சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Thursday, November 6, 2014

தேவையா காதல் முத்தப் போராட்டம்?

              கொச்சியைத் தொடந்து கொல்கத்தாவிலும் பரவுகிறதாம் காதல் முத்தப் போராட்டம். பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துவதை எதிர்க்கும் சில மதச்சார்பு கட்சிகளுக்கு எதிராக, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் போராட ஜாதவ்ப்பூர் மாணவர்கள் முடிவு. கலந்துகொள்ள விருப்பமுடைய அனைவருக்கும் அழைப்பு.
                       ஏன் போராடமாட்டீங்க, அடுத்த வேளை சோத்த பத்தி உங்களுக்கு கவலை இல்லை, காசு குடுக்க , காலேஜ் ஃபீஸ் கட்ட அப்பாவோட பணம் இருக்கு, சொகுசா வாழ்ற உங்களுக்கு அளவில்லாம ஹார்மோன் சுறக்குது, வேற வழியே இல்லாம எதிர் இனத்தால கவரப் படுறீங்க (அதைக் காதல்னு சொல்ல மாட்டேன்). அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகுது, இந்த ஹார்மோன் சுரப்பீ, பொது இடத்துல, காலேஜுக்குள்ள கட்டி அணைக்கிறதும், முத்தம் கொடுக்குறதும்னு மேற்கத்திய வாழ்க்கைய வாழப் பழகுறீங்க.

            உங்க கல்லூரிலயே அடுத்த வேள சோத்துக்கும் வழியில்லாம, அடுத்த செமெஸ்ட்டருக்கு ஃபீஸ் எப்பிடிக் கட்டுறதுன்னு தெரியாம, கல்விக் கடனை எதிர்ப்பாத்து , வேலை கிடைச்சாத்தான் என் கஷ்டத்துக்கெல்லாம் தீர்வுன்னு ஒரு வித பயத்தோடயே படிச்சு, இந்தக் இனக்கவர்ச்சி எழவு ஹார்மோன்களலெல்லாம் சுரக்குதா, சுரக்கலையான்னே தெரியாம சொரண கெட்டு வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒரு ஏழப் பையனுக்காக என்றைக்காவது குரல் கொடுத்துருகீங்களா? சமீபத்தில கூட கல்விக்கடன் கிடைக்காம ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் தற்கொலை.
                 அவன் முன்னாடி உங்க காம லீலைகளை நடத்தி அவனுக்குள்ள காழ்ப்பையும், தாழ்வு மனப்பான்மையையும், மனச்சிதைவையும் ஏற்படுத்தி அவனை காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி ஆக்கி, நீங்க என்னவோ இந்தியாவின் எதிர்காலத் தூண்கள்மாதிரி பேசிக்கிறீங்க.

            எல்லாத்துக்கும் அழைப்பு விடுத்திருக்கிற இந்தப் போராட்டத்துல, கொல்கத்தாவின் வீதிகளிலும், சாலைகளிலும் வாழ்கின்ற, அன்றாடம் சோத்துக்கு குப்பை பொறுக்கியும், பிச்சை எடுத்துகிட்டும் வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒருவனோ ஒருத்தியோ இந்தப் போரட்டதில கலந்துகிட்டா உங்க அரவணைப்பையும், முத்ததையும், அன்பையும் அவரிடத்தில வெளிப்படுத்துவீங்களா? அப்படி வெளிப்படுத்துனா ஒத்துக்கிறேன் அன்னை தெரசா வாழ்ந்த, அவரைப் பின்பற்றும் புண்ணிய பூமி கொல்கத்தான்னு.

           இது கொச்சியையோ, கொல்கத்தாவையோ சாடி எழுதப் பட்டதில்ல, பொதுவில எல்லாக் கல்லூரிகளும், பொது இடங்களிலும் நடக்கிறதுதான். இது போன்ற போராட்டங்களால் உருவாகப் போவதென்னவோ மனிதர் வாழ மனிதர் நோகும் ஒரு வேற்றுமை சமுதாயாமே.

Monday, November 3, 2014

அனைத்து ராசி நேயர்களுக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

அனைத்து ராசி நேயர்களே, கீழே சொல்லப் பட்டிருக்கும் வழிகளை வாஞ்சையுடன் பின்பற்றினால் ஏழரை சனியில் இருந்து மட்டுமல்ல, ஏகப்பட்ட சனியில் இருந்து தப்பிக்கலாம்.

1.வீண் விவதாம் கூடாது. (குறிப்பாக மேனேஜருடனும், மனைவி (அ) காதலியுடனும்)
2.செலைவக் குறைத்து சிக்கனத்தைக் கடைபிடிப்பது சாலச் சிறந்தது,
3.தேவையற்ற ஆடம்பரப் பொருட்களின் மீது சில விளம்பரச் சனிகள் ஆர்வத்தை தூண்டும் அவற்றை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.
4.கம்ப்யூட்டர் கம்பனிகளில் வேலை செய்வோர் ஆன்சைட்டுக்காக தேவுடு காக்காமல், செய்வன சிறப்பெனச் செய்தால் கிட்டுவது கிட்டும். சில விசச் சனிகளின் வீண் அறிவுரைகளைக் கேட்டு மனம் கலங்க வேண்டாம்
5. வாழ்க்கைத் துணையத் தேர்ந்தெடுப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும், அந்தஸ்த்து என்னும் சனியைத் தள்ளிவைத்து, எளிமையுடன் நடந்தால் நன்மை கூடம், நல்ல வரன் அமையும்.
6.இணைய தளத்தை முறையாக பயன்படுத்துவது மிக முக்கியமாகும், டுவிட்டர், ஃபேஸ்புக்கில் சண்டை என்னும் சனியை தவிர்த்து உருப்படியானவற்றை பகிர்ந்தால் சனிபகவான் மனம் குளிர்வார். அவரும் சமூக வலைத்தளங்களில் உள்ளார் என்பதை மனதில் கொள்க.
7.பணப் பறிமாற்ற விவகாரங்களில் நேர்மையுடன் நடந்து கொள்வது நல்லது. கொடுத்த கடனை திரும்பக் கேட்டால் கோபம் வரப் படாது.
8.குறுக்கு வழியில் பணம், புகழ் சம்பாதித்து வந்தால் அதைவிட மிகப் பெரிய சனி எதுவும் இல்லை. நேர்வழி நடப்பது நல்லது.
9.பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பை முன்வைத்து மட்டுமே படிக்காமல், உணர்ந்து அர்த்தம் புரிந்து எதற்காக இதை நான் படிக்க வேண்டும் என்று தங்களுக்குள்ளேயும், தங்கள் ஆசிரியரிடமும் விளக்கம் கேட்டு படித்தால் அறியாமைச் சனி விலகும்.
10. கோள்மூட்டிச் சனிகளின் பேச்சைக் கேட்டு , நண்பர்களின் மேல் சந்தேகம் அறமே கூடாது.
11. காதலியுடன் அதிக நேரம் தொலைபேசியில் உரையாடுபவர்கள், உடல் நலத்தை பேணிக்காப்பது நல்லது, அவர்கள் நடந்து கொண்டோ, ஒடிக் கொண்டோ தொலைபேசியில் பேசினால், தொப்பைச் சனி குறையும்.
12. அனைத்து தொழில் செய்பவர்களும் முழு மூச்சுடன் தரமான பொருட்களை தயாரித்து மக்களுக்கு தந்தால் லாபம் பெருகும். பேராசைச் சனி பீடித்து குறுக்கு வழியில் லாபம் தேட நினைப்பவர்கள் மன நிம்மதி கெட்டு எப்படியும் நடு ரோட்டிற்கு வருவர். அதற்கு சனிபகவான் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்.
13.சினிமா, கலைத்துறையில் இருப்போர், மக்களின் நலனுக்கேற்ப நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும். சில சீரழிவுச் சனிகள் மேல் மக்களுக்கு ஆர்வம் இருந்தாலும், அதை ஆதரித்து உங்கள் படைப்புகள் இருந்தால் நீங்கள் சீக்கிரம் ஃபீல்ட் அவுட் சனியால் ஆக்கிரமிக்கப் படுவீர்கள்.
14. பெற்றோர்களால் எப்போதும் பிள்ளைகளுக்கு நன்மையே உருவாகும்.

             கடைசியாக ஒன்று, எல்லா ராசி நேயர்களே, உங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஒற்றை வாழ்க்கையான இதை மற்றவர்க்கு உபத்திரம் கொடுக்காமல், முடிந்த அளவிற்கு சுற்றத்திற்கும் , வரும் சந்ததியற்கும் ஏதோனும் நனமை செய்து விட்டு சென்றீர்களானால், இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் சனி உங்களை அண்டாதிருக்கும்.

--தன்னம்பிக்கையுடன் நம்மைச் சுற்றியுள்ள சனிகளை எதிர்கொள்வோம்.

Saturday, October 25, 2014

பெயரில் என்ன இருக்கிறது?

                      பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில்தான் எல்லாமே இருக்கிறது எனலாம். நமக்கு பிடித்த ஒருவரின் பெயரைக் கொண்ட எல்லோருமே நமக்கு பிடித்தவர்களாகிறார்கள் என்கிறது உளவியல். அத்தைகய சிறப்பு மிக்கது பெயர். பெயர் சொல்லும் வாரிசே பெயரன் ,பேரன் என்றானது. கனிகளுக்கும், பூக்களுக்கும் , ஊர்களுக்கும், தெருக்களுக்கும் பண்டையத் தமிழன் வைத்த பெயரை உற்றி நோக்கி ஆராய்ந்தால் அதன் வரலாறே வெளிவரும். அவ்வகையில் பெயர், ஒரு வரலாற்றையே உள்ளடக்கி இருக்கிறது. 
              எனக்கு பிடித்தமானவர்களின் பெயரை அடிக்கடி மனதால் உச்சரித்துக் கொண்டும், யாரும் இல்லாத தனிமையில் சத்தமிட்டு உச்சரித்தும், அதை எழுதிப் பார்த்தும் குதூகலித்துக் கொண்டதுண்டு. பெயர் என்பது ஒரு நினைவு, ஒன்றை மறக்காமலிருக்க நம் மனதிற்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் புக்மார்க். புத்தகங்களுக்கு இடையில் வைக்கப்படும் மயில் இறகைப் போல. பெயர்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை.
             இவ்வளவு ஏன் கணவனுக்கும், மனைவிக்குமான உறவில் முதல் ஊடலை ஏற்படுத்துவதே இந்தப் பெயர்தான். தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதிலிருந்து அது ஆரம்பிக்கிறது. அது என்னவோ தெரியவில்லை, தமிழுக்கு அந்நியமான ஷ, ஸ, வில் தற்போது பல தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை பார்க்க முடிகிறது. ஒரு மொழியை வாழ வைப்பத்தில் பெரும் பங்கு அம்மொழியில் வைக்கப் பட்ட, அம்மொழியைத் தாங்கி நிற்கும் மனிதர்களின் பெயர்களே என்பது என் கருத்து.
             பெருகி வரும் சமசுகிருத பெயர்கள் பெரும் அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. ஆட்டு மந்தையாய் தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு பெயரிடுவது அடிமுட்டாள்த்தனமாய் படுகிறது. பெயர் ஒருவனுக்கு/ ஒருவளுக்கு கம்பீரத்தை தர வேண்டாமா? வடநாட்டு இனிப்புகளின் பெயரையெல்லாமா அர்த்தம் தெரியாமல் வைப்பது. உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைப்பது என்பது பற்றிச் சொல்ல எனக்கு தகுதியில்லை. ஆனால் அதைப் பற்றி யோசித்து செயல்பட உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. 
                    எனக்குத் தெரிந்த ஒரு சில வழிமுறைகளை சொல்கிறேன் முடிந்தால் பின்பற்றுங்கள்,
1. முடிந்தவரை தமிழில் வையுங்கள். 
2.அரசன், கவிஞர், புலவர்களென்று தனித்துவம் வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டில் பல்லாயிரக் கண்க்காணோர். அப்படி யாரேனும் ஒருவர் உங்களைக் கவர்ந்தால் அவரின் பெயரை வையுங்கள். 
3.இன்றைய காலகட்டத்திற்கு சீத்தலை சாத்தானார், ஆலங்குடி வங்கனார், மாற்பத்தி போன்ற பெயர் எடுபடாதுதான் ஆனால் அறிவுடை நம்பி , ஆண்டாள், இளவெயினி என்பனவை எக்காலத்துக்கும் இனிமையானவை.
4. இப்படித்தேடி கண்டுபிடிப்பதில் நீங்களும் சில நல்ல புலவர்களையும் அவர்கள் பாடல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம், பிற்காலத்தில் உங்கள் குழந்தைக்கும் அதன் பெயர் காரணத்தைக் கூறி வளர்க்கலாம். எல்லாக் குழந்தைகளும் தன் பெயருக்கான காரணத்தை பெருமிதத்தோட மற்றவர்க்கு கூறி வளரவே ஆசைப்படுவார்கள். அவர்களின் தன்னம்பிக்கையும் பெருகும்.
5. பெண்குழந்தைகளுக்கு பூக்களின் பெயர்களை வைக்கலாம்,.
6. சரித்திர/ இதிகாச தலைவன்/ தலைவிகள் பெயர் ஏராளம். சீவகன், கோவலன், போன்றவை
7. அல்லது உங்கள் மூதாதையரின் பெயர் கலந்து குமார் கருப்பையா, தம்பி அண்ணாமலை , வெற்றி வாசகம், கோதைத் திருமகள் போன்றவையும் மிடுப்பானவையே.


கடைசியாக ஒன்று  பெயரும், அதன் அர்த்தங்களுமே ஒரு வரலாற்றை தாங்கி நிற்கும் தூண் என்பது என் கருத்து, உங்களது குழந்தைகளை எந்தவித எழுத்துப் பிழைகளும் இல்லாமல் வாயாற அழைக்க தாய்மொழிப் பெயரே சிறந்தது. அந்நிய மொழியில், அர்த்தமே தெரியாமல், எந்தவித பின்புலமும் இல்லாத, வெறும் ந்யூமாராலிஜிக்காக பெயர் வைப்பது கடைந்தெடுத்த மாங்காய்த் தனமென்றும், அப்படிப்பட்ட மாங்காய்களில் நீங்களும் ஒருவராகிவிடக் கூடாது என்பதற்கே இந்தப் பதிவு. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போம், தன்மானம் காப்போம், தன்னம்பிக்கை மிக்க எதிர்காலத்தை உருவாக்குவோம்.

-- மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி

Wednesday, October 22, 2014

சமூக விரோதிகள்

                                தனக்கென்று லட்சியமென்று எதுவும் இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அவர்களுக்கென்று இருக்கும் ஒரே லட்சியம், அடுத்தவர்க்கு கிடைக்கும் அனைத்தும் தனக்கும் கிடைத்து விட வேண்டுமென்பதே. தனக்கு அத்தியாவசியமற்ற பொருளே ஆயினும், தன்னைச் சுற்றி வாழும் அந்த லட்சிய கும்பல் அதை வாங்கிவிட்டால் தானும் அதைக் கடன் வாங்கியாவது வாங்கி விட வேண்டுமென துடிக்கிறார்கள்.

தாம் சந்தோசமாக இருக்கிறோம் என்பதை யார் யாருக்கோ நிருபிக்க துடிக்கிறார்கள், ஆனால் அதை தங்களிடம் நிரூபிக்க தவறிவிடுகிறார்கள். கவலைப் படுவதற்கென்றே அடுக்கடுக்காய் காரணம் வைத்துக் கொள்வார்கள். ஆன்சைட் கிடைக்காதது, அம்பதாயிரம் சம்பளம் போதவில்லை, எனக்கு பின்னாடி சேர்ந்தவன் என்னை விட அதிகம் வாங்குறான் எனப்படுவது இவர்களின் அதிகபட்ச கவலையாக இருக்கும். 
 
இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இவர்கள் எண்ணுவதைத்தான் உலக யதார்த்தம் என பிதற்ற ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தவனோடு தன்னை ஒப்பிட்டே தன்னை மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு பிறக்கப் போகின்ற/பிறந்த குழந்தையையும் அப்படியே வளர்க்க முயலுகிறார்கள். சீர்கெட்ட சமூகத்தை உருவாக்கும் சமூக விரோதிகள் இவர்களைத் தவிர வேறு எவரும் இல்லை. 
 
எல்லோருக்கும் கிடைக்கும் ஒன்று உங்களுக்கு கிடைக்காது போனால், நீங்கள் பாவம் செய்தவர்களல்ல, அவர்களிடத்து தள்ளி நிற்கும் தனித்துவம் வாய்ந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களோடு ஒப்பிட்டு உங்களின் தனித்துவத்தை இழக்காதீர்கள். பிடித்த வேலையை உயிர்ப்போடு செய்யுங்கள், அதில் கிடைக்கும் எதையும் முழு மனதோடு எடுத்துக் கொள்ளுங்கள். மிதமிஞ்சுவது எப்போதும் அனுபவம் மட்டுமே. அதை சேமிக்க பழகிக் கொள்ளுங்கள்.

இவர்களை இவ்வளவு சாடும் அளவிற்கு எனக்கு என்ன நடந்தென்று நீங்கள் கேட்கலாம்? எனக்குள் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எச்சம் என்னுள் வரமாலிருக்க இதைப் பதிகிறேன், இது எனக்காக பதியப் பட்டது, அவ்வப்போது அந்த இழி பிறவிகள் என்னுள் வரும்போது இதை மறுபடியும் மறுமபடியும் படித்து அவர்களை விரட்டுவேன்.

Tuesday, October 21, 2014

இனமெனப் படுவது இரண்டே பிரிவு

மனதிற்பட்ட சிலவற்றை வெளிப்படையாக எழுதுகிறேன். 

என்னளவில், இந்த மனித இனம் வெறும் இரண்டு பிரிவினரால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கிறது. ஒன்று பெரும்பான்மையினர், மற்றொன்று சிறுபான்மையினர். இந்த பெரும்பான்மையினர் எனப்படுபவர் சன/இனத்தொகையாலோ அல்லது பணத்தொகையாலோ உயர்ந்து இருப்பவர். இதற்கு நேர் எதிரான விளக்கத்தை சிறுபான்மையினருக்கான அர்த்தமாக கொள்ளலாம். பெரும்பான்மையினர் என்பதால் அவர் தங்களுக்கான சட்டதை வகுத்துக் கொள்கிறார், சிறுபான்மையினரும் அதற்கு உட்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்தப் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்தால் அது அரசாங்கம் எனப்படுகிறது, அதையே சிறுபான்மையினர் செய்ய நினைத்தால் அதை தேசத் துரோக கலகக் குழு என்கிறது பெரும்பான்மைச் சமூகம். 

பெரும்பான்மையினர் ஆயுதம் தூக்கினால் அது தற்காப்பிற்கு எனவும், ஒடுக்கப்பட்ட இனம் ஆயுதம் தூக்கினால் அது அராஜ தீவிரவாதம் எனவும் சித்தரிக்கப்பட்டுவிட்டது. பெரும்பானமையினரின் மொழி, கலாச்சாரம் இன்னபிற அரசியல்கள் தொடர்ந்து சிறுபான்மையினரின் மீது இன்றைய நாள் வரை தொடர்ந்து திணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து வந்து சிறுபான்மையினருக்காகப் போராடுபவன் தியாகி என்றும் தலைவனென்றும் போற்றப்படும் அதே நேரத்தில், சிறுபான்மைச் சமூகத்திலுருக்கும் ஒருவன் தன் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுப்பது கண்டுகொள்ளப் படாமலே போகிறது

எல்லாத் தெருவிலும், ஊரிலும், மாநிலத்திலும், நாட்டிலும் இவ்வகை சிறுபான்மையினரையும் பெரும்பான்மையினரையும் காணலாம். ஏதோ ஒருவகையில் நீங்களும் நானும் சிறுபான்மைச் சமூகதிலும் அதே நேரம் பெரும்பான்மைச் சமூகத்திலும் இருக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய ஒன்று, அவரவர் அடுத்தவர் தனித்துவதிற்கு மரியாதை கொடுத்து,  பெரும்பான்மையினனாக பிறந்ததற்காக எவ்விதத்திலும் மமதை கொள்ளாமலும், சிறுபான்மையினத்தினறாக பிறந்ததற்காக காழ்ப்பும், தாழ்வு மனப்பான்மையும் கொள்ளாமல் நல்ல கல்வி பெற்று, செய்வன திருந்தச் செய்து, நமக்குப் பின் வரும் சந்ததிகளிடம் அந்த வேற்றுமை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்வதே ஆகும்.

இது என்னளவில் உருவான கருத்து, மாற்றமென்பது ஒவ்வொரு மனிதனின் மனதின்  ஆழத்திலும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்திலே எழுதப்பட்டது. இதில் நான் யாரையும் தாழ்த்தியோ உயர்த்தியோ கூறியிருந்தால் மன்னிக்கவும்.

-- நன்றி

Tuesday, July 15, 2014

துகிலுறிப்பு

கருப்புக் கண்ணாடிக்குள்தான்
கண்கள் தன் சுயரூபத்தைக் காட்டுகின்றன
இருண்ட தனிமையில்தான்
மனம் தன் சேட்டையைக் காட்டுகிறது.
போதுமான தனிமையை வேண்டி எடுத்துக் கொள்ளுங்கள்
உங்கள் குற்றங்களை உங்களிடமாவது ஒப்புக்கொள்ளுங்கள்
உள்ளத்தின் காழ்ப்பை மனமுவந்து பகிர்ந்து கொள்ளுங்கள்
அந்த இருண்ட தனிமையில்
நீங்கள் உங்களுடன் இருக்கும்போது
உங்களின் மறுபக்கத்தை
பகிரங்கமாக கிழித்தெறியுங்கள்.
பகட்டு செய்வதை விட்டு தெரியாத விசயங்களைப் பற்றித்
தெரிந்து கொள்ள முனையுங்கள்.
உங்களின் அழுக்கை சலவை செய்ய அந்த
இருண்ட தனிமையை சலவைக் கல்லாய் பயன்படுத்துங்கள்.
மனம்தன் அழுக்குச் சட்டையை துகிலுறித்து
நிர்வாணப் படுத்துங்கள்.
அதிலொன்றும் தவறில்லை
ஆடைக்குள் அனைத்து மனிதனும் அம்மணமே.
அம்மனமும் அம்மணமே.

காலில் விழுந்த கடவுள்

கதறி அழுது கொண்டிருந்தேன்
கடவுள் வந்தார் அவ்வழியே,
கனிவாய் ஆறுதல் தந்து
கஷ்டங்களைப் போக்குவதாகச் சொன்னார்.
கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னேன்
என்னிலும் ஏழைகள் ஆயிரம்,
தன்ன்னம்பிக்கை இல்லா தற்குறிகள் பலகோடி
அவரிடம் காட்டிக் கொள் உன் தயவை,
என்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.
காலில் விழுந்த கடவுள்
வந்தவழி சென்றார்.


Friday, April 25, 2014

Story of a Social Animal.

                                    அன்றோரு நாள் அதிகாலையில் ஏதோ ஒன்று பழுதாகி அந்தக் குடியிருப்பு முழுக்க மின்சாரம் தடைபட்டது, எல்லோருக்கும் முன் முதல் ஆளாய்ப் போய் புகார் பதிவு செய்தான். குடியிருப்பு நிர்வாகம் தடங்களுக்கு வருத்தம் தெரிவித்ததோடு அன்றிரவே எல்லோர் வீடுகளுக்கும் மின்சாரம் மீண்டு வர வழி செய்தது. இவன் போன சென்மம் செய்த பாவத்தின் பயனால் இவனுடைய வீட்டை மட்டும் எட்டவில்லை மின்சாரம். கடுங்கோபத்துடன் மீண்டுமொருமுறை நிர்வாகத்தை அணுகினான். 
தனியொருவருக்காக நள்ளிரவில் ஆள் அனுப்ப இயலாது, காலை வருவதாக சொல்லி நிர்வாகம் பின்வாங்கியது. கடுப்புடன் போய் படுத்துக் கொண்டான், அன்றிரவு அவன் உடலிலிருந்து ஆவியும், உடலே ஆவியாகவும் வெளியேறியது வெப்பத்தினால்.

இரண்டாம் நாள் நிர்வாகம் ஒரு ஏப்ப சாப்பையான ஆளை பழுது பார்க்க அனுப்பியது, அவன் எதையோ பார்ப்பதைப் போல் பார்த்து பின் வருவதாகக் கூறிச் சென்றான். போனவன் இரவாகியும் வரவில்லை. இரண்டாம் நாள் இரவும் இருட்டில். 
இப்போது இவனுக்கு தோன்றியது தீவிரவாத எண்ணம், தனி ஒருவனுடையவனின் பிரச்சனை யாராலும் கண்டு கொள்ளப் படுவதில்லை, அதுவே ஒரு சமூகத்தின் பிரச்சனையால் இவனுடன் சேர்ந்து குரல் உயர்த்த யாரேனும் வரலாம், ஆக மெல்ல சென்று அந்த குடியிருப்பின் மெயின் MCB யை அணைக்க முனைந்தான், ஆனால் அவனுக்கு தீவிரவாதம் செய்யத் தைரியம் இல்லை. ஆக இரண்டாம் இரவிலும் ஈரத்துணி கட்டிக் கொண்டு தூங்கிவிட்டான் (தாளாத வெப்பத்தின் காரணத்தால் மட்டுமே).

மூன்றாம் நாள் காலை சேதி வந்தது, ”பிரச்சனை அப்பார்ட்மண்ட்டின் உள்க்கட்டமைப்பில் இல்லை, உங்கள் வீட்டுக்குமட்டும் ஈ.பியிலிருந்து கரண்ட் வரல, நீங்க நேரா அங்க போய் ஒரு புகார் பதிவு பண்ணிடுங்க”. இவனுக்கு தலை சுத்திக் கொண்டு வந்தது, இப்பிறவி முழுக்க இவனுக்கு மின்சாரம் எட்டாக் கனியாய் தூரம் செல்லப் போவதைப் போல் ஒரு பதை பதைப்பு. ஈ.பி ஆபீஸில் புகார் பதிவி செய்து விட்டு திரும்பினான். 
மூன்றாம் நாள் இரவு, இப்போது இவனுக்கு தோன்றியது புரட்சிகர எண்ணம், அரசாங்கத்தின் மேல் கோபம் வந்தது, தான் நன்றாகப் படித்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகப் போவதாக சபதம் எடுத்துக் கொண்டான். ஆனபின் தன்னை அலைக்கழித்த நிர்வாகிகளையும், அரசாங்கத்தையும் ஒருகை பார்த்துவிட தீர்மானித்தான், அரசாங்கப் பணிகளை துரிதப் படுத்துவேன் என்று காரிருளில், கண்களில் தீப்பொறி பறக்க தீர்மானம் எடுத்துக் கொண்டான். எப்படியோ அப்படியே தூங்கிவிட்டான்.

நான்காம் நாள் காலை, இன்னும் மின்சாரம் வந்தபாடில்லை. இவனுடைய காலை பொலிவில்லாமல் புலர்ந்தது, அலுவலகம் சென்றான், 
இப்போது இவனுக்கு தோன்றியது, "Survival of the Fittest" மனநிலை, அன்று முழுக்க வேலை எதுவும் செய்யாமல், இணையத்தில், மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி, எளிய முறையில் உடலை குளிர்வித்துக் கொள்வது எப்படி என்று படித்துத் தெரிந்து கொண்டான். இரவு வந்தது, பூட்டிய வீட்டைத்திறந்தான், எப்போதும் போல் கை தானாகச் சென்று விளக்கை ஆன் செய்யச் செல்லவில்லை. விரக்தி, பழகிவிட்டது. தலை கிண் கிண் என்றது, தனிமை மிகப் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. ஏதும் செய்ய முடியா கையாலாகா நிலை அவனை பின்னுக்கு தள்ளினாலும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவன் கைய இறுக்கமாக பற்றிக் கொண்டே இருந்தது. 

ஐந்தாம் நாள் காலை - ஆறு மணி, ”காலிங்பெல் அடிக்கும் சத்தம்”, கண் விழித்து கதவைத்திறந்தான், வெளியில் பால்க்காரன், “சார் கரண்ட் வந்துடுச்சு போல??”. முந்தைய இரவே மீண்ட மின்சாரத்தை இவன் கவனிக்க மறந்திருந்தாலும், அதிகாலையிலாவது அதைத் தெரிவித்த பால்காரன் தேவதூதனாகத் தெரிந்தான். மின்சாரம் இல்லாமலே அவன் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அப்போது அவன் கோவம், புரட்சி, தீவிரவாத எண்ணம் எல்லாம் மறந்து, மீண்டும் ஒரு “Common Man" ஆக, சமூக விலங்காக மாறிக்கொண்டிருந்தான். 

