அப்பாவிற்கு பணம் அனுப்பி நாளாகிறது, வீட்டிற்கு ஃபோன் பேசி மாதங்களாகிறது. இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என்று இயந்திரத்தனமாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நேரத்தில், ஒரு மழை இரவில் இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. விருப்பமில்லாமல்தான் திரையிட்டேன், ஆனால் படம் முடிந்தவேளையில் என்னுள் பீறிட்டு எழுந்த கண்ணீரை பாத்தி கட்டி எழுத்தாக மாற்றி இப்படத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன்.
Premise: எழுபதைக் கடந்த ஒரு ஏழை இசுலாமிய தம்பதியினர் ஹஜ் புனித யாத்திரை செல்லப் படும் பாடு!
சில குறிப்புகள் : அபு ஒரு ஏழை வாசனைத்திரவிய விற்பனையாளர், அவருக்கு ஒரு மனைவி ஆயிஷா. அவளுக்குப் பேச்சுத்துணை, அவர்கள் வீட்டில் வளரும் பசுக்களும், ஒரு பலா மரமுமே. ப்சுமையும், குளிர்ச்சியும் நிறைந்த கிராமத்தின் நடுவே அவர்கள் வீடு. எல்லாம் இருந்தும் அவர்களுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு ஏக்கம், ஹஜ் யாத்திரை செல்ல சீக்கிரம் பண்ம் சேர்த்து விட வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு, பெற்றவர்களைப் பற்றி கவைப்படாமல் துபாயில் தன் சம்பாத்யம், தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்பவன். அவனை நினைத்து அடிக்கடி ஆயிஷா அழுவதுண்டு.
அந்த ஊரின் ஹாஜியார் அடிக்கடி மெக்கா, மதினா போய் வந்தவர். அந்த ஊரிலே பணக்காரரும் கூட. அவரிடம் சென்று அபு மக்கா செல்வதற்கான வழிமுறைகளை (Procedures) கேட்கிறார். ஹாஜியார் அடிக்கடி துபாயில் இருக்கும் தன் மகனைப் பற்றி பெருமை பேசிக் கொள்(ல்)வார். தன் மகன் தனக்கு கார் வாங்கித் தந்தான், மூன்று முறை மக்கா கூட்டி சென்றான், இப்படிப் பல. இதையெல்லாம் முகத்தில் புன்னகையோடும், கண்களில் சிறு கலக்கத்தோடும் கேட்டுக் கொள்வார் அபு. அபுவின் கண்கள் இப்படி பல இடங்களில் கலங்கியபோதெல்லாம் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி பீறிட்டு எழும். அது ஏன் என்று நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஹாஜியார் அபுவிடம் தனக்கு தெரிந்த ஒரு ட்ராவல் ஏஜென்சியின் விலாசத்தைக் கொடுத்து தான் அனுப்பியதாக கூறச்சொல்கிறார்.
இங்கிருந்து ஆரம்பிக்கிறது ஆதாமின் ஹஜ் ஆயத்தப் பணிகள், மறுநாள் வெள்ளன எழுந்து கோழிக்கோட்டில் இருக்கும் அந்த மக்கா, மதினா ட்ராவல் ஏஜென்சியின் அஷ்ரஃபை சென்று பார்க்கிறார். அவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லாததை அறிந்து அவருக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான வழிமுறைகளை சொல்கிறான் அஷ்ரஃப். அவருக்கும், அவர் மனைவிக்கும் பாஸ்போர்ட் அப்ளை செய்யும் பணிகளில் துரிதமாக இறங்குகிறார் அபு. ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரைத் தேடிப் போலீஸ் வந்ததென ஆயிசா அவரிடம் அழுதுகொண்டே சொல்கிறார். பதறிப்போன அவர் தான் எந்த ஒரு தவறும் செய்துவிடவில்லையே என்று அல்லாவை பிரார்த்திக்கிறார். மறுநாள் காலை ஊரில் அதிகம் படித்தவரான கோவிந்தன் மாஸ்டரின் துணையுடன் போலீஸ் ஸ்டேசன் செல்கிறார். அங்கு போலீஸ் அவரைக் கேள்விகளால் துளைத்து எடுக்கிறது. நமக்குள்ளும் ஒரு பதற்றம் பீறிடும் வேளையில் அந்தப் போலீஸ்காரர் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காகத்தான் அபுவை அழைத்ததாக கூறுகிறார். அந்தக் காட்சியில் அபுவின் அறியாமையை இயக்குநர் அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கிறார் ஒரு ட்ரெங்குப் பெட்டியில், பெரும்பாலும் கடுஞ்சாயாவும், ரொட்டியுமே அவரின் உணவாகிப் போகிறது. தாகத்திற்கு சோடா குடிக்க பலமுறை யோசித்து பின் கிணற்றுத்தண்ணீரை பருகுகிறார். இப்படியெல்லாம் சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். ஆடு மாடுகளை விற்று விடுகிறார், அப்போது ஆயிசாவின் கண்கள் லேசாக கலங்குகிறது, நம் கண்களும்தான். மர வியாபாரியான ஜான்சனிடம் பலா மரத்தை ஐம்பதாயிரத்திற்கு விலை பேசிவிட்டார். ஒரு வாரத்தில் பணம் தருவதற்காக ஜான்சன் வாக்கு கொடுத்துவிட்டான். பணமும் சேர்த்துவிட்டார், தான் கொஞ்சநாளில் மக்கா செல்வதாகவும், தங்களுக்கு ஏதாவது கெடுதல் செய்தால் மன்னித்து விடுமாறும் சுற்றத்தார்களிடம் சென்று விருந்தோம்பல் செய்கிறார். அவர்கள் இவரை ஆரத்தழுவி கண்ணீர் மல்குகிறார்கள். குறிப்பாக கோவிந்தன் மாஸ்ட்டர் இவரைத்தன் அண்ணன் போலவே பாவிக்கிறார். முன்பொரு காலத்தில் இவரிடம் நிலத்தகரறில் சண்டையிட்ட சுலைமான் வாதம் வந்து படுத்துக் கிடக்கிறான். அவனிடம் சென்று தன்னை மன்னிக்குமாறு கேட்கும் காட்சியில் நம்மில் புதைந்து கிடக்கும் ஈகோ என்னும் அரக்கனின் கழுத்தை கத்தி கொண்டு அறுக்கிறார். சுலைமான் இவரின் கைகளை பிடித்துக் கொண்டு அழுகிறான்.
