சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, July 4, 2012

மகாநகர்- 1963 মহানগর -1963 -ஒரு பார்வை

              கடந்த ஒரு வாரமாகவே கழுகுகள் என்னைக் கொத்தி தின்பது போன்றதொரு கனவு, அப்படி ஒரு நள்ளிரவில் வந்த இந்த கழுகு வகையறாக் கனவால் சட்டென கண்விழித்தேன். தூக்கம் தொலைந்த அந்த இரவில் வேறென்ன செய்ய பதிவிறக்கம செய்து வைக்கப் பட்டிருந்த முப்பது GB  சத்யஜித ரே படங்களில் மகாநகரை திரையிட்டேன். இனி அதைப் பற்றிய சில குறிப்புகள்.
Premise: ஒரு பெரு நகரத்தில வாழும் நடுத்தரக் குடும்பத்தில் கணவன் சம்பாத்தியம் பற்றாமல் போய், தன் மனைவிய வேலைக்கு அனுப்பிவிடுவதால் அவனுக்கு ஏற்படும் மனத் தடுமாற்றங்களும், அவளுக்குள்  ஏற்படும் மாற்றங்களும்.
                             சில குறிப்புகள்:  மேற்கண்ட ஒரு வரி வாசகமே கதையின் கரு. சுப்ரதனின் குடும்பம் அழகானது, அழகான மகன், மிக அழகான மனைவி மற்றும் தன் தாய் , தந்தை, தங்கையுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறான். வங்கியில் கணக்கராக பணி புரிந்தும்,பகுதி நேர ஆசிரியனாக பணி புரிந்தும் அவனால் குடும்பச் சுமை தாக்குப் பிடிக்க இயலவில்லை. ஆதாலால் தன் மனைவியை வேலைக்கு அனுப்புவதை பற்றி சிந்தித்துக் கொண்டே சாலையில் நடந்து வருகிறான். பின் வரும் காட்சிகளில் அவன் தன் மனைவி ஆரத்தியிடம் உரையாடி அவளின் சம்மதத்தையும் பெறுகிறான். ஆனால் இந்த விஷயத்தில்  அவளின் மாமா, மாமிக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அவளின் மாமா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். கண்பார்வை மெல்ல மங்கிக் கொண்டே வருகிறது. கண்ணாடி வாங்க அடிக்கடி சுப்ரதனிடம் பணமும் கேட்டு வருகிறார். ஆனால் தற்போது சுப்ரதனால் தந்தைக்கு மூக்கு கண்ணாடி வாங்கித் தர முடியாத அளவிற்கு பணச்சிக்கல்.எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி ஆரத்தி வேலைக்கு செல்கிறாள். வீடு வீடாக சென்று துணிதுவைக்கும்  எந்திரத்தைப் பற்றி இல்லத்தரசிகளுக்கு டெமோ காட்டும் வேலை. இப்படி அவள் வேலைக்கு செல்வதால் அவளுக்கு கிடைக்கும் அனுபவமும், சமூக விழிப் புணர்வுமே  மீதிக்கதை.
                           அவள் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு ஆங்கிலேயப்  பெண்மணியும் அதே வேலைக்கு சேர்கிறாள், இருவரும் நெருங்கிய தோழிகளாகிறார்கள். அவள் இவளுக்கு உதட்டு சாயம் பூசி விடுகிறாள். ஆரத்தி கூச்சப் பட்டு அதை அழித்து விடுகிறாள். பின்வரும் காட்சியில், யாருமில்லாத தனிமையில் தனக்கு உதட்டு சாயம் பூசி அழகு பார்க்கும் காட்சியில், ரே ஒரு இந்தியப் பெண்ணின் அழகான நாணத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதே நேரம் அவளின் கைப்பையில் அந்த உதட்டுச் சாயத்தை பார்த்து பதறும் சுப்ரதனின் நிலையையும் தெளிவாக காட்சிப் படுத்தி இருக்கிறார்.