முற்றும்.

Tuesday, January 28, 2014

முன்கதைச் சுருக்கம்

                                 
                             அவன் எது செய்தாலும் நான் அதில் ஒரு படி மேல் செய்ய வேண்டும், இல்லையென்றால் அன்றைக்கு எனக்கு தூக்கம் வராது. அவன் 90 மார்க் எடுத்தால் நான் 95 எடுத்தாக வேண்டும். அவன் 50 ரன்கள் அடித்தால் நான் 100 ரன்களாவது அடிக்க நினைப்பேன். என் பெற்றோர்களும் பெரும்பாலும் அவனோடு ஒப்பிட்டே என்னை வளர்த்தார்கள். இப்படி அவன் எது செய்தாலும் போட்டி போட்டு நானும் செய்து கொண்டிந்த அந்த காலகட்டங்களில், அவன் செய்த ஒரு விசயத்தை என்னால் செய்ய முடியவில்லை. அப்போது நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம், வகுப்பில் வாத்தியார் வர தாமதமான ஒரு நேரத்தில், அனைவரின் காது பிளக்க, கைகளை மடக்கி வாயில் வைத்து அவன் அடித்த விசிலில் சகமாணாக்கர்கள் மத்தியில் அவன் பெரிய பெயரை எடுத்துவிட்டான். என்னுடன் சுற்றித்திரிந்த சிலரும் இப்பொது அவன் பக்கம். இப்போது நான் எப்படியாவது விசில் அடிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அதுவும் அவனை விட சத்தமாகவும், ஸ்டைலாகவும். அப்போதுதான் வகுப்பில் இழந்த புகழை நான் பெற முடியும். 

அன்றிலிருந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். எப்போதும் எனது வாயில் எச்சில் அதிகமாக உமிழாதபடி வறட்சியாகவே வைத்துக் கொண்டேன். குளிக்கும் போது, கழிக்கும் போது, சாப்பிடும் போது, தூங்கும் போது கூட என எல்லா நேரத்திலும் விசில் பழகிய வண்ணமே இருந்தேன். ஒரு வாரம் ஆனது, என்னால் இன்னும் சரிவர விசில் அடிக்க வரவில்லை. அவன் அவ்வப்போது வகுப்பிலும், வெளியிலும் விசில் அடித்து தன் கெத்தை நிலை நிறுத்திக் கொண்டிருந்தான். வயித்தெரிச்சல் தாள முடியாத நான், காய்ச்சல் என்று பொய் சொல்லி வகுப்பிற்கு லீவு போட்டு விசில் கற்றுக் கொண்டிருந்தேன். என் இயலாமை எனக்கு பெரும் ஏமாற்றத்தையும் அழுகையையும் வர வழைத்தது. அழுதே விட்டேன். அடுத்த நாள் பள்ளியில் ப்ரேயர் நடந்து கொண்டிருந்தது, நீராடுங் கடலுடுத்தவில் ஆரம்பித்து, அனைவரும் கண் மூடி ஜன கண மன அதி பாடிக் கொண்டிருந்த சமயம், கடவுளின் கருணை எனக்கு கிட்டியது. ஓங்கி அடித்த என் விசிலின் சத்தம் அனைவரின் காதுகளின் கதவுகளைத்திறந்து உள்ளே நுழைந்தது. தாள முடியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குத்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ப்ரேயரில் விசில் அடித்த குற்றத்திற்காக ஈ.பீ.கோ ஏதோ ஒரு செக்சனின் படி, தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப் பட்டேன்.

அவர் எனது இன்ன பிற விவரங்களை வாங்கிக் கொண்டு தேசிய கீதத்தை ஒரு முறை எனனை பாடச்சொன்னார். நான் பாடி முடித்தபின், நம்ம தேசிய கீதத்தை யார் எழுதுனது தெரியுமா?, என்றார். நான் தெரியாது என்பது போல் உதடு பிதுக்கினேன். என்ன மொழில எழுதப்பட்டதுன்னாவது ஒனக்கு தெரியுமா தம்பி?, மறுபடியும் உதடு பிதுக்கல். என்னைப் பொறுத்தவரை எனக்கு விசில் வந்து விட்ட சந்தோசம் எனக்கு. அவர் பேச ஆரம்பித்தார், நம்ம தேசிய கீதம், வங்க மொழியில் ரவீந்தரநாத் தாகூரால் எழுதப்பட்டது என்று ஆரம்பித்து, வங்க மாகாணத்தையும், கல்கத்தைவப் பற்றியும் கூறினார். அவர் பேசப் பேச எனக்கு வியப்பு மேலிட்டது. அதுவரை எனக்கு பேசத்தெரிந்த மொழி தமிழ், கொஞ்சம் கொஞ்சமாக படிக்கப் பழகிக் கொண்டிருந்த மொழி ஆங்கிலம், தூர்தர்சன் தொலைக் காட்சி புண்ணியத்தில் ”இருக்கு” என்று தெரிந்த மொழி இந்தி. இப்போது இவர் வங்க மொழியைப் பற்றியும், கல்கதாவைப் பற்றியும் கூறியது எனக்கு புதியதாகவும், திறக்கப் படாத ஒரு பரிசுப் பெட்டியின் கிளர்ச்சியையும் எனக்குள் எழுப்பியது. நான் பின்னோரு நாளில் கல்கத்தா செல்வேன் என்று அப்போது உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். இத்தோடு என் முன் கதைச்சுருக்கத்தை முடித்துக் கொள்கிறேன். அந்த திறக்கப்படாத பரிசுப் பெட்டியில் நான் திறந்தெடுத்தது என்ன என்பதை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, January 24, 2014

எலிகள் இழுக்கும் தேர்

பணம் படைத்த பரங்கி தேசத்தினர் அமர தேர் செய்யப்படுகிறது. கணிணியில் செய்த கயிறு கொண்டு வடம் உருவாக்கப்படுகிறது. வடமிழுக்க வளரும் நாடுகளின் வளங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மனிதன் தேரை இழுக்க, மனிதனை குதிரைகள் இழுக்க, குதிரைகளை எருதுகள் இழுக்க, எருதுகளை எலிகள் இழுக்க மெல்ல நகர்கிறது தேர். வேகத்தை அதிகரிக்க உயர்ந்த நிலையில் இருந்து அடி கொடுக்கபடுகிறது. அடி அங்கிருந்து அடுக்கடுக்காய் கீழிறங்கி எக்கச்சக்கமாய் எலிகள் மேல் வந்து விழுகிறது. ஏரோப்ளேன் வேகத்தில் எலிகள் ஓட்டப்படுகின்றன. சேதம் தாங்க முடியாத சில எலிகள் செத்து விழுகின்றன. செத்த எலிகள் சீக்கிரம் அகற்றப்பட்டு, அவ்விடத்தை நிரப்ப அடுத்தடுத்து எலிகள் ரெக்ரூட் செய்யப் படுகின்றன. இப்படியாக நகர்ந்து கொண்டே இருக்கிறது அத்தேர்.

Sunday, October 20, 2013

சுயம்

நன்றாக நீந்திக் கொண்டிருந்த மீனை தூக்கி பரந்து விரிந்த பாலை வனத்தில் போட்டார்கள், அதுவும்  தட்டுத்தடுமாறி நடக்கப் பழகி கொண்டு சில நாட்களில் தன்னை ஒட்டகமாக மாற்றிக் கொண்டது. நன்றாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் அதை மரமேறச்சொல்லி வற்புறுத்தி குரங்காக்கினர், பின் பருந்து, சிலந்தி, பல்லி என பல உருவங்கள் எடுத்து தன்  சுயத்தை இழந்து சுண்ணாம்பாகிப் போனது.  அந்த சுண்ணாம்பு சுவருக்கு அடிப்பதற்காக நீரில் கரைக்கப்பட்டது, திடீரென சுயத்தை உணர்ந்த சுண்ணாம்பு கொதித்தெழுந்தது. ஆனால் வாளியைத்தாண்டி அதன் வீரியம் வெளிப்படவில்லை.

Thursday, September 5, 2013

இனி கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப்போவதில்லை.

                        நீங்க சவுத் இந்தியனா, உங்காளுங்க ரஜினிய கடவுளா பாப்பாங்களாமே? என்னா ராஸ்கலா? தமிழ் சினிமால எல்லாரும் இப்பிடித்தானா? இது போன்ற  அரை வேக்காட்டு கேள்விகளை கடந்த இரண்டு வருடங்களாக கேட்டுக் கேட்டு காது புளித்த நிலையில் இதை நான் எழுதத் தொடங்குகிறேன். தொடக்கத்தில் இந்தப் பொடியர்களுக்கு ரஜினியின் பெருமையை எடுத்துக் கூறிக் கொண்டுதான் இருந்தேன், ஆனால் இனி நான் கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப் போவதில்லை.  

கதைக்கு வருவோம்.
                                        நீங்க ரஜினிய தெய்வமா பாக்குறீங்களே, படிப்பறிவு இருக்கிற எவனாவது இப்பிடி செய்வானா? என்றான். சரி நீங்க யாரெல்லாம் தெய்வமா பாப்பீங்க என்றேன். ஒரு நமட்டுப் புன்னகையுடன் எங்களுக்கு காளி, ராம், சிவ்  இவங்க தான் தெய்வம் என்றான் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு. காளி, ராம், சிவ் இவங்கல்லாம் எப்ப வாழ்ந்தாங்கன்னு சொல்ல முடியுமா? என்பது என் கேள்வி ? அவங்கள்லாம் இதிகாச நாயகர்கள், காலத்தால் அழிக்க முடியாதவங்க, அவங்க வாழவும் இல்லை சாகவும் இல்லை என்றான் பெருமிதம் பொங்க. ஆக, கதைகளில வர்ற  கதாப் பாத்திரங்கள, கார்ட்டூன் கேரக்டர்கள கடவுளா கும்பிடறீங்க அப்பிடித்தானே? உங்களைப் போல இல்லாத ஒரு விசயத்தை கடவுளா பாக்குறதுக்கு (சற்றே நிறுத்திக் கொண்டு), ஒரு பாமரன், உழைப்பாளி, சினிமாவை மட்டுமே தனது கேளிக்கையாக கொண்டிருப்பவன், தன்னை சந்தோசப் படுத்துபவனையும் தன்  மனக் குழப்பத்திற்கு வசன மருந்து தருபவனையும் கடவுளா பாக்குறதுல என்ன தப்பு? என்றவுடன் என்னை எரிச்சலுடன் பார்த்தான். 
                    மேலும் தொடர்ந்தேன், தமிழ் நாட்டுல மூணுவிதமான மக்கள், ஒரு சாரர், முகாலய படையெடுப்புக்குப் பின்னர் இசுலாமியர்களாக மாற்றப் பட்டவர்கள், மற்றொரு சாரர் ஆங்கிலேய வருகைக்குப் பின்னர் கிருத்தவர்களாக மாற்றப் பட்டவர்கள், மூன்றாமவர்கள் தங்களை மெஜாரிட்டி என்று சொல்லிக் கொள்ளும் ஆரிய வருகைக்குப்பின் இந்துக்களாக மாற்றப் பட்ட  கூட்டம். இதை கேட்டவுடன் அவனுக்கு சிறு குழப்பம், அப்படின்னா நீங்க மதமே இல்லாதவர்களா? என் கருத்தை அவனிடம் வைத்தேன், தன்னை உணர்ந்த எவனுக்கும் மதம் தேவைப் பட்டதில்லை. புத்தன் சொன்னதை, கீதை சொன்னதை, பைபிள்  சொன்னத்தை, திருக் குரான் சொன்னதை எங்கள் திருக்குறளும் பல்லாயிரம் வருடத்திற்கு முன்னரே சொல்லியிருக்கிறது. அந்த திருக்குறளைப் பற்றி உனக்கு தெரியுமா என்றென். மதங்களை கடந்த எங்கள் புனித  நூல், மனிதம் பேசிய முதல் நூல், கேள்வியாவது பட்டிருக்கிறாயா என்றேன். இல்லை என்றவாரு தலை அசைத்தான். அந்த திருக்குறள் உனது மொழியில் கூட மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது, படித்துப்பார், மதங்களை துறப்பாய், மனிதனாக உணர்வாய். உங்களது நோக்கம், நல்ல விசயங்களை அறிந்து கொள்வதில் இல்லை. உங்கள் நேரம் போவதற்காக யாரையாவது பற்றி புறணி  பேசுவது. உனக்கு விருப்பம் இருந்தால் எங்கள் ஊரைப் பற்றிய நல்ல விசயங்களை உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன், இல்லை என் நேரத்தை வீணாக்காமல் இங்கிருந்து போய்விடு என்றேன்.
                          இது ஒரு சாரரை தாக்கி எழுதப் பட்டதல்ல,நான் ஒன்றும் இனவெறியனும் அல்ல,  இவர்களைப் போன்றவர்கள் எல்லா விதமான இனத்திலும், மதத்திலும், மொழியிலும் இருக்கிறார்கள், இந்தப் பதிவு தமிழின் பெருமை பேசுவதற்காக போடப் பட்டதில்லை, இது போன்ற மாக்களை  கடந்து செல்வதற்கும், நல்லவர்தம் உறவு வளர்ப்பதற்கும் போடப் பட்டதே. 

இனி கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப்போவதில்லை. அந்த அவசியமும் இல்லை.

Sunday, July 28, 2013

தனிமை

அணைக்க ஆளில்லாத மெழுகு,
அழுது வடிந்து
தனிமைத்தீயில் உருகி
தன்னைத் தானே
அணைத்துக் கொள்கிறது

Friday, July 5, 2013

நான் யார்?

நான் யார்?

என் கண்ணாடியில்
தினம் தெரியும் பிம்பமா?

வெளிச்சத்தில் என்னுடன்
நடந்து வரும் நிழலா?

உணவுக்கு கவளங்கள்
என் வயிற்றை
நிரப்பிக் கொண்டே போயின!

என்னைப் பற்றிய
கேள்விகள் என் மனதை
நிரப்பிக் கொண்டே போயின!

