இன்று உலக புகையிலை தினம், இன்று மட்டும் புகை பிடிக்க வேண்டாம் என்று
டிவிட்டரிலும், முகநூலிலும் மாறி மாறி மக்கள் தகவல் பரிமாறிக்
கொண்டிந்தார்கள் மக்கள். எனக்கொன்றும் அவசியம் இல்லை அதை கடைபிடிக்க. உச்சி
வெயில் மத்தியம இரண்டு மணியளவில் கடைக்கு சென்று ஒரு கிங்க்ஸ் வாங்கி பத்த
வைத்துக் கொண்டேன். தணலென எறிந்த வெயிலை மேலும் சூடாக்கியது என் புகை.
என்னைக் கண்டு ஒரு நாய் விலகிச் சென்றது. கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு
பிச்சை கேட்கும் பிச்சைக்காரி என்னை மட்டும் தவிர்த்துச் சென்றாள். நான்
எதையும் கண்டு கொள்ளாதவனாய் வானத்தை நோக்கி வட்டமாய் புகை விட்டுக்
கொண்டிருந்தேன். எனக்கு என்ன ஆனதென தெரியவில்லை, சட்டென நான் ஏன் புகை
பிடிக்கிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் சமுதாய நோக்கத்தோடு சில
கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியதுண்டு. ஆனால் என்னைக்குமே நான் அதை
பின்தொடந்து நடந்ததில்லை. என்னால் இதுவரை இந்த உலகத்திற்கு எந்த பயனும்
கிடைத்ததில்லை, மாறாக நான் ஊதி தள்ளிக் கொண்டிருக்கும் இந்தப புகை சுற்று
சூழலை மாசுபடுத்துவதாகவே அமைகிறது. என் தனிமை என்னை இவ்வாறெல்லாம்
யோசிக்கக் செய்தது. ஊருக்கு மட்டும்தாண்டா நீங்கெல்லாம் உபதேசம் பண்ணுவீங்க
என்று எள்ளி நகையாடியது என் மனசாட்சி. அடித்துக் கொண்டிருந்த சிகரட்டை
அப்படியே கீழே போட்டேன், பாதி மீதம் இருந்தது. இனிமேல் சிகரெட் பிடிக்கப்
போவதில்லை என்றும் அப்படி பிடித்தால் எழுதவே போவதில்லை என்றும் உறுதி
எடுத்துக் கொண்டேன். நீங்கள் கேட்கலாம் ஏண்டா நாயே நீ எழுதலேன்னா பெட்ரோல்
விலை கொறஞ்சிடப் போகுதா இல்ல இந்தியாதான் வல்லரசாகிடப் போகுதான்னு?.
உண்மைதான் நான் எழுதாமல் இருந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்
போவதில்லை. ஆனால் அது என்னை பாதிக்கும் . ஒருவேளை என் மனநிலை கூட
பாதிப்படையலாம். ஆகவே நான் எடுத்த முடிவு முழுக்க சுயநலமானதே. நான் இதை
எழுதுவது என் உணர்ச்சியின் வெளிப்பாடே தவிர யாரையும் திருத்துவதற்காகவோ
கருத்து சொல்வதற்காகவோ அல்ல. உலகத்தை திருத்த நான் ஒன்றும் ஏசுவோ புத்தனோ
அல்ல. என்னை நானே திருத்த ,உலகத்திற்கு பயனுள்ளவனாக மாற முயற்சிக்கும்
மனிதன், மிக மிக மிக சாதாரணமான மனிதன். நான் அடித்துப் போட்ட அந்த
சிகரெட்டே என் கடைசிப் பாதி சிகரெட்டாக இருக்க கடவதாக. இதுவரை நான் ஏதாவது
மரம் நட்டிருப்பேனா? ஒரு சாதாரண பறவையின் எச்சம் கூட விதை தூவி இந்த
மண்ணிற்கு உபயோகம் உள்ளதாக இருக்கிறது. ஆறறிவு படைத்த நான் அந்த பறவையின்
எச்சத்தை விட கேவலமானவனே. என்ன செஞ்சிருக்கிறேன் இதுவைரைக்கும். பூமி
ஏளனமாக என்னைப் பார்த்து சொன்னது நாயே நீ எதுவுமே செய்யாம இருந்திருந்தாலே
பூமி நல்லா இருந்திருக்கும். மனிதக் கழிவை மிதிக்கும் போது மேலெழும் அதே அறுவறுப்பு என்னிலும் இப்போது.
அதுசரி அதிர்ச்சி தகவல்னு சொன்னியே அது என்ன? இன்னுமாயா உங்களுக்கு புரியல நான் சிகரெட்ட விட்டுட்டேன்.
பின் குறிப்பு : இது எனக்காக நான் எழுதிய பதிவு. நான் என்று வரும்
இடங்களிலெல்லாம் நீங்கள் உங்களை நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல
அருமை தோழரே...மிக அற்புதமான பதிவு....வாழ்த்துக்கள்...:)
ReplyDelete