ஒரு வாரம் கடந்தது. ஜான்சனின் மரக்கடைக்கு செல்கிறார். ஜான்சன் சிரித்த முகத்துடன் அவருக்கு ஐம்பதாயிரத்தைக் கொடுக்கிறார். அதை கைகள் நடுங்க ஒரு வெற்றிக் களிப்புடன் வாங்கிக் கொள்கிறார் அபு. மெல்லத்தயங்கியவாறே ஜான்சன் அவரிடம் தான் பலா மரத்தை வெட்டி விட்டதாகவும், மரம் உள்ளீடற்று(hollow) இருப்பதாகவும், அது பலகை செய்ய பயன்படாது, விறகாகத்தான் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறான். அதிர்ச்சியில் உறைந்த அபு, ஜான்சனிடம் பின் ஏன் எனக்கு பணம் தந்தாய் என்று கேட்கிறார். அதற்கு ஜான்சன், நீங்கள் நல்லபடியாக மக்கா போக வேண்டும் என்றுதான் என்கிறான்.ஆனால் அபு அதை வாங்க மறுத்துவிடுகிறார். விஷயம் கேள்விப் பட்டி கோவிந்தன் மாஸ்ட்டர் தயங்கியவாறே அபுவிற்கு ஒரு ஐம்பதாயிரம் கொடுக்க முற்படுகிறார். ஆனால் கடன் வாங்கி தான் ஹஜ் செல்ல விரும்பவில்லை என்று மறுத்துவிடுகிறார். இந்த இரண்டு இடத்திலும் தன் தன்மானத்தை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் அபு. இரவில் ஆயிஷாவிடம் அடுத்த வருடம் நாம் ஹஜ் போய்க் கொள்ளலாம் என்கிறார். அதற்கு ஆயிசா, அபுவை மட்டும் ஹஜ் போய் வருமாறு கேட்கிறாள். அதற்கும் அபு மறுத்து விடுகிறார். காலையில் சீக்கிரம் எழுந்து ட்ராவல் ஏஜெண்ட் அஷ்ரஃபை சந்திது தாங்கள் இந்த வருடம் ஹஜ் பயணம் வரவில்லை என்று கூறுகிறார். அதற்கு அஷ்ரஃப் ஐம்பதாயிரம் தான் தருவதாகவும், இறந்து போன தன் பெற்றோர்களை பணத்தட்டுப் பாடினால் ஹஜ் அனுப்ப முடியாத குறையை உங்களை அனுப்பி தீர்த்துக் கொள்கிறேன் என்கிறான். அதற்கு வெடித்து அழும் அபு, உங்களைப் போல ஒரு மகன் பெற்றதனால் அவர்கள் ஆயிரம் முறை ஹஜ் சென்ற பலனை அடைந்து விட்டதாக கூறி அஷ்ரஃபின் உதவியையும் மறுத்து விடுகிறார். அவர் ஒவ்வொருவரின் உதவியை மறுக்கும் போதும் ஒரு விசயத்தை நாம் உணர முடிகிறது. பெற்று வளர்த்த மகன் தனக்கு எதுவும் செய்யாத விரக்தியிலேயே மற்றவர்களின் உதவிகளையெல்லாம் மறுத்து, ஹஜ் போனால் தன் சொந்தச் செலவிலேயே போவேன் என்று உறுதியோடிருக்கிறார். இரவு உண்விவின் போது ஆயிசாவிடம் , தாங்கள் விற்ற கால்நடைகளை திரும்ப வாங்க வேண்டும் என்று சொல்கிறார். இரவு விடிகிறது, எழுந்து போய் வெட்டப் பட்ட பலா மரத்தின் அருகில் சிறு குழி தோண்டி மரக் கன்றை நடுவதோடு படம் நிறைவடைகிறது. அந்த நடுதல் நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது.
நான் பல மாதங்களுக்கு பின் ஊருக்கு செல்ல முடிவெடுத்து விட்டேன், ஆதாமின் மகன் அபுவிற்கும் ,கருப்பையாவின் மகன் குமரேசனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவர் ஹஜ் போக வேண்டும், இவருக்கு ஒரு வீடு கட்ட வேண்டும்.