புத்தனைப் படி
உன்னை அறிவாய் என்றார்கள்
புத்தனோ கண்மூடித்தனமாக
என்னை பின் தொடராதே
என்று கூறி விரட்டிவிட்டான்

நகுலன்தான் என்னில்
இப்படியெல்லாம்
கிளர்ச்சியேற்படுத்தியவன்

ஆக அவன் சொன்னதுபோல்
என்னிடம் நானே கேட்டுப் பார்த்தேன்
நான் யார்? என்று
அப்படியும் அறிந்தபாடில்லை!!!

நான் இறந்தபின்
என் சவக்குழியின் மேல்
எழுதிவைப்பார்கள்
நான் யாரென்று
அப்போது வந்து
பார்த்துக் கொள்கிறேன்!

Saturday, May 11, 2013

நல்ல ரசிகனின் கடமை


காலஞ்சென்ற விடுதலை போராட்டத்தியாகி திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாளை நான் அடிக்கடி சென்று சந்திப்பது, சில சமயம் பத்திரிக்கைக்காக பேட்டி எடுப்பதும் என் வழக்கம். என்னையும் அவர் தன் மகனைப் போலவே பாவித்து வந்தார். திரைப்படங்களையே தன் வாழ்நாளில் பார்த்திராத அவர், ஒருநாள் என்னை அழைத்து தான் திரைப்படம் பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரை அழைத்துக் கொண்டு என் விருப்பமான நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் ராஜபாட் ரங்கதுரை திரைப்படத்திற்கு சென்றோம். படத்தில் ஒருகாட்சியில் சிவாஜி திருப்பூர் குமரன் வேடமிட்டு வருவார். காட்சியின் முடிவில் காவலர்கள் அவரை தடியால் அடித்து அவர் கீழே விழுந்து இறப்பார். இக்காட்சியைப் பார்த்த ராமாயி அம்மாள் அக்கணமே திரையரங்கில் மயக்கம் போட்டு சாய்ந்தார். பின் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று காரணம் கேட்டபோது அவர் சொன்னதாவது, “என் கணவர் இறந்தபோது எனக்கு பன்னிரெண்டரை வயது, பக்குவப்படாத பருவம். என் கணவரின் நடை,உடை பாவனை கூட என் மனதில் சரியாக பதியாத வயது. அவர் இறந்த அன்று கூட அவ்வளவு துக்கப்படவில்லை. இன்று திரைப்படத்தில் அந்த நடிகர் நடித்தது என் கணவர் போலவே பட்டது, அவர் காட்சியில் இறந்து விழுந்த போது என்கணவர் இறந்த போது எழாத துக்கம் மேலெழுந்து கீழே சரிந்தேன்” என்றார். தான் உயிருடன் இருக்கும் வரை இதை எழுத வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். பின்னாளின் அவர் காலமானபின் இதை நான் பத்திரிக்கையில் எழுதியிருந்தேன். எழுதிய சில மாதங்கள் கழித்து என்னை அலுவலகத்தில் இருந்து திரையரங்கத்திற்கு அனுப்பி அப்போது வெளியாகியிருந்த சிவாஜி கணேசனின் லாரி ட்ரைவர் ராஜாகண்ணு படத்தைப் பற்றி விமரிசனம் எழுதச்சொன்னார்கள். படத்தைப் பார்த்து ஒரு நல்ல சினிமா ரசிகன் என்ற முறையில் எழுத ஆரம்பித்தேன், ”இப்படத்தில் கதை இருக்கிறது என்று சொன்னால் என் பேனா சதை இருக்கிறது என்று எழுதுகிறது, இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் என் பேனா கடித்திருகிறார்கள் என்று எழுதுகிறது”, இப்படியாக தமிழ் சினிமா காணாத ஒரு மிக மோசமான படம் என்ற முறையில் விமரிசனம் எழுதி பிரசுரமும் ஆகிவிட்டது. தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்ட நடிகர் திலகம் என்னை யார் என்று விசாரித்தார், பின் நான் தான் ராமாயி அம்மாளைப் பற்றியும் எழுதியவன் என்று தெரிந்து கொண்டு, “என்னையா ஒன்னு ஒரேடியா தூக்கி வச்சி எழுதுறீங்க, இல்லை போட்டு ஒரேடியா கவுத்தீட்றீங்க” என்று சற்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டுக் கொண்டார். அவரிடம் மிகப் பணிவாக நான் ”ஐயா, நான் உங்க தீவிர ரசிகன், நீங்க இனிமே இதுபோன்ற படங்களில் நடிப்பதை தடுப்பதே என்னைப்போன்ற நேர்மையான ரசிகனின் கடமை, மன்னிக்கனும்” என்றேன். எனது விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொண்டார் நடிகர் திலகம்.

--ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் எழுத்தாளர்/சினிமா விமர்சகர்/பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன் கூறியது.

----நமது விருப்பத்திற்குரிய நடிகர் நடிக்கும் நாராசமான படங்களைக் கூட தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் மூலம் சினிமாவை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்கிறோம். மண்டையில் ஊறுகாய் அளவுக்கு மூளையிருக்கிறவன் கூட அப்பிடி செய்ய மாட்டான். இதை நான் எழுதுறதுக்கு காரணம் நேத்து ரெண்டு வெ.மா.சூ.சொ இல்லாத பார்ட்டிங்க, ”பில்லா II” நல்லபடமா, ”சுறா” நல்ல படமான்னு சண்டைபோட்டுகிட்டானுங்க!!!

Thursday, December 27, 2012

நிற்க அதற்குத் தக!



                                          என்றும் இல்லாத அளவுக்கு அன்று சற்று நெரிசலாகவே காணப்பட்டது அந்தச்சாலை. பொதுவாக அந்தச் சாலை நாய்களுகென்று குத்தகைக்கு விடப்பட்டது என்று சொல்லலாம். யார் யாரோ நடந்து சென்றாலும் கதைக்காக வேண்டி நாம் அந்த மூன்று பேரை மட்டும் உற்று நோக்க வேண்டும். அவர்களைப்  பார்க்க எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டே போவது போல் தெரிந்தது. அவர்களின் விவாதச் சத்தம் என் காதை கிழித்தது, ஆகவே நான் ஒட்டுக் கேட்டு வந்து உங்களிடம் சொல்வதாய் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் விவாதம் இந்தியாவின் கல்வி முறையைப் பற்றி இருந்தது. அவர்களுடைய  பெயர் எல்லாம் தெரியாது, ஒருவன், மற்றொருவன், மூன்றாமவன் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் சொன்னான், "இந்தியக் கல்விமுறை சுத்தமா சரியில்லை, நல்ல கல்வி என்பது ஒருத்தன முழு மனிதனா மாத்தி அவனுக்கு வாழ்க்கையல்ல சொல்லித் தரனும், ஆனா நம்ம கல்வி முறை பணம் பண்ற மெஷின்களத்தான உருவாக்கிட்டு இருக்கு". இன்னொருவன் பொங்கி, "அதெப்படி நீ சொல்லலாம், கல்வி முறையில எந்தக் குறையும் இல்ல, கற்பிக்கிறவன்ட்டதான் இருக்கு எல்லாக் குறையும். நல்லாப் படிச்சு வாத்தியாராப் போறவன் எத்தனை பேர் சொல்லு, பார்டர்ல பாஸ் ஆகி வேற வேலை எதுவும் கிடைக்காம வாத்தியார் ஆனவன்தான் அதிகமா இருக்கான்.அதுக்காக அவன நான் கொற சொல்லல, வேலைக்கு வந்த பின்னாவது நாம எடுத்திருப்பது புனிதமான கடம, இந்தியாவோட எதிர்காலமே நம்ம கையில்தான இருக்குன்னு நெனைச்சு அவன் பொறுப்போட நடந்துக்க வேணாமா". அதுவரைப் பொறுத்திருந்த மூன்றாமவன் "எல்லாக் ஸ்கூல்,காலேஜுலயும் இந்த நெலமை இல்ல. ஐஐடி எடுத்துக்கோங்க அங்க இல்லாத பெசிலிட்டீசா , வாத்தியாருங்களா, ஆனா அங்க படிக்குறவன்ல 90 சதவீதம் வெளிநாட்டுக்குத்தான போறான். எவனாவது இன்னோவேடிவா எதாவுது கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பேர் வாங்கித் தந்தானா. இல்லையே. ஆக நம்ம education system is not teaching anything morally good to the students.என்று தன் பிரசங்கத்தை முடித்தான். தன் வேளை வருமென்று காத்திருந்த இரண்டாமவன், "நான் ஸ்கூல் படிக்கும்போது கேம்ஸ் பீரியட மேத்ஸ் வாத்தியார் எடுத்துப்பார், ஆர்ட் பீரியட சைன்ஸ் வாத்தியாரும், கிராஃப்ட் பீரியட இஸ்ட்ரி வாத்தியாரும் எடுத்துப்பாங்க. இவுங்க இப்பிடி இருக்க கல்வி முறைய குறை சொல்லி என்ன பிரயோஜனம்". முதலாமவன் ஆரம்பித்ததோடு சரி, பின் ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்களுடை பேச்சு நீண்டு கொண்டெ போனது. சட்டென்று அவர்களை கடந்து வேகமாக முன் சென்ற லாரி ஒரு குட்டி நாயின் காலில் ஏற்றிவிட்டு நில்லாமல் சென்றது. மூவரும் செய்வதறியாது நின்று, கதறியபடி மெல்ல மெல்ல சாலையக் கடக்க முயற்சி செய்த நாயை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் சிறுதும் தாமதிக்காமல் சாலையின் மறுபக்கத்தில் இருந்து ஓடிவந்த, அந்த வறுத்தகோழி உணவகத்தின் காவலாளி லாவகமாக அக்குட்டியைத் தூக்கி சாலையின் மறுபக்கம் விட்டார். மூவரின் விவாதமும் தற்போது இந்தியாவில் தெரு நாய்களின் இன்றைய நிலையைப் பற்றித் திரும்பியது. நாயைக்  காப்பாற்றிய காவலாளி, வேலை நேரத்தில் வெளியில் சென்றதற்காகவும், வறுத்த கோழி உணவகத்தில் கோழி கொறிக்க வந்தவர்களுக்கு கதவை திறந்து விடாததற்கும் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். கையாலாகாத நான் இதைக் கதையாய் எழுதத் தொடங்கினேன்.
"கற்க கசடற கற்பவை - கற்றபின், 
நிற்க அதற்குத் தக"

Tuesday, December 25, 2012

பாரதி இறந்த அடுத்த சில நிமிடங்கள்...

பிள்ளைங்களா இன்னிக்கு உங்களுக்கெல்லாம் பாரதிக் கதை சொல்லப் போறேன் என்று ஆரம்பித்தார் தாத்தா, குழந்தைகளும் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தனர். 
காலா என் காலருகே வாடா உன்னை காலால் உதைக்கிறேன் போடா என்று கால்களை ஆட்டியபடி பாரதி மரணப் படுக்கையில் படுத்திருந்த வேளை, பாசக் கயிற்றுடன் பக்கம் வந்தான் எமன். பாரதியின் கால்களருகே வந்த சித்திர குப்தனுக்கு வசமாக ஒரு உதை கிடைக்க தாடை தெறிக்க எகிறி விழுந்தான். ஒருவழியாக எமனும் சித்திரகுப்தனும் பாரதியிடம் மன்றாடி அவனது ஆன்மாவை உடலில் இருந்து எடுத்துச் சென்றார்கள் . செல்லும் வழியில் தங்கப் பல்லக்கை தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் வான் வெளியில் இருந்து வந்து கொண்டிருந்தது. எமா, அந்தப் புனித ஆத்மாமை எங்களிட்ம கொடுத்துவிடு அது சுவர்க்கத்தை ஆள வேண்டியது என்று அக்கூடடத்தலைவன் கட்டளையிட பாரதியின் ஆத்மா அவனிடம் ஒப்படைக்கப் பட்டது. இவ்வேளையில்  கோபம் கொண்டு விழித்தெழுந்த பாரதியின் ஆத்மா! அடேய் மூடர்களே, எனது ஆன்மாவை பூமியிலேயே விட்டு விடுங்கள் என்றது. அய்யா உங்கள் உடல் இறந்து விட்டது, இனி உங்களால் பூமியில் வாழமுடியாது என்றது தங்கப் பல்லக்கு கூட்டம். அது எனக்கு தெரியும் என் உடல் சுமை தாளாததால் அதை நான் கழட்டி எறிந்து விட்டேன். என் ஆன்மாவை புவியில் எப்படி வாழ வைப்பது என்று எனக்கு தெரியும் என்றான் பாரதி. ஐயா உங்கள் ஆன்மாவை விடுவிக்க நாங்கள் யார், உங்களுக்கு இங்கு வரவிருப்பமில்லை என்றால் நீங்கள் பூமிக்குச் செல்லலாம், என்ற அடுத்த நிமிடம் பூமியை நோக்கி பாய்ந்தது பாரதியின் ஆன்மா. என்று கதையை முடித்தார் தாத்தா. உடனே சிறார்கள் தாத்தாவிடம், “அது சரி தாத்தா பாரதியோட ஆத்மா இப்போ பூமியில் எங்க இருக்கு?” என்று கேட்க. உடனே தாத்தா பக்கத்தில் இருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்துக் காட்டி இதுதான் பாரதியின் ஆத்மா என்றார். அத்துடன், “ இதை உணர்ந்து படித்து உள்ளத்தில் ஏற்றிக் கொள்ளும் ஒவ்வொருவனுக்குள்ளும் அவன் ஆத்மா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது” என்றார்.
   துள்ளி எழுந்த குழந்தைகள், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று உரக்கப் பாடியபடி விளையாடச் சென்றனர்.

Wednesday, November 21, 2012

அவ்வா அவ்வா - ஒரு ஆராய்ச்சி கட்டுரை

                                                சேரன் பாண்டியன் படத்தில் வரும் செந்திலின் அவ்வா அவ்வா ஹம்மிங்கை நம்மில் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த அவ்வா அவ்வா என்ற வார்த்தைக்குப் பின்னால் உலக இசையே மறைந்திருக்கிறது. இந்த அவ்வா அவ்வா என்ற பாடல் 80களில் ஆசியாவிலேயே மிகப் பிரபலமாக இருந்திருக்கிறது. அது பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாசன் ஜகாங்கீர் என்பவரின் புகழ்பெற்ற பாப் ஆல்பமாம்...


