்பே இல்லா தப்பு, இது தசைகள் செய்யும் நட்பு 

4) படம் : சாமுராய் 
    பாடல் : ஒரு நதி ஒரு பெளர்ண்மி
   பிடித்த வரிகள் : என் தேகக் கதவு ஜன்னல் எல்லம் திறந்து வைக்கும் 
   ஒருவன், மேலும் பல


5) படம் : காதல் கோட்டை
    பாடல் : மொட்டு மொட்டு மலராத மொட்டு
    

6)படம்: கலாபக் காதலா
   பாடல் : தோகை விரித்தொரு ஆண்மயில்
   பிடித்த வரிகள்: நூறு பெண்களை நீயும் ஏற்றால் நூறில் ஒன்றென நானும்   வாழ்வேன்

Not but not least 
7) படம்: புதுப்பட்டி பொன்னுத்தாயி 
    பாடல் : ஊரடங்கும் சாமத்திலே இசை: இளையராஜா
    பிடித்த வரிகள் : எல்லாமே


பின்குறிப்புகள் : 1) இந்த வகையான பாடல்கள் போல் பல வந்தாலும் இப்பாடல் வரிகளுக்காக நான் இதை திரும்பத் திரும்ப கேட்பதுண்டு. இலை மறை காயாக ஒரு பெண் ஆண் மகன் மீதுள்ள ஆசையை, காதலை, காமத்தை வெளிப்படுத்தும் படியான பாடல்கள், எந்த இடத்திலும் பச்சையான அர்த்தம் வராமல் கவனமாக எழுதிய பாடலாசிரியர்க்ளுக்கு நன்றி
   2) இந்தியா இருக்குற நிலைமையில இப்பிடி ஒரு பதிவு தேவையாடா கோமுட்டினு நீங்க வினவலாம், இருபத்திநாலு மணி நேரமுமா இந்தியா வல்லரசாகிறதப் பத்தி யோசிக்கிறது, அப்பப்போ இப்பிடி எண்டெர்டெயினும் பண்ணனும்ணே!!!;-))