வெகு நாட்களாக மனதை உறுத்தி வந்த ஒரு விஷயம், இன்று கொட்டித் தீர்த்து விடுகிறேன். முகநூலிலும், துவிட்டரிலும் கீழ்க்கண்ட ஒரு பாடலை முன்பொரு காலத்தில் பகிர்ந்திருந்தேன், லயா ப்ராஜக்ட் என்ற இசைக்குழுவினரால் கம்போஸ் செய்யப் பட்ட ஒரு பாடல், 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களைக் கொண்டு அவர்கள் நல் வாழ்வுக்காக தொடங்கப் பட்ட ஒரு இசைக் குழு. அவர்கள் இந்திய இசைக் குழு அல்ல, ஆயினும் தமிழக மீனவ வாழ்க்கையை மையமாக வைத்து அய் ல சா என்று ஒரு பாடலும், நாகூர் இசுலாமிய குருமார்களை வைத்து ‘யா அல்லா’ என்றொரு பாடலும் தமிழில் வெளிவந்திருந்தது. வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனபின்ன்னும் நம்மில் பலருக்கு இந்தப் பாடல் தெரியாமல் இருப்பது வெட்கக் கேடான ஒரு விசயம். அப்படி ஒன்றும் மோசமான பாடலை அவர்கள் கொடுத்துவிடவில்லை. இந்தப் பாடலை மூன்று வருடங்களுக்கு முன் கேட்க நேர்ந்தது, அன்றிலிருந்து இன்று வரை தினம் ஒருமுறையாவது என்னைக் கேட்கத்தூண்டிவிடும் இப்பாடல்.இந்தியாவின் பாரம்பரிய இசையை மையமாக வைத்து ஐலசா பாடலை கம்போஸ் செய்திருப்பார்கள். இப்பாடலை நீங்கள் முன்னமே கேட்டிருந்தால் தயவு செய்து பகிருங்கள், இல்லாவிடில் தயை கூர்ந்து ஒரு முறை கேளுங்கள். ஒரு நல்ல இசைக் கோர்வையை இசை ஆர்வலர்கள் தவறவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப்பதிவு . உங்களுக்கு பிடிக்காமல் போகாது என்ற நம்பிக்கையுடன் பகிர்கிறேன்,
இது சத்தியமா இலக்கியப் பதிவு அல்ல தொடர்ந்து படிக்கவும்
சங்க கால இலக்கியங்களில் பசலை நோய் என்ற ஒன்றை அடிக்கடி குறிப்பிடுவார்கள். திருக்குறளில் கூட காமத்துப்பாலில் ஒரு அதிகாரத்தில் தலைவனைக் காணாத தலைவியின் அழகு சுருங்கி பசலை நோய் பீடித்தது போல் ஆனாள் என்று கூறுவார்.ஆக பசலை நோய் என்பது தலைவனைப் பிரிந்த சோகத்தில் தலைவிக்கு வருவது.
என்னுடைய விருப்ப பாடல்களின் ஒரு பெண் தனியாக பாடிய பாடல்களே அதிகமாக இருக்கும். அதாவது ஆண் காதல் தோல்வியில் பாடும் சோகப் பாடல்கள் போல பெண் ஆணை நினைத்துப் பாடும் மோகப் பாடல்கள், நன்றாக கவனியுங்கள் சோகம் அல்ல மோகம். இவ்வகையான பாடல்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவாகவே வந்துள்ளன. சமீபகாலமாக தமிழ் இளைஞர்கள் சோகப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவதால் இவ்வகையான பாடல்கள் வருவதே இல்லை. இவ்வகையான பாடல்களுக்கு என்னபெயர் என்று தெரியாமல் நானே தாந்தோன்றித்தனமாக பசலைப் பாடல்கள் என்று வைத்துவிட்டேன். இலக்கியவாதிகள் மன்னிக்க.
எனக்கு விருப்பமான சில பசலைப் பாடல்களைக் காணலாம், இந்த பாடல்களின் வீடியோக்களை ஆவென்று பாராமல் உன்னிப்பாக வரிகளை கேளுங்கள், அனைத்தையும் கேளுங்கள் ஆண்மகனென்ற வீரியம் கொள்ளுங்கள்.
1) படம் - அரசாட்சி
பாடல் - இருபது வயசு ஆர்வக்கோளாறு
பிடித்த வரிகள் - எல்லாமே
2) படம் - காதல் கவிதை
பாடல் - தத்தோம் தக்திமி தோம் இசை - இளையராஜா
பிடித்த வரிகள் -யுத்தம் செய்யாத தேகம், நீ மோகம் கொண்டு போராடு,முத்தம் என்றாலே யாகம் வாய் நீரில் நீயும் நீராடு
3) படம்: ஆயுதம்
பாடல்: ஆலகால விஷம் சிவனே இசை: தீனா
பிடித்த வரிகள்: தப்பே இல்லா தப்பு, இது தசைகள் செய்யும் நட்பு
4) படம் : சாமுராய்
பாடல் : ஒரு நதி ஒரு பெளர்ண்மி
பிடித்த வரிகள் : என் தேகக் கதவு ஜன்னல் எல்லம் திறந்து வைக்கும்
ஒருவன், மேலும் பல
5) படம் : காதல் கோட்டை
பாடல் : மொட்டு மொட்டு மலராத மொட்டு
6)படம்: கலாபக் காதலா
பாடல் : தோகை விரித்தொரு ஆண்மயில்
பிடித்த வரிகள்: நூறு பெண்களை நீயும் ஏற்றால் நூறில் ஒன்றென நானும் வாழ்வேன்
Not but not least
7) படம்: புதுப்பட்டி பொன்னுத்தாயி
பாடல் : ஊரடங்கும் சாமத்திலே இசை: இளையராஜா
பிடித்த வரிகள் : எல்லாமே
பின்குறிப்புகள் : 1) இந்த வகையான பாடல்கள் போல் பல வந்தாலும் இப்பாடல் வரிகளுக்காக நான் இதை திரும்பத் திரும்ப கேட்பதுண்டு. இலை மறை காயாக ஒரு பெண் ஆண் மகன் மீதுள்ள ஆசையை, காதலை, காமத்தை வெளிப்படுத்தும் படியான பாடல்கள், எந்த இடத்திலும் பச்சையான அர்த்தம் வராமல் கவனமாக எழுதிய பாடலாசிரியர்க்ளுக்கு நன்றி