சரி இந்தப்பாடலைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால், இது ஒரு ஈரானியப் பாடலின் தாக்கத்தில் உருவானது என்று அறிய முடிகிறது. பின்வரும் அப்பாடல் ...


எது எப்படியோ உலக இசையை நமக்கு அறிமுகப்படுத்திய செந்திலுக்கே இப்பெருமை அனைத்தும் சேரும்!!!!





Saturday, October 6, 2012

எர்த் குவாக் இன் எக்கனாமிக் சோன்.

                                                 பி.எல்.லின் அரிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது, நான் எவ்வளவு முயற்சி செய்தும் அந்தப் ப்ரோக்ராமிற்கு அவுட்புட்டே வரவில்லை, அப்படியே அவுட்புட் வந்தாலும் ஏகப்பட்ட லொட்டு லொசுக்கு சொல்லி என்னை கடித்து கொண்டே இருப்பார் என்னுடைய மாண்புமிகு மேற்பார்வையாளர். சற்றே கோபமாக வந்தது பிழைப்பின் மேல், வெறுத்துப் போய் ஒரு கப் காஃபி பிடித்துக் கொண்டு வந்து என் மேஜையில் வைத்து, பிட்டத்தை நாற்காலியில் அமர்த்தி கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். என்னைத்தவிர எல்லோரும் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். நாங்களிருக்கும் பதினைந்தாவது மாடியில் திடீரென்று சின்ன நடுக்கம், என் காஃபிக் குவளையில் கல் எறிந்தது போல் அலை எழும்பியது. இது போன்ற காட்சிகளை நீங்கள் காட்ஜில்லா, 2012  போன்ற படங்களில் பார்த்திருந்தாலும் ஒரு பூகம்பத்தை விளக்க இதை விட உகந்த காட்சி என் மூளைக்கு கிட்டவில்லை. ஆக பூகம்பத்தை எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தோம். திடீரென்று அபாய ஒலிப் பெருக்கி ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி, மாறி அலறியது, "எல்லோரும் மேடான திசைய நோக்கி ஓடுங்க..." என்பது போல. இதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாத என் அணித் தலைவர், கணிணினுக்குள் தன் தலையை விட்டு தான் எழுதாத ப்ரோக்ராமை எடிட் செய்து கொண்டிருந்தார், ஆத்தர் எனும் இடத்தில் அவர் பெயரைப் போடுவதே அவர் செய்யும் மிகப் பெரிய மறுசீரமைப்பு. வந்த கோபத்தில் அவரிடம் சென்று இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லோரும் பூமிக்குள்ள போகப் போறோம், பூமிக்குள்ள போய் ப்ரோக்ராம் பண்ற உத்தேசமா வாங்க கீழ போகலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினோம். எங்கள் டெலிவரி மேனேஜர் இந்தியாவில் பூகம்பம் என்றும், ஒரு அரை மணிநேரத்திற்கு சப்போர்ட் தர இயலாது என்பதை தாழ்மையுடன் அமெரிக்காவிற்கும், இங்கிலாந்திற்கும் தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்தார். லிப்ட் ஆஃப் செய்யப் பட்டது. எல்லோரும் எமெர்ஜென்சி எக்சிட் வழியாக படிக்கட்டில் பூமிக்கு இறங்க ஆரம்பித்தோம். முகநூலிலும், டுவிட்டரிலும் மாறி மாறி தகவல் பரிமாறப்பட்டது.  கேண்டினில் இருந்து கழுவாத கையுடன் நண்பர் ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார். அவரின் குரலில், "பகவான் மனுஷாள செத்த நேரம் நிம்மதியா சாப்ட விடறானா,ஆத்துக்காரி இன்னைக்கினி பாத்து உருளைகிழங்கு சாம்பார் பண்ணிருந்தா, இந்த பூகாம்பம் இப்பிடி சாப்பிட விடாம கெடுத்துடுத்து", என்றார். ஓய் உலகமே அழியபோவுது உமக்கு உருளைகிழங்கு சாம்பார்தான் முக்கியமா என்று வேறொருவர் சந்தானம் ஸ்டைலில் கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்தார். ஐ ஆம் சோ எக்சைட்டிங், திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் எர்த் குவேக் ஐ அம் பீலிங் என்று இரண்டு அம்மணிகள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். பதினைந்து படிகள் கீழிறங்கிய பின்னரும் சிலர் பூகம்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். டீக்கடைகள் நிரம்பி வழிந்தன. கட்டிட வாசலில் நின்று கொண்டிருந்தோம், கை கழுவாத மாமா, அம்பி செத்த தள்ளி நில்லுடா, திரும்ப பூகம்பம் வந்து பில்டிங் தலையில விழுந்துடப் போவுது என்றார். மாமாவின் மொக்கை தாள முடியாததால் அவ்விடம் விட்டு நகன்றேன்.  பிரிந்த காதலர்ககள் கூட கைகோர்த்து தத்தமது தவறுகளை ஒத்துக்கொண்டிருந்தார்கள். எல்லாத்  தொலைக்காட்சிகளிலும் பூகம்பத்தைப் பற்றிய தலைப்புச் செய்தியே, "நான் ஹால்ல படுத்திருந்தேனுங்க பூகம்பம் வந்ததுல உருண்டு உள் ரூம் போய்ட்டேனுங்க" என்று ஒருவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக இது எதிர்க்கட்சியின் சதி என்று எந்தத் தலைவரும் அறிக்கை விடவில்லை. நிலநடுக்கம் ரிக்டர் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். நிலநடுக்கம் பீதியை கிளப்பியதோ இல்லையோ, நாம் இன்னும் பூமியில் மனிதர்களாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பலருக்கு நினைவுப் படுத்தியது.  மறுபடியும் எல்லோரும் பதினைந்தாவது மாடிக்கு போனோம், அழுவாத குறையாக கணிணியை ஆன் செய்து கடவுளிடம் வேண்டிக் கொண்டேன், மாதம் மூனுதடவையாவது நில நடுக்கம் வரணும் கடவுளே!!!!!!!!

எண்டு ஆஃப் த இசுடோரி -எர்த் குவாக் இன் எக்கனாமிக் சோன்.

Friday, August 24, 2012

உலகநாதன் தயிர் வாங்கப் போன கதை

        பாபநாசத்துல உலகநாதன்னு ஒருத்தன் இருந்தானாம், பேருதான் ’உலக’ நாதன் ஆனா தமிழ்நாட்டை விட்டு தாண்டிப்போனா பையனுக்கு டவுசர் கிழிஞ்சிடும். துரதிஷ்டவசமாக அவனுக்கு கல்கத்தாவில் வேலை கிடைத்தது. தட்டுத்தடுமாறி பாபநாசத்திலிருந்து கல்கத்தாவிற்கும் வந்துவிட்டான். கல்கத்தாவில் தன் ஊர்க்காரர் ஒருவரின் வீட்டில் தான் தங்கியிருந்தான். முதல் மூன்று நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். நான்காவது நாள் பையனுக்கு வந்தது கடும் சோதனை, அறையில் உள்ளவர்கள் அவனை அழைத்து தயிர் வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார்கள். தயிருக்கு இந்தியில் தாஹி என்று சொல்லியும் அனுப்பினார்கள். உலகநாயகனுக்கு இவ்விடத்திலுருந்தே கை நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது. வழியெங்கும் தாஹி தாஹி என்று பிதற்றிக்கொண்டே சென்றேன். சட்டென அவன் பின்னாள் பேரிரைச்சலுடன் ஒரு லாரி அவனை கடந்து சென்றது. அது உண்டாக்கிய பாஆஆஆம் என்ற ஒலியில் அதிர்ச்சி அடைந்தவன் சொல்லை மறந்துவிட்டான். கடைக்கும் வந்துவிட்டான். கடைக்காரர் அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்க முழிபிதுங்க விழித்தான். தயிர் பாக்கெட்டை சுட்டிக் காட்டி வாங்கிவிடலாம் என்றால், கருமம் அவன் கண் பார்வையில் படும் படி ஒரு தயிர் பாக்கெட் இல்லை. சரி தயிரை ஆங்கிலத்தில் சொல்லி வாங்கிவிடலாமே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் நமது நாயகனுக்கு சட்டென அதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. பட்டென அவன் தலையில் பல்பு ஒன்று எறிந்தது, அவன் ஒரு விஞ்ஞானியைப் போல் சிந்தித்தான், எட்டாவதில் அவன் படித்த அறிவியல் அவனுக்கு கைகொடுத்தது. கடைக்காரரைப் பார்த்து ஒரு விரலை நீட்டி, மில்க் மிங்கில்ட் வித் பேக்டீரியா ஒன் பாக்கெட் என்றான். கடைகாரருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை, பின் அவரும் தன் எட்டாம் வகுப்பு அறிவியல் ஞாபகம் வந்தவராய், “சாப் ஆப் கர்ட்(CURD) கோ பதாயா, டீகே டீகே” என்று சொல்லி சிரித்துக் கொண்டார். உலகநாதனும் பதிலுக்கு ஒரு டீகே டீகே சொல்லிவைத்துக் கொண்டான்.இதே போல் இன்னொருநாள் உலகநாதனை மண்ணெண்ணை வாங்கி வரச் சொன்னார்கள், அதற்கு அவன் மன்னிச்சுடுங்க அதுக்கு எனக்கு கெமிக்கல் ஈக்குவேசன் என்னானு தெரியாது என்று சொல்லிக் கொண்டே தயிர் வாங்கச் சென்றான். இப்பொதெல்லாம் உலகநாதன் வாலண்டியராகவே தயிர் வாங்க கிளம்பிவிடுகிறான். கடைக்காரரும் அவனைப் பார்த்தலே தயிரை எடுத்து கொடுத்துவிடுவார். 

PS:இந்த உலகநாதன் என்னும் கதாப்பாத்திரம் கற்பனையே, இப்பெயர் கொண்ட யாவரும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். 

Tuesday, August 21, 2012

இலக்கணம் - மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட தரம் வாய்ந்த தமிழ்த் திரைப்படம்

 2007   ஆம் ஆண்டு வெளியான இப்படியொரு திரைப்படத்தை இன்றுதான் பார்த்தேன் என்று நினைக்கும் போது வெட்கமாக இருந்தாலும் , இன்றையாவது காண நேர்ந்ததே என்றெண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இப்படம் முழுக்க வேற்று மொழி கலக்காத தமிழ் உரையாடல்கள். ஆதலால் இப்பதிவையும் முடிந்தவரை தமிழிலேயே எழுத முயல்கிறேன்.

கதைச் சுருக்கம்: சக மனிதர்கள் மேல் அளவு கடந்த அன்பு காட்டும் ஒரு பத்திரிக்கையாளனால் எந்த அளவிற்கு அவன் சுற்றம் நல்வழி அடைகிறது என்பதே!
                         படத்தின் கதையை விரிவாக விவரிக்க விரும்பவில்லை. என்னைக் கவர்ந்த சில இடங்களை குறிப்பிட்டு விடுகிறேன், முதலில் கவர்ந்தது படம் முழுக்க தமிழிலே உரையாடினாலும் கொஞ்சம் கூட மன அயர்வைத் தந்துவிடாத இயல்பான வசனங்கள். படம் முழுக்க பெரியாரின்  கருத்துத் தூவல்கள், வரிகளுக்கேற்ப இசை. எனக்குத் தெரிந்து இப்படத்தில் சில இடங்களில் சங்க இலக்கிய பாடல்களையும் ,பாரதியார் பாடல்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள், அதற்கேற்ப இசை அமைத்திருக்கிறார் பவதாரிணி. ஒரு இடத்தில் நாயகன் தமிழரசன், குடிக்க குவளையில் பால் சுமந்து வரும் தன் மனைவி கயல்விழியிடம் பெரியாரை படித்திருக்கிறாயா என்று கேட்கிறான், அதற்கு கயல்விழி, கடவுளே இல்லை என்று சொல்வாரே அவர்தானே என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுகிறாள். அதற்கு தமிழரசன் பால்ல சர்க்கரையே போடலையா என்று கேட்கிறான், அதற்கு கயல்விழி, இப்பிடி பால குடிக்காமலே சொன்னா என்ன அர்த்தம் என்கிறாள். உடனே தமிழரசன் நீயும் பெரியார படிக்காமலே சொன்னா என்ன அர்த்தம் என்று மடக்கி விடுகிறான். இப்படி பல இடங்களில் ரசிக்க வைக்க கூடிய அளவிற்கு காட்சிகளை செதுக்கியிடுக்கிறார் இயக்குநர். மனதை நெகிழ வைக்கிறது படத்தின் இறுதிக் காட்சி, யாரோ ஒரு தலைவர் இறந்து விடுகிறார் என்று ஊரெங்கும் கலவரம். அந்தக் கலவரத்தில் மாட்டிக்கொள்கிறாள் கயல்விழி. கலவரக்காரன் ஒருவன் எறிந்த கல் கயல்விழி தலையில் பட்டு மயக்கமடைகிறாள். கல்லெறிந்தவனை கயல்விழியின் மகள் பார்த்து விடுகிறாள். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறாள் கயல்விழி. ஆனால் சில நாட்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி அவள் மூளை முழுவதும்  செயல் இழந்துவிடுகிறது.அதனால் இறக்கும் தருவாயில் இருக்கும் அவளது  இதயத்தை வேறொரு இதய நோயாளிக்கு பொறுத்த தமிழரசனிடம் அனுமதி கேட்கிறார் மருத்துவர். அவனும் ஒத்துக் கொண்டு படிவத்தில் கையெழுத்து இடும் சமயத்தில் அந்த இதய நோயாளியில் கணவனும் அழைக்கப் படுகிறான், அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவன் கையெழுத்து இட வரும் நேரத்தில் தமிழரசனின் மகள் அவனைப் பார்த்து அவன்தான் தன் மீது கலவரத்தில் கல்லெறிந்தவன் என்று கூச்சலிடுகிறாள். தமிழரசனின் உறவினர்கள் அவனை வெறிகொண்டு தாக்கி, படிவத்தில் தமிழரசனிடம் கையெழுத்து இட வேண்டாம் என்கிறார்கள். தமிழரசன் அந்தக் கலவரக்காரனின் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து என் குழந்தைக்கு வந்த நிலைமை இவர்களுக்கு வர வேண்டும் என்று கையெழுத்துப் போட்டுவிடுகிறான். அந்த இரண்டு குழந்தைகளின் உச்சிதனை முகர்த்து உங்கம்மா உனக்கு கிடைச்சிடுவாங்க என்று கூறுவதுடன் படம் முடிவடைகிறது.
                          மேலும் இப்படத்தில் பழ.நெடுமாறன், தென்கச்சி கோ.சுவாமிநாதன், சுப.வீர பாண்டியன் போன்றோரும் நல்ல கதாப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கைக்கான,நல்ல படத்திற்கான,   இலக்கணம் இவ்விலக்கணம் ;-)
                            இந்தப்படத்தை தயவு செய்து இணையத்தில் தரவிறக்கம் செய்யாமல் கீழ்கண்ட இணைப்பை தொடர்பு கொண்டு வாங்கவும் 69  ரூபாய் மட்டுமே. இது போன்ற நல்ல படங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், பார்க்காமல் தவிர்ப்பதும் நாம் செய்து கொண்டிருக்கக் கூடிய அன்றாட பாவங்களில் ஒன்று. 
இப்படத்தின் இயக்குநர் சந்திரசெயன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அறிய முடியவில்லை. ஆனால் இப்படி ஒரு படம் எடுத்தவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். இவரைப் போன்ற ஆட்கள் தமிழ்த் திரையுலகிற்குத் தேவை.