                        வேலையை மிகவும் ரசித்து செய்கிறாள், இவளால் நிறை லாபம் அடைகிறது கம்பெனி. ஆக சம்பளத்துடன் தாங்கள் விற்கும் ஒவ்வொரு எந்திரத்திற்கும் கமிசன் கேட்கலாம் என்று ஆரத்தியும் அவள் தோழிகளும் முடிவெடுக்கிறார்கள். தங்களின் பிரதிநிதியாக அந்த வெள்ளைக்கார பெண்மணியை தேர்வு செய்கிறார்கள், ஏனென்றால் இது அவளின் யோசனையே. ஆனால் முதலாளிக்கு இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆரத்தியை தனியாக் அழைத்து இத்தனை வங்காள பெண்மணிகள் இருக்கையில் ஒரு வெளிநாட்டு பெண்ணை பிரதிநிதியாக அனுப்பியது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று பொடி போடுகிறான். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அந்த வெள்ளைக் கார பெண்மணி சில நாட்கள் விடுப்பு எடுக்கிறாள். இதைக் காரணமாக காட்டி அவளின் வேலையையும் ஆரத்தியின் தலையில் கட்டுகிறான் முதலாளி. அவளின் விடுப்பு நாட்கள் தொடர தொடர இவளுக்கு வேலைப் பளு கூடுகிறது. ஆக தன் சம்பளத்தை இரட்டிப்பாக்குமாறு கேட்கிறாள். அதற்கு முதலாளி, இரட்டிப்பு சம்பளத்திற்கு பதில் 50% சம்பள உயர்வும் , பதவி உயர்வும் தருகிறேன் என்று சொல்கிறேன். ஆனால் அவள் பார்க்கும் வேலை இருவர் பார்க்கும் வேலைக்குச் சமமானது. இப்படிப் பல இடங்களில் இலை மறை காயாக கம்யூனிசச் சித்தாந்தங்களை எளிய மக்களுக்கு புரியும் வகையில் காட்டுகிறார் ரே.
              முடிவில் அந்த வெள்ளைக் கார பெண்மணியின் மேல் இருந்த வெறுப்பையெல்லாம் சேர்த்து வைத்து அவளை ஒரு வேசி என்று திட்டி வேலையை விட்டு அனுப்புகிறான் முதலாளி. அவள் நடந்ததை ஆரத்தியிடம் கூறி அழுகிறாள். இது இங்கு நடந்து கொண்டிருக்கையில் சுப்ரதனின் வங்கி திவாலாகிறது. வேலையிழக்கிறான். மனம் நொந்து ஆரத்தியின் அலுவலகத்துக்கு வேலை தேடி வருகிறான். ஆனால் ஆரத்தியோ தன் முதலாளியிடம் சென்று அந்த வெள்ளைக்காரப் பெண்மணியிடம் மன்னிப்பு கேட்குமாறு வாக்கு வாதம் செய்கிறாள். விவகாரம் உக்கிரமடைந்து தன் வேலையை துச்சமென தூக்கி எறிகிறாள். மெல்லப் படியிறங்கி வருகையில் கணவனைப் பார்க்கிறாள் , அவன் நெஞ்சில் முகம் புதைத்து நடந்ததை கூறி அழுகிறாள். அவளும் வேலையை விட்டதை நினைத்து அவன் அதிர்ச்சி அடைகிறான். அவள் அவன் கண்களை உற்று நோக்கி தன்னை மன்னிக்குமாறு கேட்கிறாள். அதற்கு அவன் இந்த மாநகரமே நமக்கானது,  நீயென் ராணி உன்னை  விட்டால் எனக்கு வேறு யார் என்று ஆறுதல் சொல்கிறான். பின் அவர்கள் இருவரும் அந்த பெரு நகரத்தின் உயர்ந்த மாளிகைகளுக்கிடையில் தங்களுக்கென ஏதாவதொரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புறப் படுகிறார்கள்.
                 இப்படம் முடிந்ததும், ஏன் கழுகுகள் என்னை கொத்தி தின்பது போல் கனவு வந்தது என்பதை உணர்ந்துகொண்டேன், இப்பொழுதெல்லாம் அந்தக் கனவு வருகையில் தடிகொண்டு என்னைக் கொத்திய கழுகை விரட்டி அடிக்கிறேன் எனகென்று ஒரு மகாநகர் இருக்கும் நம்பிக்கையில்.
 

1 comment:

  1. அருமையான விமர்சனம். நான் சத்யஜித் ரேயின் படங்கள் எதையும் பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் :)

    ReplyDelete

சொலவடை