சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Saturday, October 25, 2014

பெயரில் என்ன இருக்கிறது?

                      பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில்தான் எல்லாமே இருக்கிறது எனலாம். நமக்கு பிடித்த ஒருவரின் பெயரைக் கொண்ட எல்லோருமே நமக்கு பிடித்தவர்களாகிறார்கள் என்கிறது உளவியல். அத்தைகய சிறப்பு மிக்கது பெயர். பெயர் சொல்லும் வாரிசே பெயரன் ,பேரன் என்றானது. கனிகளுக்கும், பூக்களுக்கும் , ஊர்களுக்கும், தெருக்களுக்கும் பண்டையத் தமிழன் வைத்த பெயரை உற்றி நோக்கி ஆராய்ந்தால் அதன் வரலாறே வெளிவரும். அவ்வகையில் பெயர், ஒரு வரலாற்றையே உள்ளடக்கி இருக்கிறது. 
              எனக்கு பிடித்தமானவர்களின் பெயரை அடிக்கடி மனதால் உச்சரித்துக் கொண்டும், யாரும் இல்லாத தனிமையில் சத்தமிட்டு உச்சரித்தும், அதை எழுதிப் பார்த்தும் குதூகலித்துக் கொண்டதுண்டு. பெயர் என்பது ஒரு நினைவு, ஒன்றை மறக்காமலிருக்க நம் மனதிற்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் புக்மார்க். புத்தகங்களுக்கு இடையில் வைக்கப்படும் மயில் இறகைப் போல. பெயர்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை.
             இவ்வளவு ஏன் கணவனுக்கும், மனைவிக்குமான உறவில் முதல் ஊடலை ஏற்படுத்துவதே இந்தப் பெயர்தான். தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதிலிருந்து அது ஆரம்பிக்கிறது. அது என்னவோ தெரியவில்லை, தமிழுக்கு அந்நியமான ஷ, ஸ, வில் தற்போது பல தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை பார்க்க முடிகிறது. ஒரு மொழியை வாழ வைப்பத்தில் பெரும் பங்கு அம்மொழியில் வைக்கப் பட்ட, அம்மொழியைத் தாங்கி நிற்கும் மனிதர்களின் பெயர்களே என்பது என் கருத்து.
             பெருகி வரும் சமசுகிருத பெயர்கள் பெரும் அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. ஆட்டு மந்தையாய் தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு பெயரிடுவது அடிமுட்டாள்த்தனமாய் படுகிறது. பெயர் ஒருவனுக்கு/ ஒருவளுக்கு கம்பீரத்தை தர வேண்டாமா? வடநாட்டு இனிப்புகளின் பெயரையெல்லாமா அர்த்தம் தெரியாமல் வைப்பது. உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைப்பது என்பது பற்றிச் சொல்ல எனக்கு தகுதியில்லை. ஆனால் அதைப் பற்றி யோசித்து செயல்பட உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. 
                    எனக்குத் தெரிந்த ஒரு சில வழிமுறைகளை சொல்கிறேன் முடிந்தால் பின்பற்றுங்கள்,
1. முடிந்தவரை தமிழில் வையுங்கள். 
2.அரசன், கவிஞர், புலவர்களென்று தனித்துவம் வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டில் பல்லாயிரக் கண்க்காணோர். அப்படி யாரேனும் ஒருவர் உங்களைக் கவர்ந்தால் அவரின் பெயரை வையுங்கள். 
3.இன்றைய காலகட்டத்திற்கு சீத்தலை சாத்தானார், ஆலங்குடி வங்கனார், மாற்பத்தி போன்ற பெயர் எடுபடாதுதான் ஆனால் அறிவுடை நம்பி , ஆண்டாள், இளவெயினி என்பனவை எக்காலத்துக்கும் இனிமையானவை.
4. இப்படித்தேடி கண்டுபிடிப்பதில் நீங்களும் சில நல்ல புலவர்களையும் அவர்கள் பாடல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம், பிற்காலத்தில் உங்கள் குழந்தைக்கும் அதன் பெயர் காரணத்தைக் கூறி வளர்க்கலாம். எல்லாக் குழந்தைகளும் தன் பெயருக்கான காரணத்தை பெருமிதத்தோட மற்றவர்க்கு கூறி வளரவே ஆசைப்படுவார்கள். அவர்களின் தன்னம்பிக்கையும் பெருகும்.
5. பெண்குழந்தைகளுக்கு பூக்களின் பெயர்களை வைக்கலாம்,.
6. சரித்திர/ இதிகாச தலைவன்/ தலைவிகள் பெயர் ஏராளம். சீவகன், கோவலன், போன்றவை
7. அல்லது உங்கள் மூதாதையரின் பெயர் கலந்து குமார் கருப்பையா, தம்பி அண்ணாமலை , வெற்றி வாசகம், கோதைத் திருமகள் போன்றவையும் மிடுப்பானவையே.


கடைசியாக ஒன்று  பெயரும், அதன் அர்த்தங்களுமே ஒரு வரலாற்றை தாங்கி நிற்கும் தூண் என்பது என் கருத்து, உங்களது குழந்தைகளை எந்தவித எழுத்துப் பிழைகளும் இல்லாமல் வாயாற அழைக்க தாய்மொழிப் பெயரே சிறந்தது. அந்நிய மொழியில், அர்த்தமே தெரியாமல், எந்தவித பின்புலமும் இல்லாத, வெறும் ந்யூமாராலிஜிக்காக பெயர் வைப்பது கடைந்தெடுத்த மாங்காய்த் தனமென்றும், அப்படிப்பட்ட மாங்காய்களில் நீங்களும் ஒருவராகிவிடக் கூடாது என்பதற்கே இந்தப் பதிவு. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போம், தன்மானம் காப்போம், தன்னம்பிக்கை மிக்க எதிர்காலத்தை உருவாக்குவோம்.

-- மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி

No comments:

Post a Comment

சொலவடை