Friday, August 17, 2012

வளையல்காரன்

சார் கண்ணாடி வளையல், கவரிங்  வளையல்,பெங்காலி வளையல், குஜராத்தி வளையல், எனப் பலப் பல டிசைன் இருக்கு சார் ஒரே ஒரு ஜோடி வாங்கிக்குங்க சார், நான் கண்டுகொள்ளாத  போதும் கூவிக்கொண்டே என் பின்னால் வந்து தொந்தரவு செய்தான் வளையல்காரன். சார் ஒரு ஜோடி வளையல் பதினஞ்சு ரூபாய் தான் சார், ஒரு ஜோடி வாங்கிக்குங்க சார், எரிச்சலுடன் அவனை முறைத்துவிட்டு முன்னே நகர்ந்தேன். அவனும் விடுவதாயில்லை, வளைகாப்பு வளையல், கல்யாண வளையல், சதுர வளையல், ஜிகினா வளையல் என சகல விதம் இருக்கு சார் நின்னு பாருங்க சார்; யோவ் இத்தினி பேர் இருக்கும்போது என்ன ஏன் சொரன்டுற, 24  வயசாகியும் ஒரு ஃபிகர் கூட மடியல நான் வளையல் வாங்கி என்ன செய்ய? வட்டம் போடவா? என்று வெடித்தே விட்டேன். சிறுதும் இடைவெளி   விடாமல் மெல்லிய புன்னகையுடன் சொன்னான், சார் அம்மாவுக்கோ தங்கச்சிக்கோ வாங்கிட்டுப் போங்களேன் சார். வளையல் போன்றொதொரு வட்டம் தெரிந்தது  அவன் தலைக்குப் பின்னால்.

கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் 1,2 - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

                            இங்கே நான் குறிப்பிடப்போவது படத்தைப் பற்றிய கதை அல்ல, ஆக கதை படிக்கும் எண்ணத்துடன் இப்பதிவை படிக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். அனுராக் இப்படங்களை சுப்பிரமணியபுரம், போன்ற படங்களைப் பார்த்த தாக்கத்தில் எடுத்ததாக ஒத்துக் கொண்டாலும் நாம் பாராட்ட வேண்டிய சில தனித்துவமான விஷயங்கள் ஏக இருக்கின்றன. முக்கியமாக, மிக முக்கியமாக சினேகா கன்வாக்கரின் இசை, இரு படங்களும் சேர்த்து சர்தார் கானின் பிறப்பிலிருந்து அவன் குடும்பமே வன்முறையால் அழியும் வரையிலான கால அளவிற்கு எடுக்கப்பட்டிருக்கிறது (1955-2006). ஆக அந்த அந்த காலத்திற்கு ஏற்றார்போல் இசை அமைத்தற்காக அவரை எப்படி வேண்டுமென்றாலும் போற்றாலும், மேற்கத்திய இசை கொஞ்சமும் கலக்காமால் போஜ்பூரிய பாணியில் ஆர்மோனிய இசை சேர்த்து அவர் போட்டிருக்கும் தார் பிஜிலி பாடலும், பூஸுக்கே டேரிமே பாடலும், உமெனியா பாடலும் வெகுவாக ரசிக்க வைத்தது. இவை  முழுக்க முழுக்க இந்திய இசைக்கருவிகளை வைத்து இசை அமைத்தது என்று அடித்து சொல்லலாம். முதல் பாகத்தில் வரும் ஹிப்பிகள் வகை இசைக் கோர்வையான  I am a hunter பற்றி சொல்லியே ஆக வேண்டும், அந்தக் காலத்து பாப் மார்லே பாடல்கள் போன்று ஜமைக்கன் ஸ்லாங்கில் இதை ஒலிப்பதிவு செய்திருப்பது இசையமைப்பாளரின் நுண்ணறிவைக் காட்டுகிறது. 
                          இவையெல்லாம் போக குண்டர் பரம்பரையின் குலக் கொழுந்துகளான பெர்பெண்டிகுலர், டிஃபனைட் (பேரப் பாரு) போன்றோருக்கு போட்டிருக்க கூடிய வெஸ்டெர்ன் ஸ்டைல் ஓபனிங் இசைக் கோர்வைகளும் அற்புதம். இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே ரோட்டில் நடந்து சென்றால் எவைனயாவது தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு வெறியுடன் தட்டி இருக்கிறார்கள் (ஆக இதை வீட்டில் தனியாக இருக்கும் போது மட்டும் கேட்கவும்). படம் முழுக்க கெட்ட வார்த்தை என்றால் பாடல்களிலும் ஒரே வசை தான். கே கே லூங்கா என்றொரு பாடல் இரு படங்களில் பிண்ணனி இசையாக தழுவி வருகிறது, அதற்கு அர்த்தம் தேடி கூகுளிட்டால் கூகுள் கழுவி கழுவி ஊத்துகிறது. இப்படி படத்தின் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். ட, டா, டி,டீ வரிசையில் ஆரம்பித்து வார்த்தைளே இல்லாமல் இந்தியில் உள்ள அனைத்து எழுத்துகளும் கொண்ட ஒருபாடல், படத்துடன் கேட்காமல் தனியாக கேட்க அருமையாக உள்ளது. மொத்தத்தில் இப்படத்தை "A Musical Gangster film with  a lot of humor" என்று சொல்லிவிடலாம். மேலும் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார், உதாரணமாக இருவர் புகை பிடித்துக் கொண்டிருப்பது போல் காட்சி, கேமெரா புகைக்கு நடுவில் புகுந்து செல்லும் போது நமது மூக்கில் புகை ஏறுகிறது, அவ்வளவு துல்லியம். 
                                     இப்படங்களுக்கு பேக்ரெளண்ட் ஸ்கோர் நம்மூர் ஜீவி.பிரகாசு. இந்தியில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். கதையில் சிறப்பாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே இட்ட பதிவை வைத்து கதையை தெரிந்து கொள்ளுங்கள். இப்படங்களைப் பார்க்கச் சொல்லி நான் உங்களை வற்புறுத்தப் போவதில்லை. ஆனால் கண்டிப்பாக பாடல்கள் எல்லாத்தையும் கேட்டுவிடுங்கள். 

Tuesday, July 24, 2012

இருட்டின் நிறம் இளமஞ்சள் சிவப்பு

எல்லோரும் துயிலச் செல்லும்
இரவு வேளைகளில் நாங்கள்
கண் விழிக்கிறோம்
எங்களது இருட்டு
எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு
வெளிச்சம் நிரப்பி
அனுப்படுகிறது!
நள்ளிரவில் இங்கிருந்து
வெள்ளைக்காரனுக்கு கூச்சமில்லாமல்
குட் மார்னிங் சொல்கிறோம்!
தினந்தோறும் வானத்தில் மட்டுமே
விடியலைப் பார்க்கிறோம்
இரவையும் பகலையும்
இருட்டையும்  வெளிச்சத்தையும்
தரம்பிரிக்கத்தெரியாது தவிக்கிறோம்.  
கண்மூடித் தூங்கும் பொழுது
எங்கள் கண்களிலும் 
ஒரு இருட்டு தெரிகிறது
ஆனால் எங்களின் இருட்டு மட்டும்
ஏன் இளமஞ்சள் நிறத்தில் இருக்கிறது?

Wednesday, July 11, 2012

ஆதாமிண்டே மகன் அபு ആദാമിന്റെ മകൻ അബു -2011

               அப்பாவிற்கு பணம் அனுப்பி நாளாகிறது, வீட்டிற்கு ஃபோன் பேசி மாதங்களாகிறது. இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என்று இயந்திரத்தனமாக  வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நேரத்தில், ஒரு மழை இரவில் இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. விருப்பமில்லாமல்தான் திரையிட்டேன், ஆனால் படம் முடிந்தவேளையில் என்னுள் பீறிட்டு எழுந்த கண்ணீரை பாத்தி கட்டி எழுத்தாக மாற்றி இப்படத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன்.

Premise: எழுபதைக் கடந்த ஒரு ஏழை இசுலாமிய தம்பதியினர் ஹஜ் புனித யாத்திரை செல்லப் படும் பாடு!

சில குறிப்புகள் : அபு ஒரு ஏழை வாசனைத்திரவிய விற்பனையாளர், அவருக்கு ஒரு மனைவி ஆயிஷா. அவளுக்குப் பேச்சுத்துணை, அவர்கள் வீட்டில் வளரும் பசுக்களும், ஒரு பலா மரமுமே. ப்சுமையும், குளிர்ச்சியும் நிறைந்த கிராமத்தின் நடுவே அவர்கள் வீடு. எல்லாம் இருந்தும் அவர்களுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு ஏக்கம், ஹஜ் யாத்திரை செல்ல சீக்கிரம் பண்ம் சேர்த்து விட வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு, பெற்றவர்களைப் பற்றி கவைப்படாமல் துபாயில் தன் சம்பாத்யம், தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்பவன். அவனை நினைத்து அடிக்கடி ஆயிஷா அழுவதுண்டு. 
                           அந்த ஊரின் ஹாஜியார் அடிக்கடி மெக்கா, மதினா போய் வந்தவர். அந்த ஊரிலே பணக்காரரும் கூட. அவரிடம் சென்று அபு மக்கா செல்வதற்கான வழிமுறைகளை (Procedures) கேட்கிறார். ஹாஜியார் அடிக்கடி துபாயில் இருக்கும் தன் மகனைப் பற்றி பெருமை பேசிக் கொள்(ல்)வார். தன் மகன் தனக்கு கார் வாங்கித் தந்தான், மூன்று முறை மக்கா கூட்டி சென்றான், இப்படிப் பல. இதையெல்லாம் முகத்தில் புன்னகையோடும், கண்களில் சிறு கலக்கத்தோடும் கேட்டுக் கொள்வார் அபு. அபுவின் கண்கள் இப்படி பல இடங்களில் கலங்கியபோதெல்லாம் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி பீறிட்டு எழும். அது ஏன் என்று நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஹாஜியார் அபுவிடம் தனக்கு தெரிந்த ஒரு ட்ராவல் ஏஜென்சியின் விலாசத்தைக் கொடுத்து தான் அனுப்பியதாக கூறச்சொல்கிறார். 
                                   இங்கிருந்து ஆரம்பிக்கிறது ஆதாமின் ஹஜ் ஆயத்தப் பணிகள், மறுநாள் வெள்ளன எழுந்து கோழிக்கோட்டில் இருக்கும் அந்த மக்கா, மதினா ட்ராவல் ஏஜென்சியின் அஷ்ரஃபை சென்று பார்க்கிறார். அவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லாததை அறிந்து அவருக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான வழிமுறைகளை சொல்கிறான் அஷ்ரஃப். அவருக்கும், அவர் மனைவிக்கும் பாஸ்போர்ட் அப்ளை செய்யும் பணிகளில் துரிதமாக இறங்குகிறார் அபு. ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரைத் தேடிப் போலீஸ் வந்ததென ஆயிசா அவரிடம் அழுதுகொண்டே சொல்கிறார். பதறிப்போன அவர் தான் எந்த ஒரு தவறும் செய்துவிடவில்லையே என்று அல்லாவை பிரார்த்திக்கிறார். மறுநாள் காலை ஊரில் அதிகம் படித்தவரான கோவிந்தன் மாஸ்டரின் துணையுடன் போலீஸ் ஸ்டேசன் செல்கிறார். அங்கு போலீஸ் அவரைக் கேள்விகளால் துளைத்து எடுக்கிறது. நமக்குள்ளும் ஒரு பதற்றம் பீறிடும் வேளையில் அந்தப் போலீஸ்காரர் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காகத்தான் அபுவை அழைத்ததாக கூறுகிறார். அந்தக் காட்சியில் அபுவின் அறியாமையை இயக்குநர் அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார். 
                              கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கிறார் ஒரு ட்ரெங்குப் பெட்டியில், பெரும்பாலும் கடுஞ்சாயாவும், ரொட்டியுமே அவரின் உணவாகிப் போகிறது. தாகத்திற்கு சோடா குடிக்க பலமுறை யோசித்து பின் கிணற்றுத்தண்ணீரை பருகுகிறார். இப்படியெல்லாம் சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். ஆடு மாடுகளை விற்று விடுகிறார், அப்போது ஆயிசாவின் கண்கள் லேசாக கலங்குகிறது, நம் கண்களும்தான். மர வியாபாரியான ஜான்சனிடம் பலா மரத்தை ஐம்பதாயிரத்திற்கு விலை பேசிவிட்டார். ஒரு வாரத்தில் பணம் தருவதற்காக ஜான்சன் வாக்கு கொடுத்துவிட்டான். பணமும் சேர்த்துவிட்டார், தான் கொஞ்சநாளில் மக்கா செல்வதாகவும், தங்களுக்கு ஏதாவது கெடுதல் செய்தால் மன்னித்து விடுமாறும் சுற்றத்தார்களிடம் சென்று விருந்தோம்பல் செய்கிறார். அவர்கள் இவரை ஆரத்தழுவி கண்ணீர் மல்குகிறார்கள். குறிப்பாக கோவிந்தன் மாஸ்ட்டர் இவரைத்தன் அண்ணன் போலவே பாவிக்கிறார். முன்பொரு காலத்தில் இவரிடம் நிலத்தகரறில் சண்டையிட்ட சுலைமான் வாதம் வந்து படுத்துக் கிடக்கிறான். அவனிடம் சென்று தன்னை மன்னிக்குமாறு கேட்கும் காட்சியில் நம்மில் புதைந்து கிடக்கும் ஈகோ என்னும் அரக்கனின் கழுத்தை கத்தி கொண்டு அறுக்கிறார். சுலைமான் இவரின் கைகளை பிடித்துக் கொண்டு அழுகிறான். 
                                          ஒரு வாரம் கடந்தது. ஜான்சனின் மரக்கடைக்கு செல்கிறார். ஜான்சன் சிரித்த முகத்துடன் அவருக்கு ஐம்பதாயிரத்தைக் கொடுக்கிறார். அதை கைகள் நடுங்க ஒரு வெற்றிக் களிப்புடன் வாங்கிக் கொள்கிறார் அபு. மெல்லத்தயங்கியவாறே ஜான்சன் அவரிடம் தான் பலா மரத்தை வெட்டி விட்டதாகவும், மரம் உள்ளீடற்று(hollow) இருப்பதாகவும், அது பலகை செய்ய பயன்படாது, விறகாகத்தான் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறான். அதிர்ச்சியில் உறைந்த அபு, ஜான்சனிடம் பின் ஏன் எனக்கு பணம் தந்தாய் என்று கேட்கிறார். அதற்கு ஜான்சன், நீங்கள் நல்லபடியாக மக்கா போக வேண்டும் என்றுதான் என்கிறான்.ஆனால் அபு அதை வாங்க மறுத்துவிடுகிறார். விஷயம் கேள்விப் பட்டி கோவிந்தன் மாஸ்ட்டர் தயங்கியவாறே அபுவிற்கு ஒரு ஐம்பதாயிரம் கொடுக்க முற்படுகிறார். ஆனால் கடன் வாங்கி தான் ஹஜ் செல்ல விரும்பவில்லை என்று மறுத்துவிடுகிறார். இந்த இரண்டு இடத்திலும் தன் தன்மானத்தை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் அபு. 
                                                இரவில் ஆயிஷாவிடம் அடுத்த வருடம் நாம் ஹஜ்  போய்க் கொள்ளலாம் என்கிறார். அதற்கு ஆயிசா, அபுவை மட்டும் ஹஜ் போய் வருமாறு கேட்கிறாள். அதற்கும் அபு மறுத்து விடுகிறார். காலையில் சீக்கிரம் எழுந்து ட்ராவல் ஏஜெண்ட் அஷ்ரஃபை சந்திது தாங்கள் இந்த வருடம் ஹஜ் பயணம் வரவில்லை என்று கூறுகிறார். அதற்கு அஷ்ரஃப் ஐம்பதாயிரம் தான் தருவதாகவும், இறந்து போன தன் பெற்றோர்களை பணத்தட்டுப் பாடினால் ஹஜ் அனுப்ப முடியாத குறையை உங்களை அனுப்பி தீர்த்துக் கொள்கிறேன் என்கிறான். அதற்கு வெடித்து அழும் அபு, உங்களைப் போல ஒரு மகன் பெற்றதனால் அவர்கள் ஆயிரம் முறை ஹஜ் சென்ற பலனை அடைந்து விட்டதாக கூறி அஷ்ரஃபின் உதவியையும் மறுத்து விடுகிறார். அவர் ஒவ்வொருவரின் உதவியை மறுக்கும் போதும் ஒரு விசயத்தை நாம் உணர முடிகிறது. பெற்று வளர்த்த மகன் தனக்கு எதுவும் செய்யாத விரக்தியிலேயே மற்றவர்களின் உதவிகளையெல்லாம் மறுத்து, ஹஜ் போனால் தன் சொந்தச் செலவிலேயே போவேன் என்று உறுதியோடிருக்கிறார்.
                                                    இரவு உண்விவின் போது ஆயிசாவிடம் , தாங்கள் விற்ற கால்நடைகளை திரும்ப வாங்க வேண்டும் என்று சொல்கிறார். இரவு விடிகிறது, எழுந்து போய் வெட்டப் பட்ட பலா மரத்தின் அருகில் சிறு குழி தோண்டி மரக் கன்றை நடுவதோடு படம் நிறைவடைகிறது. அந்த நடுதல் நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது.