Wednesday, July 4, 2012

மகாநகர்- 1963 মহানগর -1963 -ஒரு பார்வை

              கடந்த ஒரு வாரமாகவே கழுகுகள் என்னைக் கொத்தி தின்பது போன்றதொரு கனவு, அப்படி ஒரு நள்ளிரவில் வந்த இந்த கழுகு வகையறாக் கனவால் சட்டென கண்விழித்தேன். தூக்கம் தொலைந்த அந்த இரவில் வேறென்ன செய்ய பதிவிறக்கம செய்து வைக்கப் பட்டிருந்த முப்பது GB  சத்யஜித ரே படங்களில் மகாநகரை திரையிட்டேன். இனி அதைப் பற்றிய சில குறிப்புகள்.
Premise: ஒரு பெரு நகரத்தில வாழும் நடுத்தரக் குடும்பத்தில் கணவன் சம்பாத்தியம் பற்றாமல் போய், தன் மனைவிய வேலைக்கு அனுப்பிவிடுவதால் அவனுக்கு ஏற்படும் மனத் தடுமாற்றங்களும், அவளுக்குள்  ஏற்படும் மாற்றங்களும்.
                             சில குறிப்புகள்:  மேற்கண்ட ஒரு வரி வாசகமே கதையின் கரு. சுப்ரதனின் குடும்பம் அழகானது, அழகான மகன், மிக அழகான மனைவி மற்றும் தன் தாய் , தந்தை, தங்கையுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறான். வங்கியில் கணக்கராக பணி புரிந்தும்,பகுதி நேர ஆசிரியனாக பணி புரிந்தும் அவனால் குடும்பச் சுமை தாக்குப் பிடிக்க இயலவில்லை. ஆதாலால் தன் மனைவியை வேலைக்கு அனுப்புவதை பற்றி சிந்தித்துக் கொண்டே சாலையில் நடந்து வருகிறான். பின் வரும் காட்சிகளில் அவன் தன் மனைவி ஆரத்தியிடம் உரையாடி அவளின் சம்மதத்தையும் பெறுகிறான். ஆனால் இந்த விஷயத்தில்  அவளின் மாமா, மாமிக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அவளின் மாமா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். கண்பார்வை மெல்ல மங்கிக் கொண்டே வருகிறது. கண்ணாடி வாங்க அடிக்கடி சுப்ரதனிடம் பணமும் கேட்டு வருகிறார். ஆனால் தற்போது சுப்ரதனால் தந்தைக்கு மூக்கு கண்ணாடி வாங்கித் தர முடியாத அளவிற்கு பணச்சிக்கல்.எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி ஆரத்தி வேலைக்கு செல்கிறாள். வீடு வீடாக சென்று துணிதுவைக்கும்  எந்திரத்தைப் பற்றி இல்லத்தரசிகளுக்கு டெமோ காட்டும் வேலை. இப்படி அவள் வேலைக்கு செல்வதால் அவளுக்கு கிடைக்கும் அனுபவமும், சமூக விழிப் புணர்வுமே  மீதிக்கதை.
                           அவள் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு ஆங்கிலேயப்  பெண்மணியும் அதே வேலைக்கு சேர்கிறாள், இருவரும் நெருங்கிய தோழிகளாகிறார்கள். அவள் இவளுக்கு உதட்டு சாயம் பூசி விடுகிறாள். ஆரத்தி கூச்சப் பட்டு அதை அழித்து விடுகிறாள். பின்வரும் காட்சியில், யாருமில்லாத தனிமையில் தனக்கு உதட்டு சாயம் பூசி அழகு பார்க்கும் காட்சியில், ரே ஒரு இந்தியப் பெண்ணின் அழகான நாணத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதே நேரம் அவளின் கைப்பையில் அந்த உதட்டுச் சாயத்தை பார்த்து பதறும் சுப்ரதனின் நிலையையும் தெளிவாக காட்சிப் படுத்தி இருக்கிறார்.