2) இந்தியா இருக்குற நிலைமையில இப்பிடி ஒரு பதிவு தேவையாடா கோமுட்டினு நீங்க வினவலாம், இருபத்திநாலு மணி நேரமுமா இந்தியா வல்லரசாகிறதப் பத்தி யோசிக்கிறது, அப்பப்போ இப்பிடி எண்டெர்டெயினும் பண்ணனும்ணே!!!;-))
கடந்த ஒரு வாரமாகவே கழுகுகள் என்னைக் கொத்தி தின்பது போன்றதொரு கனவு,
அப்படி ஒரு நள்ளிரவில் வந்த இந்த கழுகு வகையறாக் கனவால் சட்டென
கண்விழித்தேன். தூக்கம் தொலைந்த அந்த இரவில் வேறென்ன
செய்ய பதிவிறக்கம செய்து வைக்கப் பட்டிருந்த முப்பது GB சத்யஜித ரே
படங்களில் மகாநகரை திரையிட்டேன். இனி அதைப் பற்றிய சில குறிப்புகள். Premise: ஒரு பெரு நகரத்தில வாழும் நடுத்தரக் குடும்பத்தில் கணவன்
சம்பாத்தியம் பற்றாமல் போய், தன் மனைவிய வேலைக்கு அனுப்பிவிடுவதால் அவனுக்கு
ஏற்படும் மனத் தடுமாற்றங்களும், அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களும். சில குறிப்புகள்: மேற்கண்ட
ஒரு வரி வாசகமே கதையின் கரு. சுப்ரதனின் குடும்பம் அழகானது, அழகான மகன்,
மிக அழகான மனைவி மற்றும் தன்
தாய் , தந்தை, தங்கையுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறான். வங்கியில்
கணக்கராக பணி புரிந்தும்,பகுதி நேர ஆசிரியனாக பணி புரிந்தும் அவனால்
குடும்பச் சுமை தாக்குப் பிடிக்க இயலவில்லை. ஆதாலால் தன் மனைவியை வேலைக்கு
அனுப்புவதை பற்றி சிந்தித்துக் கொண்டே சாலையில் நடந்து வருகிறான். பின்
வரும் காட்சிகளில் அவன் தன் மனைவி ஆரத்தியிடம் உரையாடி அவளின்
சம்மதத்தையும் பெறுகிறான். ஆனால் இந்த விஷயத்தில் அவளின் மாமா, மாமிக்கு
கொஞ்சமும் உடன்பாடில்லை. அவளின் மாமா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். கண்பார்வை
மெல்ல மங்கிக் கொண்டே வருகிறது. கண்ணாடி வாங்க அடிக்கடி சுப்ரதனிடம் பணமும்
கேட்டு வருகிறார். ஆனால் தற்போது சுப்ரதனால் தந்தைக்கு மூக்கு கண்ணாடி
வாங்கித் தர முடியாத அளவிற்கு பணச்சிக்கல்.எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி
ஆரத்தி வேலைக்கு செல்கிறாள். வீடு வீடாக சென்று துணிதுவைக்கும்
எந்திரத்தைப் பற்றி இல்லத்தரசிகளுக்கு டெமோ காட்டும் வேலை. இப்படி அவள்
வேலைக்கு செல்வதால் அவளுக்கு கிடைக்கும் அனுபவமும், சமூக விழிப் புணர்வுமே
மீதிக்கதை.
அவள் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு
ஆங்கிலேயப் பெண்மணியும் அதே வேலைக்கு சேர்கிறாள், இருவரும் நெருங்கிய
தோழிகளாகிறார்கள். அவள் இவளுக்கு உதட்டு சாயம் பூசி விடுகிறாள். ஆரத்தி
கூச்சப் பட்டு அதை அழித்து விடுகிறாள். பின்வரும் காட்சியில், யாருமில்லாத
தனிமையில் தனக்கு உதட்டு சாயம் பூசி அழகு பார்க்கும் காட்சியில், ரே ஒரு
இந்தியப் பெண்ணின் அழகான நாணத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதே நேரம்
அவளின் கைப்பையில் அந்த உதட்டுச் சாயத்தை பார்த்து பதறும் சுப்ரதனின்
நிலையையும் தெளிவாக காட்சிப் படுத்தி இருக்கிறார்.
வேலையை மிகவும் ரசித்து செய்கிறாள், இவளால் நிறை
லாபம் அடைகிறது கம்பெனி. ஆக சம்பளத்துடன் தாங்கள் விற்கும் ஒவ்வொரு
எந்திரத்திற்கும் கமிசன் கேட்கலாம் என்று ஆரத்தியும் அவள் தோழிகளும்
முடிவெடுக்கிறார்கள். தங்களின் பிரதிநிதியாக அந்த வெள்ளைக்கார பெண்மணியை
தேர்வு செய்கிறார்கள், ஏனென்றால் இது அவளின் யோசனையே. ஆனால் முதலாளிக்கு
இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆரத்தியை தனியாக் அழைத்து இத்தனை வங்காள
பெண்மணிகள் இருக்கையில் ஒரு வெளிநாட்டுபெண்ணை
பிரதிநிதியாக அனுப்பியது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று பொடி
போடுகிறான். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அந்த வெள்ளைக்
கார பெண்மணி சில நாட்கள் விடுப்பு எடுக்கிறாள். இதைக் காரணமாக காட்டி
அவளின் வேலையையும் ஆரத்தியின் தலையில் கட்டுகிறான் முதலாளி. அவளின்
விடுப்பு நாட்கள் தொடர தொடர இவளுக்கு வேலைப் பளு கூடுகிறது. ஆக தன்
சம்பளத்தை இரட்டிப்பாக்குமாறு கேட்கிறாள். அதற்கு முதலாளி, இரட்டிப்பு
சம்பளத்திற்கு பதில் 50% சம்பள உயர்வும் , பதவி உயர்வும் தருகிறேன் என்று
சொல்கிறேன். ஆனால் அவள் பார்க்கும் வேலை இருவர் பார்க்கும் வேலைக்குச் சமமானது.