நான் பல மாதங்களுக்கு பின் ஊருக்கு செல்ல முடிவெடுத்து விட்டேன்,  ஆதாமின் மகன் அபுவிற்கும் ,கருப்பையாவின் மகன் குமரேசனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவர் ஹஜ் போக வேண்டும், இவருக்கு ஒரு வீடு கட்ட வேண்டும்.

Tuesday, July 10, 2012

இசைப் பிரியர்கள்இதைத் தவறவிடாதீர்கள்

                                       வெகு நாட்களாக மனதை உறுத்தி வந்த ஒரு விஷயம், இன்று கொட்டித் தீர்த்து விடுகிறேன். முகநூலிலும், துவிட்டரிலும் கீழ்க்கண்ட ஒரு பாடலை முன்பொரு காலத்தில் பகிர்ந்திருந்தேன், லயா ப்ராஜக்ட் என்ற இசைக்குழுவினரால் கம்போஸ் செய்யப் பட்ட ஒரு பாடல், 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களைக் கொண்டு அவர்கள் நல் வாழ்வுக்காக தொடங்கப் பட்ட ஒரு இசைக் குழு. அவர்கள் இந்திய இசைக் குழு அல்ல, ஆயினும் தமிழக மீனவ வாழ்க்கையை மையமாக வைத்து அய் ல சா என்று ஒரு பாடலும், நாகூர் இசுலாமிய குருமார்களை வைத்து ‘யா அல்லா’ என்றொரு பாடலும் தமிழில் வெளிவந்திருந்தது. வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனபின்ன்னும் நம்மில் பலருக்கு இந்தப் பாடல் தெரியாமல் இருப்பது வெட்கக் கேடான ஒரு விசயம். அப்படி ஒன்றும் மோசமான பாடலை அவர்கள் கொடுத்துவிடவில்லை. இந்தப் பாடலை மூன்று வருடங்களுக்கு முன் கேட்க நேர்ந்தது, அன்றிலிருந்து இன்று வரை தினம் ஒருமுறையாவது என்னைக் கேட்கத்தூண்டிவிடும் இப்பாடல்.இந்தியாவின் பாரம்பரிய இசையை மையமாக வைத்து ஐலசா பாடலை கம்போஸ் செய்திருப்பார்கள். இப்பாடலை நீங்கள் முன்னமே கேட்டிருந்தால் தயவு செய்து பகிருங்கள், இல்லாவிடில் தயை கூர்ந்து ஒரு முறை கேளுங்கள். ஒரு நல்ல இசைக் கோர்வையை இசை ஆர்வலர்கள் தவறவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப்பதிவு . உங்களுக்கு பிடிக்காமல் போகாது என்ற நம்பிக்கையுடன் பகிர்கிறேன்,

பாடல் : ஐ ல சா


பாடல் : யா அல்லா

Monday, July 9, 2012

மனம் எனும் மாயக் குரங்கு

என் கண்கள் 
இறுக்கமாக கட்டப்பட்டன
நான் தீயதையே பார்க்கிறேனாம்....

என் காதுகள்
பஞ்சால் அடைக்கப்பட்டன
நான் தீயதையே கேட்கிறேனாம்....

என் வாய்
துணிகள் கொண்டு பொத்தப்பட்டன
நான் தீயதையே பேசுகிறேனாம்....

என் உடல் 
யாருமற்ற தீவில்
தூக்கி வீசப்பட்டது

என் மனம் 
தன் கோரைப் பல் கொண்டு
என் உடலை கிழித்து வெளிவந்து
அவர்கள் தீயது என்று சொன்னதை 
தேடிச் சென்றது!!!

Saturday, July 7, 2012

தமிழ் சினிமாவின் பசலைப் பாடல்கள்

இது சத்தியமா இலக்கியப் பதிவு அல்ல தொடர்ந்து படிக்கவும்

               சங்க கால இலக்கியங்களில் பசலை நோய் என்ற ஒன்றை அடிக்கடி குறிப்பிடுவார்கள். திருக்குறளில் கூட காமத்துப்பாலில் ஒரு அதிகாரத்தில் தலைவனைக் காணாத தலைவியின் அழகு சுருங்கி பசலை நோய் பீடித்தது போல் ஆனாள் என்று கூறுவார்.ஆக பசலை நோய் என்பது தலைவனைப் பிரிந்த சோகத்தில் தலைவிக்கு வருவது. 
                 என்னுடைய விருப்ப பாடல்களின் ஒரு பெண் தனியாக பாடிய பாடல்களே அதிகமாக இருக்கும். அதாவது ஆண் காதல் தோல்வியில் பாடும் சோகப் பாடல்கள் போல பெண் ஆணை நினைத்துப் பாடும் மோகப் பாடல்கள், நன்றாக கவனியுங்கள் சோகம் அல்ல மோகம். இவ்வகையான பாடல்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவாகவே வந்துள்ளன. சமீபகாலமாக தமிழ் இளைஞர்கள் சோகப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவதால் இவ்வகையான பாடல்கள் வருவதே இல்லை. இவ்வகையான பாடல்களுக்கு என்னபெயர் என்று தெரியாமல் நானே தாந்தோன்றித்தனமாக பசலைப் பாடல்கள் என்று வைத்துவிட்டேன். இலக்கியவாதிகள் மன்னிக்க. 
                          எனக்கு விருப்பமான சில பசலைப் பாடல்களைக் காணலாம், இந்த பாடல்களின் வீடியோக்களை ஆவென்று பாராமல் உன்னிப்பாக வரிகளை கேளுங்கள், அனைத்தையும் கேளுங்கள் ஆண்மகனென்ற வீரியம் கொள்ளுங்கள்.

1) படம் - அரசாட்சி 
    பாடல் - இருபது வயசு ஆர்வக்கோளாறு
   பிடித்த வரிகள் - எல்லாமே
                                     
   
   
2) படம் - காதல் கவிதை 
    பாடல் - தத்தோம் தக்திமி தோம் இசை - இளையராஜா
 பிடித்த வரிகள் -யுத்தம் செய்யாத தேகம், நீ மோகம் கொண்டு போராடு,முத்தம் என்றாலே யாகம் வாய் நீரில் நீயும்  நீராடு

3)  படம்:  ஆயுதம் 
     பாடல்: ஆலகால விஷம் சிவனே இசை: தீனா
     பிடித்த வரிகள்: தப்பே இல்லா தப்பு, இது தசைகள் செய்யும் நட்பு 

4) படம் : சாமுராய் 
    பாடல் : ஒரு நதி ஒரு பெளர்ண்மி
   பிடித்த வரிகள் : என் தேகக் கதவு ஜன்னல் எல்லம் திறந்து வைக்கும் 
   ஒருவன், மேலும் பல


5) படம் : காதல் கோட்டை
    பாடல் : மொட்டு மொட்டு மலராத மொட்டு
    

6)படம்: கலாபக் காதலா
   பாடல் : தோகை விரித்தொரு ஆண்மயில்
   பிடித்த வரிகள்: நூறு பெண்களை நீயும் ஏற்றால் நூறில் ஒன்றென நானும்   வாழ்வேன்

Not but not least 
7) படம்: புதுப்பட்டி பொன்னுத்தாயி 
    பாடல் : ஊரடங்கும் சாமத்திலே இசை: இளையராஜா
    பிடித்த வரிகள் : எல்லாமே


பின்குறிப்புகள் : 1) இந்த வகையான பாடல்கள் போல் பல வந்தாலும் இப்பாடல் வரிகளுக்காக நான் இதை திரும்பத் திரும்ப கேட்பதுண்டு. இலை மறை காயாக ஒரு பெண் ஆண் மகன் மீதுள்ள ஆசையை, காதலை, காமத்தை வெளிப்படுத்தும் படியான பாடல்கள், எந்த இடத்திலும் பச்சையான அர்த்தம் வராமல் கவனமாக எழுதிய பாடலாசிரியர்க்ளுக்கு நன்றி
   2) இந்தியா இருக்குற நிலைமையில இப்பிடி ஒரு பதிவு தேவையாடா கோமுட்டினு நீங்க வினவலாம், இருபத்திநாலு மணி நேரமுமா இந்தியா வல்லரசாகிறதப் பத்தி யோசிக்கிறது, அப்பப்போ இப்பிடி எண்டெர்டெயினும் பண்ணனும்ணே!!!;-))