                        வேலையை மிகவும் ரசித்து செய்கிறாள், இவளால் நிறை லாபம் அடைகிறது கம்பெனி. ஆக சம்பளத்துடன் தாங்கள் விற்கும் ஒவ்வொரு எந்திரத்திற்கும் கமிசன் கேட்கலாம் என்று ஆரத்தியும் அவள் தோழிகளும் முடிவெடுக்கிறார்கள். தங்களின் பிரதிநிதியாக அந்த வெள்ளைக்கார பெண்மணியை தேர்வு செய்கிறார்கள், ஏனென்றால் இது அவளின் யோசனையே. ஆனால் முதலாளிக்கு இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆரத்தியை தனியாக் அழைத்து இத்தனை வங்காள பெண்மணிகள் இருக்கையில் ஒரு வெளிநாட்டு பெண்ணை பிரதிநிதியாக அனுப்பியது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று பொடி போடுகிறான். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அந்த வெள்ளைக் கார பெண்மணி சில நாட்கள் விடுப்பு எடுக்கிறாள். இதைக் காரணமாக காட்டி அவளின் வேலையையும் ஆரத்தியின் தலையில் கட்டுகிறான் முதலாளி. அவளின் விடுப்பு நாட்கள் தொடர தொடர இவளுக்கு வேலைப் பளு கூடுகிறது. ஆக தன் சம்பளத்தை இரட்டிப்பாக்குமாறு கேட்கிறாள். அதற்கு முதலாளி, இரட்டிப்பு சம்பளத்திற்கு பதில் 50% சம்பள உயர்வும் , பதவி உயர்வும் தருகிறேன் என்று சொல்கிறேன். ஆனால் அவள் பார்க்கும் வேலை இருவர் பார்க்கும் வேலைக்குச் சமமானது. இப்படிப் பல இடங்களில் இலை மறை காயாக கம்யூனிசச் சித்தாந்தங்களை எளிய மக்களுக்கு புரியும் வகையில் காட்டுகிறார் ரே.
              முடிவில் அந்த வெள்ளைக் கார பெண்மணியின் மேல் இருந்த வெறுப்பையெல்லாம் சேர்த்து வைத்து அவளை ஒரு வேசி என்று திட்டி வேலையை விட்டு அனுப்புகிறான் முதலாளி. அவள் நடந்ததை ஆரத்தியிடம் கூறி அழுகிறாள். இது இங்கு நடந்து கொண்டிருக்கையில் சுப்ரதனின் வங்கி திவாலாகிறது. வேலையிழக்கிறான். மனம் நொந்து ஆரத்தியின் அலுவலகத்துக்கு வேலை தேடி வருகிறான். ஆனால் ஆரத்தியோ தன் முதலாளியிடம் சென்று அந்த வெள்ளைக்காரப் பெண்மணியிடம் மன்னிப்பு கேட்குமாறு வாக்கு வாதம் செய்கிறாள். விவகாரம் உக்கிரமடைந்து தன் வேலையை துச்சமென தூக்கி எறிகிறாள். மெல்லப் படியிறங்கி வருகையில் கணவனைப் பார்க்கிறாள் , அவன் நெஞ்சில் முகம் புதைத்து நடந்ததை கூறி அழுகிறாள். அவளும் வேலையை விட்டதை நினைத்து அவன் அதிர்ச்சி அடைகிறான். அவள் அவன் கண்களை உற்று நோக்கி தன்னை மன்னிக்குமாறு கேட்கிறாள். அதற்கு அவன் இந்த மாநகரமே நமக்கானது,  நீயென் ராணி உன்னை  விட்டால் எனக்கு வேறு யார் என்று ஆறுதல் சொல்கிறான். பின் அவர்கள் இருவரும் அந்த பெரு நகரத்தின் உயர்ந்த மாளிகைகளுக்கிடையில் தங்களுக்கென ஏதாவதொரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புறப் படுகிறார்கள்.
                 இப்படம் முடிந்ததும், ஏன் கழுகுகள் என்னை கொத்தி தின்பது போல் கனவு வந்தது என்பதை உணர்ந்துகொண்டேன், இப்பொழுதெல்லாம் அந்தக் கனவு வருகையில் தடிகொண்டு என்னைக் கொத்திய கழுகை விரட்டி அடிக்கிறேன் எனகென்று ஒரு மகாநகர் இருக்கும் நம்பிக்கையில்.
 