இப்படிப் பல இடங்களில் இலை மறை காயாக கம்யூனிசச் சித்தாந்தங்களை எளிய
மக்களுக்கு புரியும் வகையில் காட்டுகிறார் ரே.
முடிவில் அந்த வெள்ளைக் கார பெண்மணியின் மேல் இருந்த
வெறுப்பையெல்லாம் சேர்த்து வைத்து அவளை ஒரு வேசி என்று திட்டி வேலையை
விட்டு அனுப்புகிறான் முதலாளி. அவள் நடந்ததை ஆரத்தியிடம் கூறி அழுகிறாள்.
இது இங்கு நடந்து கொண்டிருக்கையில் சுப்ரதனின் வங்கி திவாலாகிறது.
வேலையிழக்கிறான். மனம் நொந்து ஆரத்தியின் அலுவலகத்துக்கு வேலை தேடி
வருகிறான். ஆனால் ஆரத்தியோ தன் முதலாளியிடம் சென்று அந்த வெள்ளைக்காரப்
பெண்மணியிடம் மன்னிப்பு கேட்குமாறு வாக்கு வாதம் செய்கிறாள். விவகாரம்
உக்கிரமடைந்து தன் வேலையை துச்சமென தூக்கி எறிகிறாள். மெல்லப் படியிறங்கி
வருகையில் கணவனைப் பார்க்கிறாள் , அவன் நெஞ்சில் முகம் புதைத்து நடந்ததை
கூறி அழுகிறாள். அவளும் வேலையை விட்டதை நினைத்து அவன் அதிர்ச்சி அடைகிறான்.
அவள் அவன் கண்களை உற்று நோக்கி தன்னை மன்னிக்குமாறு கேட்கிறாள். அதற்கு
அவன் இந்த மாநகரமே நமக்கானது, நீயென் ராணி உன்னை விட்டால் எனக்கு வேறு
யார் என்று ஆறுதல் சொல்கிறான். பின் அவர்கள் இருவரும் அந்த பெரு நகரத்தின்
உயர்ந்த மாளிகைகளுக்கிடையில் தங்களுக்கென ஏதாவதொரு வேலை கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் புறப் படுகிறார்கள். இப்படம் முடிந்ததும், ஏன் கழுகுகள் என்னை கொத்தி தின்பது
போல் கனவு வந்தது என்பதை உணர்ந்துகொண்டேன், இப்பொழுதெல்லாம் அந்தக் கனவு
வருகையில் தடிகொண்டு என்னைக் கொத்திய கழுகை விரட்டி அடிக்கிறேன் எனகென்று
ஒரு மகாநகர் இருக்கும் நம்பிக்கையில்.
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலும் எழுதுவதற்காக ஆணாதிக்கதிற்கு நிகரான ஆங்கிலச் சொல்லை கூகிளில் தேடினேன். I have found some approximate words related to it, not an exact word. அப்படியென்றால் இந்த வார்த்தையும், இழிநிலையும் என்னைச் சுற்றி உள்ள சமூகத்தில் தான் நடைமுறையில் உள்ளனவா?. இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது நண்பர் ஒருவரின் முகநூல் அப்டேட்டே! அதில் ஒரு நடிகையை வேசியாக சித்தரித்து எழுதியிருந்தார். அவரைப் பற்றி குறை சொல்லப் போவதேயில்லை இந்தப் பதிவு. இது ஆணாதிக்கவாதியான என் வாக்குமூலம் அவ்வளவே!! ஒரு பெண்ணை இழிவாக பேச அவள் பெண்ணென்ற ஒரு தகுதி போதும், அதுவும் அவள் நடிகையாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். உண்மையிலேயே ஒரு பெண்ணை உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் அணு அணுவாக ரசிப்பவன் ஒரு ஆணே. தன்னால் அடைய முடியாத ஒரு பெண்ணைப் பற்றி தரக் குறைவாக பேசும்போது அவளை வன்மையாக புணர்ந்தது போல ஒரு காமநிலைப் பரவசம் ஏற்படும், இதை ஒரு ஆணாக நானும் உண்ர்ந்திருக்கிறேன். என்னுடைய இயலாமையை ஆணாதிக்கம் என்ற பெயரில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு நடிகையோ ஒரு பெண்ணோ தரக் குறைவான ஆடை உடுத்தி வந்தால் கலாச்சாரத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசுவேன் ஆனால் யாருமற்ற தனிமையில் எனக்கு பிடித்த ந்டிகையை நினைத்து என்னை நானே சுயமாக கற்பழித்துக் கொள்வேன். சில பெண்கள் என்னிடம் மிகுந்த கர்வம் கொண்டு நடந்ததுண்டு. அவர்களைப் ப்ழிவாங்குவதற்காக ஆணாதிக்கத்தை நான் கையில் எடுத்ததுண்டு. குறிப்பாக அழகான பெண்கள் எல்லோருமே என்னைப் பொறுத்தவரை திமிர் பிடித்தவர்களே. இன்னும் சொல்லப் போனால் எந்த ஒரு பெண்ணாலும் காதலிக்கப் படாதவனே ஆணாதிக்கத்தில் அதிகமாக ஈடுபடுகிறான். ஒரு தடவை கூட காதலிக்காதவன் காதல் சோகப் பாடல்களையோ, பெண் எதிர்ப்பு பாடல்களையோ சத்தமாகப் பாடுகிறான், சமீபகாலமாக இது போன்ற பாடல்கள் அதிக அளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது எல்லாம் என் இயலாமைக்கு ஆறுதல் தருவது போன்று இருந்தாலும் அது வியபார தந்திரம் என்று ஏன் எனக்கு தெரியவில்லை.