Wednesday, July 4, 2012

மகாநகர்- 1963 মহানগর -1963 -ஒரு பார்வை

              கடந்த ஒரு வாரமாகவே கழுகுகள் என்னைக் கொத்தி தின்பது போன்றதொரு கனவு, அப்படி ஒரு நள்ளிரவில் வந்த இந்த கழுகு வகையறாக் கனவால் சட்டென கண்விழித்தேன். தூக்கம் தொலைந்த அந்த இரவில் வேறென்ன செய்ய பதிவிறக்கம செய்து வைக்கப் பட்டிருந்த முப்பது GB  சத்யஜித ரே படங்களில் மகாநகரை திரையிட்டேன். இனி அதைப் பற்றிய சில குறிப்புகள்.
Premise: ஒரு பெரு நகரத்தில வாழும் நடுத்தரக் குடும்பத்தில் கணவன் சம்பாத்தியம் பற்றாமல் போய், தன் மனைவிய வேலைக்கு அனுப்பிவிடுவதால் அவனுக்கு ஏற்படும் மனத் தடுமாற்றங்களும், அவளுக்குள்  ஏற்படும் மாற்றங்களும்.
                             சில குறிப்புகள்:  மேற்கண்ட ஒரு வரி வாசகமே கதையின் கரு. சுப்ரதனின் குடும்பம் அழகானது, அழகான மகன், மிக அழகான மனைவி மற்றும் தன் தாய் , தந்தை, தங்கையுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறான். வங்கியில் கணக்கராக பணி புரிந்தும்,பகுதி நேர ஆசிரியனாக பணி புரிந்தும் அவனால் குடும்பச் சுமை தாக்குப் பிடிக்க இயலவில்லை. ஆதாலால் தன் மனைவியை வேலைக்கு அனுப்புவதை பற்றி சிந்தித்துக் கொண்டே சாலையில் நடந்து வருகிறான். பின் வரும் காட்சிகளில் அவன் தன் மனைவி ஆரத்தியிடம் உரையாடி அவளின் சம்மதத்தையும் பெறுகிறான். ஆனால் இந்த விஷயத்தில்  அவளின் மாமா, மாமிக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அவளின் மாமா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். கண்பார்வை மெல்ல மங்கிக் கொண்டே வருகிறது. கண்ணாடி வாங்க அடிக்கடி சுப்ரதனிடம் பணமும் கேட்டு வருகிறார். ஆனால் தற்போது சுப்ரதனால் தந்தைக்கு மூக்கு கண்ணாடி வாங்கித் தர முடியாத அளவிற்கு பணச்சிக்கல்.எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி ஆரத்தி வேலைக்கு செல்கிறாள். வீடு வீடாக சென்று துணிதுவைக்கும்  எந்திரத்தைப் பற்றி இல்லத்தரசிகளுக்கு டெமோ காட்டும் வேலை. இப்படி அவள் வேலைக்கு செல்வதால் அவளுக்கு கிடைக்கும் அனுபவமும், சமூக விழிப் புணர்வுமே  மீதிக்கதை.
                           அவள் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு ஆங்கிலேயப்  பெண்மணியும் அதே வேலைக்கு சேர்கிறாள், இருவரும் நெருங்கிய தோழிகளாகிறார்கள். அவள் இவளுக்கு உதட்டு சாயம் பூசி விடுகிறாள். ஆரத்தி கூச்சப் பட்டு அதை அழித்து விடுகிறாள். பின்வரும் காட்சியில், யாருமில்லாத தனிமையில் தனக்கு உதட்டு சாயம் பூசி அழகு பார்க்கும் காட்சியில், ரே ஒரு இந்தியப் பெண்ணின் அழகான நாணத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதே நேரம் அவளின் கைப்பையில் அந்த உதட்டுச் சாயத்தை பார்த்து பதறும் சுப்ரதனின் நிலையையும் தெளிவாக காட்சிப் படுத்தி இருக்கிறார்.
                        வேலையை மிகவும் ரசித்து செய்கிறாள், இவளால் நிறை லாபம் அடைகிறது கம்பெனி. ஆக சம்பளத்துடன் தாங்கள் விற்கும் ஒவ்வொரு எந்திரத்திற்கும் கமிசன் கேட்கலாம் என்று ஆரத்தியும் அவள் தோழிகளும் முடிவெடுக்கிறார்கள். தங்களின் பிரதிநிதியாக அந்த வெள்ளைக்கார பெண்மணியை தேர்வு செய்கிறார்கள், ஏனென்றால் இது அவளின் யோசனையே. ஆனால் முதலாளிக்கு இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆரத்தியை தனியாக் அழைத்து இத்தனை வங்காள பெண்மணிகள் இருக்கையில் ஒரு வெளிநாட்டு பெண்ணை பிரதிநிதியாக அனுப்பியது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று பொடி போடுகிறான். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அந்த வெள்ளைக் கார பெண்மணி சில நாட்கள் விடுப்பு எடுக்கிறாள். இதைக் காரணமாக காட்டி அவளின் வேலையையும் ஆரத்தியின் தலையில் கட்டுகிறான் முதலாளி. அவளின் விடுப்பு நாட்கள் தொடர தொடர இவளுக்கு வேலைப் பளு கூடுகிறது. ஆக தன் சம்பளத்தை இரட்டிப்பாக்குமாறு கேட்கிறாள். அதற்கு முதலாளி, இரட்டிப்பு சம்பளத்திற்கு பதில் 50% சம்பள உயர்வும் , பதவி உயர்வும் தருகிறேன் என்று சொல்கிறேன். ஆனால் அவள் பார்க்கும் வேலை இருவர் பார்க்கும் வேலைக்குச் சமமானது. இப்படிப் பல இடங்களில் இலை மறை காயாக கம்யூனிசச் சித்தாந்தங்களை எளிய மக்களுக்கு புரியும் வகையில் காட்டுகிறார் ரே.
              முடிவில் அந்த வெள்ளைக் கார பெண்மணியின் மேல் இருந்த வெறுப்பையெல்லாம் சேர்த்து வைத்து அவளை ஒரு வேசி என்று திட்டி வேலையை விட்டு அனுப்புகிறான் முதலாளி. அவள் நடந்ததை ஆரத்தியிடம் கூறி அழுகிறாள். இது இங்கு நடந்து கொண்டிருக்கையில் சுப்ரதனின் வங்கி திவாலாகிறது. வேலையிழக்கிறான். மனம் நொந்து ஆரத்தியின் அலுவலகத்துக்கு வேலை தேடி வருகிறான். ஆனால் ஆரத்தியோ தன் முதலாளியிடம் சென்று அந்த வெள்ளைக்காரப் பெண்மணியிடம் மன்னிப்பு கேட்குமாறு வாக்கு வாதம் செய்கிறாள். விவகாரம் உக்கிரமடைந்து தன் வேலையை துச்சமென தூக்கி எறிகிறாள். மெல்லப் படியிறங்கி வருகையில் கணவனைப் பார்க்கிறாள் , அவன் நெஞ்சில் முகம் புதைத்து நடந்ததை கூறி அழுகிறாள். அவளும் வேலையை விட்டதை நினைத்து அவன் அதிர்ச்சி அடைகிறான். அவள் அவன் கண்களை உற்று நோக்கி தன்னை மன்னிக்குமாறு கேட்கிறாள். அதற்கு அவன் இந்த மாநகரமே நமக்கானது,  நீயென் ராணி உன்னை  விட்டால் எனக்கு வேறு யார் என்று ஆறுதல் சொல்கிறான். பின் அவர்கள் இருவரும் அந்த பெரு நகரத்தின் உயர்ந்த மாளிகைகளுக்கிடையில் தங்களுக்கென ஏதாவதொரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புறப் படுகிறார்கள்.
                 இப்படம் முடிந்ததும், ஏன் கழுகுகள் என்னை கொத்தி தின்பது போல் கனவு வந்தது என்பதை உணர்ந்துகொண்டேன், இப்பொழுதெல்லாம் அந்தக் கனவு வருகையில் தடிகொண்டு என்னைக் கொத்திய கழுகை விரட்டி அடிக்கிறேன் எனகென்று ஒரு மகாநகர் இருக்கும் நம்பிக்கையில்.
 

Tuesday, July 3, 2012

ஒரு ஆணாதிக்கவாதியின் வாக்குமூலம் - Confessions of a ஆணாதிக்கவாதி

                                  இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலும் எழுதுவதற்காக ஆணாதிக்கதிற்கு நிகரான ஆங்கிலச் சொல்லை கூகிளில் தேடினேன். I have found some approximate words related to it, not an exact word. அப்படியென்றால் இந்த வார்த்தையும், இழிநிலையும் என்னைச் சுற்றி உள்ள சமூகத்தில் தான் நடைமுறையில் உள்ளனவா?. இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது நண்பர் ஒருவரின் முகநூல் அப்டேட்டே! அதில் ஒரு நடிகையை வேசியாக சித்தரித்து எழுதியிருந்தார். அவரைப் பற்றி குறை சொல்லப் போவதேயில்லை இந்தப் பதிவு. இது ஆணாதிக்கவாதியான என் வாக்குமூலம் அவ்வளவே!! ஒரு பெண்ணை இழிவாக பேச அவள் பெண்ணென்ற ஒரு தகுதி போதும், அதுவும் அவள் நடிகையாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். உண்மையிலேயே ஒரு பெண்ணை உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் அணு அணுவாக ரசிப்பவன் ஒரு ஆணே. தன்னால் அடைய முடியாத ஒரு பெண்ணைப் பற்றி தரக் குறைவாக பேசும்போது அவளை வன்மையாக புணர்ந்தது போல ஒரு காமநிலைப் பரவசம் ஏற்படும், இதை ஒரு ஆணாக நானும் உண்ர்ந்திருக்கிறேன். என்னுடைய இயலாமையை ஆணாதிக்கம் என்ற பெயரில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு நடிகையோ ஒரு பெண்ணோ தரக் குறைவான ஆடை உடுத்தி வந்தால் கலாச்சாரத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசுவேன் ஆனால் யாருமற்ற தனிமையில் எனக்கு பிடித்த ந்டிகையை நினைத்து என்னை நானே சுயமாக கற்பழித்துக் கொள்வேன். சில பெண்கள் என்னிடம் மிகுந்த கர்வம் கொண்டு நடந்ததுண்டு. அவர்களைப் ப்ழிவாங்குவதற்காக ஆணாதிக்கத்தை நான் கையில் எடுத்ததுண்டு. குறிப்பாக அழகான பெண்கள் எல்லோருமே என்னைப் பொறுத்தவரை திமிர் பிடித்தவர்களே. இன்னும் சொல்லப் போனால் எந்த ஒரு பெண்ணாலும் காதலிக்கப் படாதவனே ஆணாதிக்கத்தில் அதிகமாக ஈடுபடுகிறான். ஒரு தடவை கூட காதலிக்காதவன் காதல் சோகப் பாடல்களையோ, பெண் எதிர்ப்பு பாடல்களையோ சத்தமாகப் பாடுகிறான், சமீபகாலமாக இது போன்ற பாடல்கள் அதிக அளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது எல்லாம் என் இயலாமைக்கு ஆறுதல் தருவது போன்று இருந்தாலும் அது வியபார தந்திரம் என்று ஏன் எனக்கு தெரியவில்லை.
           பெண்களிடம் ஒரு வேண்டுகோள் ஆணாதிக்கவாதிகளான எங்களிடம் கோபம் கொள்ளவேண்டாம், முடிந்தால் சிறிது பரிதாபம் காட்டுங்கள். ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் மனநிலை பாதிக்கப்பட்டே, நான் ஆணாத்திக்கவாதியாக நடந்து கொள்கிறேன். இந்தப் பதிவை எழுதி முடிக்கையில் என் காயங்களின் சீழ் வடிக்கப்ப்ட்டு குருதி வழிந்தது போன்றொரு உண்ர்வு. 

Monday, July 2, 2012

One Flew over the cuckoo's Nest(1975) சில குறிப்புகள்:


                        என் மனம் காமத்தின் பால் ஈர்க்கப்பட்ட நள்ளிரவுகளில், வேறு எதைப் பற்றியும் என் நினைவை திசை திருப்ப முடியாத இக்கட்டான சூழலில் என் பொறுமையை சோதிப்பதற்காக சில திரைப்படங்களை பார்ப்பது வழக்கம். படம் மிகவும் தொய்வாகச் சென்றால் என் மனக் குரங்கு மீண்டு காமக் கிளைக்கே தவ்வி விடும். அப்படி ஒரு சூழலில் இந்தப் படத்தை பார்க்க தொடங்கினேன். ஆரம்பம் முதல் ஒவ்வொரு நொடியும் தன் அபார நடிப்பால் என் கவனத்தை முழுமையாக அவர் பக்கம் ஈர்த்துவிட்டார் ஜாக் நிக்கல்சன். அவரின் ஷைனிங் படத்தைப் பார்த்து ஓரிரு நாட்கள் கண்ணாடி முன் அவரைப் போல் செய்து பார்த்ததுண்டு. பின வருவது One Flew over the cuckoo's Nest சில குறிப்புகள்:

படத்தின் Premise: புத்திசாலித்தனமான , வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கக் கூடிய ஒருவன் மனநல காப்பகத்தில் அடைக்கப் பட்டால் என்னாகும்.

குறிப்புகள் : சில திருட்டு, கொலை, வழக்குகளில் அடிக்கடி சிக்கி சிறை செல்லும் மெக், ஒரு மாற்றத்திற்காக இம்முறை மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் நடித்து மனநல காப்பகத்தில் அடைக்கப் படுகிறான். அங்கு அவனால் ஏற்படும் மாற்றங்களே முழுக்கதை. அவனுடைய செய்முறைகளை அங்கிருக்கும் மற்ற புத்தி சுவாதீனமற்றவர்களுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர்களை சிந்திக்க வைக்கிறான், கூடைப்பந்து விளையாடச் செய்கிறான், மீன்பிடிக்க திருட்டுத் தனமாக அழைத்துச் செல்கிறான். மற்றவர்களால் பெரிதும் நேசிக்கப் படுகிறான். குறிப்பாக சீஃப் என்று அழைக்கப்படும் செவ்விந்தியனுக்கு நெருங்கிய நண்பனாகிறான். இப்படி இவனால் செய்யப் படும் மாற்றங்கள் காலங்காலமாக தாங்கள் பின்பற்றி வரும் மருத்துவ முறைகளுக்கு எதிராக உள்ளதென சாடுகிறார் உயர் நிலைச் செவிலி ரேச்சல் மற்றும் அங்குள்ள சில மருத்துவர்கள். இப்படி ஒவ்வொரு நொடியும் நமக்கும் ஏதாவது கற்றுத்தரும் மெக்கிற்கு ஏற்படும் சோகமான முடிவே மீதி திரைப்படம். முழுக்கதையும் என்னால் விளக்க இயலாது, அது ஒரு நல்ல ரசிகனுக்கோ விமர்சகனுக்கோ அழகல்ல. முடிந்தால் ஒரு இரண்டு மணி நேரம் ஒதுக்கி இப்படத்தை பாருங்கள். 
                   இப்படத்தின் Premise ஐ தழுவியே Shasank Redemption எடுத்திருக்கக் கூடும். நமது இந்திய சினிமாக்களில் ஏகப் பட்ட படங்கள் இந்தப் படத்தின் பாதிப்பால் எடுக்கப்பட்டவை. அப்படி எடுத்தவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். ஏனெனில் இப்படத்தை தழுவி எடுக்கப்படம் ஒவ்வொன்றும் மனித நேயத்தை வளர்க்க நாம் எடுக்கும் முயற்சியே. உதாரணமாக, முன்னா பாய் MBBS, அறையெண் 305 கடவுள், முக்கியமாக போராளி போன்ற படங்களுக்கு நன்றி.
                   படம் முடிவடைகையில் நம்முள் உழன்று கெடுக்கும் பைத்தியத்தை தெளிய வைத்து விடுகிறார் இயக்குநர் மிலோஸ் ஃபோர்மன். இவரிம் அமேதியஸையும் முடிந்தால் பார்க்கவும். 
                

சொலவடை