Tuesday, July 3, 2012

ஒரு ஆணாதிக்கவாதியின் வாக்குமூலம் - Confessions of a ஆணாதிக்கவாதி

                                  இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலும் எழுதுவதற்காக ஆணாதிக்கதிற்கு நிகரான ஆங்கிலச் சொல்லை கூகிளில் தேடினேன். I have found some approximate words related to it, not an exact word. அப்படியென்றால் இந்த வார்த்தையும், இழிநிலையும் என்னைச் சுற்றி உள்ள சமூகத்தில் தான் நடைமுறையில் உள்ளனவா?. இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது நண்பர் ஒருவரின் முகநூல் அப்டேட்டே! அதில் ஒரு நடிகையை வேசியாக சித்தரித்து எழுதியிருந்தார். அவரைப் பற்றி குறை சொல்லப் போவதேயில்லை இந்தப் பதிவு. இது ஆணாதிக்கவாதியான என் வாக்குமூலம் அவ்வளவே!! ஒரு பெண்ணை இழிவாக பேச அவள் பெண்ணென்ற ஒரு தகுதி போதும், அதுவும் அவள் நடிகையாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். உண்மையிலேயே ஒரு பெண்ணை உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் அணு அணுவாக ரசிப்பவன் ஒரு ஆணே. தன்னால் அடைய முடியாத ஒரு பெண்ணைப் பற்றி தரக் குறைவாக பேசும்போது அவளை வன்மையாக புணர்ந்தது போல ஒரு காமநிலைப் பரவசம் ஏற்படும், இதை ஒரு ஆணாக நானும் உண்ர்ந்திருக்கிறேன். என்னுடைய இயலாமையை ஆணாதிக்கம் என்ற பெயரில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு நடிகையோ ஒரு பெண்ணோ தரக் குறைவான ஆடை உடுத்தி வந்தால் கலாச்சாரத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசுவேன் ஆனால் யாருமற்ற தனிமையில் எனக்கு பிடித்த ந்டிகையை நினைத்து என்னை நானே சுயமாக கற்பழித்துக் கொள்வேன். சில பெண்கள் என்னிடம் மிகுந்த கர்வம் கொண்டு நடந்ததுண்டு. அவர்களைப் ப்ழிவாங்குவதற்காக ஆணாதிக்கத்தை நான் கையில் எடுத்ததுண்டு. குறிப்பாக அழகான பெண்கள் எல்லோருமே என்னைப் பொறுத்தவரை திமிர் பிடித்தவர்களே. இன்னும் சொல்லப் போனால் எந்த ஒரு பெண்ணாலும் காதலிக்கப் படாதவனே ஆணாதிக்கத்தில் அதிகமாக ஈடுபடுகிறான். ஒரு தடவை கூட காதலிக்காதவன் காதல் சோகப் பாடல்களையோ, பெண் எதிர்ப்பு பாடல்களையோ சத்தமாகப் பாடுகிறான், சமீபகாலமாக இது போன்ற பாடல்கள் அதிக அளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது எல்லாம் என் இயலாமைக்கு ஆறுதல் தருவது போன்று இருந்தாலும் அது வியபார தந்திரம் என்று ஏன் எனக்கு தெரியவில்லை.
           பெண்களிடம் ஒரு வேண்டுகோள் ஆணாதிக்கவாதிகளான எங்களிடம் கோபம் கொள்ளவேண்டாம், முடிந்தால் சிறிது பரிதாபம் காட்டுங்கள். ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் மனநிலை பாதிக்கப்பட்டே, நான் ஆணாத்திக்கவாதியாக நடந்து கொள்கிறேன். இந்தப் பதிவை எழுதி முடிக்கையில் என் காயங்களின் சீழ் வடிக்கப்ப்ட்டு குருதி வழிந்தது போன்றொரு உண்ர்வு. 

Monday, July 2, 2012

One Flew over the cuckoo's Nest(1975) சில குறிப்புகள்:


                        என் மனம் காமத்தின் பால் ஈர்க்கப்பட்ட நள்ளிரவுகளில், வேறு எதைப் பற்றியும் என் நினைவை திசை திருப்ப முடியாத இக்கட்டான சூழலில் என் பொறுமையை சோதிப்பதற்காக சில திரைப்படங்களை பார்ப்பது வழக்கம். படம் மிகவும் தொய்வாகச் சென்றால் என் மனக் குரங்கு மீண்டு காமக் கிளைக்கே தவ்வி விடும். அப்படி ஒரு சூழலில் இந்தப் படத்தை பார்க்க தொடங்கினேன். ஆரம்பம் முதல் ஒவ்வொரு நொடியும் தன் அபார நடிப்பால் என் கவனத்தை முழுமையாக அவர் பக்கம் ஈர்த்துவிட்டார் ஜாக் நிக்கல்சன். அவரின் ஷைனிங் படத்தைப் பார்த்து ஓரிரு நாட்கள் கண்ணாடி முன் அவரைப் போல் செய்து பார்த்ததுண்டு. பின வருவது One Flew over the cuckoo's Nest சில குறிப்புகள்:

படத்தின் Premise: புத்திசாலித்தனமான , வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கக் கூடிய ஒருவன் மனநல காப்பகத்தில் அடைக்கப் பட்டால் என்னாகும்.