பெண்களிடம் ஒரு வேண்டுகோள் ஆணாதிக்கவாதிகளான எங்களிடம் கோபம் கொள்ளவேண்டாம், முடிந்தால் சிறிது பரிதாபம் காட்டுங்கள். ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் மனநிலை பாதிக்கப்பட்டே, நான் ஆணாத்திக்கவாதியாக நடந்து கொள்கிறேன். இந்தப் பதிவை எழுதி முடிக்கையில் என் காயங்களின் சீழ் வடிக்கப்ப்ட்டு குருதி வழிந்தது போன்றொரு உண்ர்வு.
என் மனம் காமத்தின் பால் ஈர்க்கப்பட்ட நள்ளிரவுகளில், வேறு எதைப் பற்றியும் என் நினைவை திசை திருப்ப முடியாத இக்கட்டான சூழலில் என் பொறுமையை சோதிப்பதற்காக சில திரைப்படங்களை பார்ப்பது வழக்கம். படம் மிகவும் தொய்வாகச் சென்றால் என் மனக் குரங்கு மீண்டு காமக் கிளைக்கே தவ்வி விடும். அப்படி ஒரு சூழலில் இந்தப் படத்தை பார்க்க தொடங்கினேன். ஆரம்பம் முதல் ஒவ்வொரு நொடியும் தன் அபார நடிப்பால் என் கவனத்தை முழுமையாக அவர் பக்கம் ஈர்த்துவிட்டார் ஜாக் நிக்கல்சன். அவரின் ஷைனிங் படத்தைப் பார்த்து ஓரிரு நாட்கள் கண்ணாடி முன் அவரைப் போல் செய்து பார்த்ததுண்டு. பின வருவது One Flew over the cuckoo's Nest சில குறிப்புகள்:
படத்தின் Premise: புத்திசாலித்தனமான , வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கக் கூடிய ஒருவன் மனநல காப்பகத்தில் அடைக்கப் பட்டால் என்னாகும்.
குறிப்புகள் : சில திருட்டு, கொலை, வழக்குகளில் அடிக்கடி சிக்கி சிறை செல்லும் மெக், ஒரு மாற்றத்திற்காக இம்முறை மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் நடித்து மனநல காப்பகத்தில் அடைக்கப் படுகிறான். அங்கு அவனால் ஏற்படும் மாற்றங்களே முழுக்கதை. அவனுடைய செய்முறைகளை அங்கிருக்கும் மற்ற புத்தி சுவாதீனமற்றவர்களுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர்களை சிந்திக்க வைக்கிறான், கூடைப்பந்து விளையாடச் செய்கிறான், மீன்பிடிக்க திருட்டுத் தனமாக அழைத்துச் செல்கிறான். மற்றவர்களால் பெரிதும் நேசிக்கப் படுகிறான். குறிப்பாக சீஃப் என்று அழைக்கப்படும் செவ்விந்தியனுக்கு நெருங்கிய நண்பனாகிறான். இப்படி இவனால் செய்யப் படும் மாற்றங்கள் காலங்காலமாக தாங்கள் பின்பற்றி வரும் மருத்துவ முறைகளுக்கு எதிராக உள்ளதென சாடுகிறார் உயர் நிலைச் செவிலி ரேச்சல் மற்றும் அங்குள்ள சில மருத்துவர்கள். இப்படி ஒவ்வொரு நொடியும் நமக்கும் ஏதாவது கற்றுத்தரும் மெக்கிற்கு ஏற்படும் சோகமான முடிவே மீதி திரைப்படம். முழுக்கதையும் என்னால் விளக்க இயலாது, அது ஒரு நல்ல ரசிகனுக்கோ விமர்சகனுக்கோ அழகல்ல. முடிந்தால் ஒரு இரண்டு மணி நேரம் ஒதுக்கி இப்படத்தை பாருங்கள்.
இப்படத்தின் Premise ஐ தழுவியே Shasank Redemption எடுத்திருக்கக் கூடும். நமது இந்திய சினிமாக்களில் ஏகப் பட்ட படங்கள் இந்தப் படத்தின் பாதிப்பால் எடுக்கப்பட்டவை. அப்படி எடுத்தவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். ஏனெனில் இப்படத்தை தழுவி எடுக்கப்படம் ஒவ்வொன்றும் மனித நேயத்தை வளர்க்க நாம் எடுக்கும் முயற்சியே. உதாரணமாக, முன்னா பாய் MBBS, அறையெண் 305 கடவுள், முக்கியமாக போராளி போன்ற படங்களுக்கு நன்றி.
படம் முடிவடைகையில் நம்முள் உழன்று கெடுக்கும் பைத்தியத்தை தெளிய வைத்து விடுகிறார் இயக்குநர் மிலோஸ் ஃபோர்மன். இவரிம் அமேதியஸையும் முடிந்தால் பார்க்கவும்.
