என் தாடைக்கும், காது மடல்களுக்குமான
ஏகப்பட்ட எறும்புக் கிலோமீட்டர்களை
நடந்து கடந்து கொண்டிருந்தது ஒரு சிற்றெறும்பு.
தட்டிவிட கைகள் தொக்கி நின்றாலும்,
சிந்தனை மறத்து மறந்தது.
என் கன்னங்களில் அடிமேல் அடியெடுத்து,
ஆனந்தமாய் ஊர்ந்த்து கொண்டிருந்தது, எறும்பு.
என் கன்னக்குழிதாண்டி வருகையில்
சிறுதாடி மயிர் இடறி பாதைமாறியது,
சுற்றிச் சுழலி ஒரு வட்டமடித்து, மீண்டும்
காதுமடல் நோக்கி தன் பயணத்தை திருப்பியது.
ஊர்தலின் சுகத்தை எறும்பும்,
ஊரப்படும் பொருளின் ஏகாந்ததை நானும்
ஒரு சேர அனுபவிக்கையில் என் காதுமடல்
வந்து சேர்ந்தது அந்த்ச் சிவப்பு சிப்பாய்.
மெல்ல என் காதுகளில் அமர்ந்து
ரகசியம் சொல்வது போல் சொன்னது
கவிதைக்கு நடையென்றேதும் இல்லை
ஊர்தலும், ஊறித் திளைத்தலும் மட்டுமே உண்டென்றது.
No comments:
Post a Comment