குறிப்புகள் : சில திருட்டு, கொலை, வழக்குகளில் அடிக்கடி சிக்கி சிறை செல்லும் மெக், ஒரு மாற்றத்திற்காக இம்முறை மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் நடித்து மனநல காப்பகத்தில் அடைக்கப் படுகிறான். அங்கு அவனால் ஏற்படும் மாற்றங்களே முழுக்கதை. அவனுடைய செய்முறைகளை அங்கிருக்கும் மற்ற புத்தி சுவாதீனமற்றவர்களுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர்களை சிந்திக்க வைக்கிறான், கூடைப்பந்து விளையாடச் செய்கிறான், மீன்பிடிக்க திருட்டுத் தனமாக அழைத்துச் செல்கிறான். மற்றவர்களால் பெரிதும் நேசிக்கப் படுகிறான். குறிப்பாக சீஃப் என்று அழைக்கப்படும் செவ்விந்தியனுக்கு நெருங்கிய நண்பனாகிறான். இப்படி இவனால் செய்யப் படும் மாற்றங்கள் காலங்காலமாக தாங்கள் பின்பற்றி வரும் மருத்துவ முறைகளுக்கு எதிராக உள்ளதென சாடுகிறார் உயர் நிலைச் செவிலி ரேச்சல் மற்றும் அங்குள்ள சில மருத்துவர்கள். இப்படி ஒவ்வொரு நொடியும் நமக்கும் ஏதாவது கற்றுத்தரும் மெக்கிற்கு ஏற்படும் சோகமான முடிவே மீதி திரைப்படம். முழுக்கதையும் என்னால் விளக்க இயலாது, அது ஒரு நல்ல ரசிகனுக்கோ விமர்சகனுக்கோ அழகல்ல. முடிந்தால் ஒரு இரண்டு மணி நேரம் ஒதுக்கி இப்படத்தை பாருங்கள். 
                   இப்படத்தின் Premise ஐ தழுவியே Shasank Redemption எடுத்திருக்கக் கூடும். நமது இந்திய சினிமாக்களில் ஏகப் பட்ட படங்கள் இந்தப் படத்தின் பாதிப்பால் எடுக்கப்பட்டவை. அப்படி எடுத்தவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். ஏனெனில் இப்படத்தை தழுவி எடுக்கப்படம் ஒவ்வொன்றும் மனித நேயத்தை வளர்க்க நாம் எடுக்கும் முயற்சியே. உதாரணமாக, முன்னா பாய் MBBS, அறையெண் 305 கடவுள், முக்கியமாக போராளி போன்ற படங்களுக்கு நன்றி.
                   படம் முடிவடைகையில் நம்முள் உழன்று கெடுக்கும் பைத்தியத்தை தெளிய வைத்து விடுகிறார் இயக்குநர் மிலோஸ் ஃபோர்மன். இவரிம் அமேதியஸையும் முடிந்தால் பார்க்கவும். 
                

Sunday, July 1, 2012

கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் : பச்சையான படத்திற்கு பச்சையான விமரிசனம்