அன்பார்ந்த தமிழ்க் குடிமக்களே வாய் நிறைய டமிழை புகழ்ந்து தள்ளி விட்டு ஆங்கிலப் படங்களையும், இந்தி திரைப்படங்களையும் வாயில் எச்சில் ஒழுக பார்க்கும் மானங்கெட்ட தமிழ் வீரப் பரம்பரைகளே!!! நீங்கள் வாய் நிறையப் புகழ அனுராக் காஷ்யப் ஒரு படம் எடுத்துள்ளார் கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் என்று. ஆரண்ய காண்டம், புதுப்பேட்டை, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் இல்லாதது புதிதாக இப்படத்தில் இருந்தால் நீங்கள் வாய் நிறைய புகழ்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. உதாரணமாக நண்பர் தியாகராஜன் குமாரசாமி ஆரண்ய காண்டத்தில் ஒப்பன ஓலி, கண்டார ஓலி, தூமியக் குடிக்கி என்று வழக்கொழிந்த தமிழ் கெட்ட வார்த்தை சொற்களை பயன்படுத்தினார், அப்பொழுதெல்லாம் அட ராமா என்று காதை பொத்திய தமிழன், அனுராக் காஷ்யப் இப்படத்தில் மாதர் சோத், போஸ்டீகே, சூத்தியா என்று வசைச் சொற்களை பயன் படுத்தியபோது , அபாரம் உண்மைக்கு மிக அருகில் சென்று படம் பிடித்துள்ளார் என்று புகழ்வது இலை நிறைய மனிதக் கழிவை போட்டு உண்பதற்க்கு சமமாகும். மேலும் இப்படம் முடியும் தருவாயில் அப் கஹானி பாக்கி ஹை என்று போடுகிறார்கள் அதாவது கதை இன்னும் இருக்கிறது என்று அர்த்தம். இந்த ட்ரெண்டை ராம் கோபால் வர்மா எப்பொழுதோ ரத்த சரித்திரத்தில் பயன் படுத்திவிட்டார். இரண்டாம் பாகத்தில் என்ன காட்டப் போகிறீர்கள், சர்தார் கானின் குலக் கொழுந்துகள் ரபீந்திர சிஙகை பழிவாங்கப் போகிறார்கள், இதைத்தானே ராம் கோபால் வர்மா ரத்த சரித்திரத்தில் சூரி ,பரட்டல் ரவியை பழிவாங்குவதைப் போல் காட்டினார்.
மேலும் கதையின் நாயகன், சர்தார் கான் ஏற்கனவே ஒரு மனைவி(நக்மா) இருந்த போதும், துர்கா என்றொரு வங்காளப் பெண்மணியின் மீது காம மோகத்தின் பால் கைவத்து விடுகிறான். இதை ஏற்கனவே புதுப்பேட்டையில் காட்டிவிட்டனர், நான் தனியாக விளக்கதேவையில்லை.
இந்தப் படம் ரத்த சரித்திரம், புதுப் பேட்டை, ஆரண்ய காண்டம் மற்றும் சுப்பைரமணியபுரத்தின் கலவையே. இப் படம் வட இந்தியனுக்கு ஒரு புதிய அனுபவம் ஆனால் இந்த ஃபார்முலாக்களையெல்லாம் தமிழன் என்றோ பயன்படுத்திவிட்டான். So Mr, Anuraag there is nothing special in this film to attract south Indian people. so please serve your shit to your peoples. மேலும் படத்தின் பல இடங்களில் பழைய பாடல்களை பயன் படுத்தியுள்ளார்கள், இந்த ஃபார்முலாவும் தமிழனுக்கு தெரிந்ததே!!!. படத்தில் ஒரு ரயில் பயணத்தில் சர்தார் கான் இரண்டாவது மகன் துப்பாக்கி வாங்கிக் கொண்டு வருகையில் , 80களில் பாப்புலராக இருந்த ஹிப்பிகளை பயன் படுத்தி ஒரு பாட்டு எடுத்திருந்தது வெகுவாக ரசிக்க வைத்தது. வேறொன்றும் புதிதாக படத்தில் இல்லை. தமிழர்கள் இந்தப் படத்தை பார்ப்பதற்கு முன் ஆரண்யகாண்டம், சுப்பிரமணியபுரம், மற்றும் புதுப்பேட்டை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படங்களையெல்லாம் ஒன்றுமில்லை என்று இகழ்ந்துவிட்டு இப்படத்தை புகழும் அரைவேக்காடுகள் நல்ல விமர்சகனாக அல்ல, நல்ல ரசிகனாக கூட ஏற்றுக்கொள்ளப் படமாட்டான்.
நான் மேலே பதிவிட்ட கருத்துகள் அனைத்தும் தமிழ் சினிமா பார்த்து வளர்ந்தவன் என்ற உயரிய மனப்பான்மையில்( Superiority Complex) பதிவிட்டது. உங்களது மேலான கருத்துகளை என்னுடன் பச்சையாக பகிர்ந்து கொள்ளலாம். இப்படம் இந்திய சினிமாவின் மற்றுமொரு கேங்ஸ்டெர் மூவி அவ்வளவே
PS: தமிழில் பேசினால் அது கெட்ட வார்த்தை அதையே ஆங்கிலத்திலோ இந்தியிலோ பேசினால் அது நவநாகரீகம். போங்கடா சூத்தியாஸ்!!!!!!!!!
என்னுடைய சந்தேகம் எனக்கு தமிழ் எந்த அளவிற்கு
தெரியுமென்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.இதற்கு விடை காண இங்கு சில
வினாக்களை வைக்கிறேன் .
தமிழென்ற மொழிக்கு தமிழ் என்ற பெயர் எப்போது வைக்கப் பட்டது. எந்த சங்க கால இலக்கியத்தில் முதன் முதலில் தமிழ் என்ற சொல் பயன் படுத்தப் பட்டது.
உதாரணமாக திருக்குறளில்
தமிழ் என்ற சொல் ஒரு இடத்தில் கூட பயன் படுத்தப் படவில்லை. அதற்காக அது
தமிழில் எழுதப் படவில்லை என்று சொல்லவில்லை,தமிழைப் பற்றி எழுதவில்லை.
கேரளத்தை ஆண்டவர்கள் சேரர்கள் என்றால் தமிழ் சங்க கால இலக்கியங்களில் அவர்களின் பங்கு என்ன?
பழந்தமிழ் இலக்கியமான பழமொழியில் வரும் ஒரு வாசகம் இது "நாய் பெற்ற தெங்கம்பழம்" ,மலையாளத்தில் தெங் என்றால் தேங்காய்.
அப்படியானால் பழந்தமிழ் நூல்கள் பல தென்னிந்தியாவிற்கு பொதுவான ஒரு திராவிட மொழியில் எழுதப் பட்டது என்று வைத்துக் கொள்ளலாமா?.