அன்பார்ந்த தமிழ்க் குடிமக்களே வாய் நிறைய டமிழை புகழ்ந்து தள்ளி விட்டு ஆங்கிலப் படங்களையும், இந்தி திரைப்படங்களையும் வாயில் எச்சில் ஒழுக பார்க்கும் மானங்கெட்ட தமிழ் வீரப் பரம்பரைகளே!!! நீங்கள் வாய் நிறையப் புகழ அனுராக் காஷ்யப்  ஒரு படம் எடுத்துள்ளார் கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் என்று. ஆரண்ய காண்டம், புதுப்பேட்டை, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் இல்லாதது புதிதாக இப்படத்தில் இருந்தால் நீங்கள் வாய் நிறைய புகழ்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. உதாரணமாக நண்பர் தியாகராஜன் குமாரசாமி ஆரண்ய காண்டத்தில் ஒப்பன ஓலி, கண்டார ஓலி, தூமியக் குடிக்கி என்று வழக்கொழிந்த தமிழ் கெட்ட வார்த்தை சொற்களை பயன்படுத்தினார், அப்பொழுதெல்லாம் அட ராமா என்று காதை பொத்திய தமிழன், அனுராக் காஷ்யப் இப்படத்தில் மாதர் சோத், போஸ்டீகே, சூத்தியா என்று வசைச் சொற்களை பயன் படுத்தியபோது , அபாரம் உண்மைக்கு மிக அருகில் சென்று படம் பிடித்துள்ளார் என்று புகழ்வது இலை நிறைய மனிதக் கழிவை போட்டு உண்பதற்க்கு சமமாகும். மேலும் இப்படம் முடியும் தருவாயில் அப் கஹானி பாக்கி ஹை என்று போடுகிறார்கள் அதாவது கதை இன்னும் இருக்கிறது என்று அர்த்தம். இந்த ட்ரெண்டை ராம் கோபால் வர்மா எப்பொழுதோ ரத்த சரித்திரத்தில் பயன் படுத்திவிட்டார்.  இரண்டாம் பாகத்தில் என்ன காட்டப் போகிறீர்கள், சர்தார் கானின் குலக் கொழுந்துகள் ரபீந்திர சிஙகை பழிவாங்கப் போகிறார்கள், இதைத்தானே ராம் கோபால் வர்மா ரத்த சரித்திரத்தில் சூரி ,பரட்டல் ரவியை பழிவாங்குவதைப் போல் காட்டினார். 
                                               மேலும் கதையின் நாயகன், சர்தார் கான் ஏற்கனவே ஒரு மனைவி(நக்மா) இருந்த போதும், துர்கா என்றொரு வங்காளப் பெண்மணியின் மீது காம மோகத்தின் பால் கைவத்து விடுகிறான். இதை ஏற்கனவே புதுப்பேட்டையில் காட்டிவிட்டனர், நான் தனியாக விளக்கதேவையில்லை.
இந்தப் படம் ரத்த சரித்திரம், புதுப் பேட்டை, ஆரண்ய காண்டம் மற்றும் சுப்பைரமணியபுரத்தின் கலவையே. இப் படம் வட இந்தியனுக்கு ஒரு புதிய அனுபவம் ஆனால் இந்த ஃபார்முலாக்களையெல்லாம் தமிழன் என்றோ பயன்படுத்திவிட்டான். So Mr, Anuraag there is nothing special in this film to attract south Indian people. so please serve your shit to your peoples.  மேலும் படத்தின் பல இடங்களில் பழைய பாடல்களை பயன் படுத்தியுள்ளார்கள், இந்த ஃபார்முலாவும் தமிழனுக்கு தெரிந்ததே!!!. படத்தில் ஒரு ரயில் பயணத்தில் சர்தார் கான் இரண்டாவது மகன் துப்பாக்கி வாங்கிக்  கொண்டு வருகையில் , 80களில் பாப்புலராக இருந்த ஹிப்பிகளை பயன் படுத்தி ஒரு பாட்டு எடுத்திருந்தது வெகுவாக ரசிக்க வைத்தது. வேறொன்றும் புதிதாக படத்தில் இல்லை. தமிழர்கள் இந்தப் படத்தை பார்ப்பதற்கு முன் ஆரண்யகாண்டம், சுப்பிரமணியபுரம், மற்றும் புதுப்பேட்டை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படங்களையெல்லாம் ஒன்றுமில்லை என்று இகழ்ந்துவிட்டு இப்படத்தை புகழும் அரைவேக்காடுகள் நல்ல விமர்சகனாக அல்ல, நல்ல ரசிகனாக கூட ஏற்றுக்கொள்ளப் படமாட்டான். 
   நான் மேலே பதிவிட்ட கருத்துகள் அனைத்தும் தமிழ் சினிமா பார்த்து வளர்ந்தவன் என்ற உயரிய மனப்பான்மையில்( Superiority Complex) பதிவிட்டது. உங்களது மேலான கருத்துகளை என்னுடன் பச்சையாக பகிர்ந்து கொள்ளலாம். இப்படம் இந்திய சினிமாவின் மற்றுமொரு கேங்ஸ்டெர் மூவி அவ்வளவே

         PS: தமிழில் பேசினால் அது கெட்ட வார்த்தை அதையே ஆங்கிலத்திலோ இந்தியிலோ பேசினால் அது நவநாகரீகம். போங்கடா சூத்தியாஸ்!!!!!!!!!

சொலவடை