நம் சங்க இலக்கியங்களை மலையாளிகள் ஆர்வம்கொண்டு படிக்கிறார்களா?
திருக்குறள்,
புறநானூறு,கலிங்கத்துப் பரணி முதலிய சங்க இலக்கியங்களை என்னால் உரை
இல்லாமல்படிக்க முடிவதில்லை. அப்படிஎன்றால் நான் தமிழில் தான் பேசுகிறேனா
இல்லை நான் பேசுவதை தமிழ் என்று சொல்லி கொள்கிறேனா?
தமிழக
கேரள எல்லைப் பகுதியான பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியர் தமிழுக்கு முதன்
முதலில் வரி வடிவம் தந்தார் என்று சொல்லப் படுகிறது,ஆகவேதான் நமது
வரிவடிவமும் மலையாள வரி வரிவடிவமும் மிகுந்த அளவிற்கு ஒற்றுமையாக
காணப்படுகிறதா?
அப்படியெனில் நமக்கும் அவர்களுக்கும் பொதுவில் ஏதும்சங்க இலக்கியங்கள் எழுதப் பட்டிருக்கிறதா?
சமஸ்க்ருதம் , தெலுகு, கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகளின் சங்க இலக்கியங்கள் என்னென்ன?
கம்பருக்கு வால்மீகியின் ராமாயணம் எப்படி கிடைத்தது?
நவீனத்துவம்,பின் நவீனத்துவம் என்று பேசியே நாம் பழங்கால இலக்கிய பாதையில் இருந்து சிதறிவிட்டோமா?
தமிழன் என்ற கர்வத்தை என் தலையில் இருந்து சற்று இறக்கி வைத்து இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டு பிடிக்க வேண்டும்.
மலையாள கவிஞர் குஞ்நுண்ணி
மற்றும் மறைந்த தமிழ் எழுத்தாளர் நகுலனின் கவிதைகளை படிக்க நேர்ந்தது.
இருவரின் கவிதைகளும் நம்மை எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்துகிறது. இருவரின்
எழுத்து நுட்பமும் மிகவும் புத்திசாலித்தனமானது. படித்தவுடன் புரிந்து
கொள்ளும் வகையில் இருப்பதில்லை. அவர்களது கவிதைகள். வாசிப்பாளரை மிகுந்த
சிந்தனைக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான
அனுபவத்தையும் உண்மையையும் உணர்த்துகிறது. இவர்களது கவிதைகளுக்கென்று தனி
விளக்கம் எதுவும் கிடையாது. அது வாசிப்பாளரை பொறுத்து மாறுகிறது.பெரும்பாலும் அவர்களது கவிதைகள் ஐந்து அல்லது ஆறு வரிக்குள்ளாகவே அமைந்து விடுகிறது
அவர்களது கவிதைகள் சிலவற்றை படிக்க கீழே சொடுக்கவும்
நகுலன் சொன்னது : ஒரு எழுத்தாளன் என்பவன் வாசிப்பவனுக்குள் சென்று அவனையும் எழுத தூண்ட வேண்டும்.
அதுனால நானும் சில குறுங்கவிதைகள் எழுத முயற்சி செய்தேன். அவற்றின் விளைவு கீழே,
நிழலின் பிம்பம்
(1)அந்த வெளிர் மஞ்சள் நிறம்
மெல்ல இறங்கி
ஒரு மின்சார விளக்கின்
அடியில் சென்று ஒளிந்துகொண்டது
(2) சில நேரங்களில்
என் நிழல் கூட
என்னுடன் சேர்ந்து கொள்கிறது
ஆனால் என் பிம்பம்
எப்பொழுதும்
எனக்கெதிராகவே உள்ளது.
(3) தொலைந்ததை தேடினேன்
தொலைத்ததெல்லாம் கிடைத்தது
தொலைந்ததை தவிர!!!
(4) சிட்டுக்குருவி பழத்தை
பங்கிட்டுக் கொள்கிறது,
பூச்சிகள் என்னை
ஒரு பொருட்டாக
நினைக்காமல்
ஏறி விளையாடுகின்றன
பெருமையாக இருக்கிறது
(5)ஊருக்கு தெரிந்து
புகைப்பதை நிறுத்தி ஐந்து நாட்களாகி விட்டது
எல்லாமும் சரியாய்தான்
போய் கொண்டிருந்தது
ஆறாம் நாளில் கையரிப்பு
யாருமில்லா ஓர் இரவில்
ஊருக்குத் தெரியாமல்
கிளம்பி விட்டேன்
கையில் சிகரட்டுடன்
பற்ற வைத்தேன்
பார்த்து விட்டார்
கடவுள்.
ஏக் காவ் மேம் ஏக் கிசான் ரகதாத்தா பெரும்பாலான தமிழர்களுக்கு தெரிந்த ஒரே
இந்தி வார்த்தை. நான் கொல்கத்தா சென்றடைந்தபோது எனக்கும் அந்த வார்த்தையை
தவிர இந்தியில் வேறொன்றும் தெரியாது. இப்பிடித்தான் ஒருநாள் ஓட்டலுக்கு
போகச்ச வாசல்ல இருந்த செக்யுரிடி ஆவோஜினு சொன்னான் , அது நான் இல்லீங்கனு
நான் சொல்ல. உடனே என் நண்பன் டே ஆவோஜினா உள்ள வாங்கனு அர்த்தம்டா.ஓ
அப்பிடியா நான் ஏதோ ராம்ஜி பிரேம்ஜி மாதிரி பேருன்னுல நெனைச்சேன்.
இப்பிடியே கேவலமா போயிட்டு இருந்தது வாழ்க்கை. ஏதோ டீகே , அச்சான்னு ரொம்ப
சிம்பிளான வார்த்தைகள மட்டும் கத்துக்கிட்டேன்.அழகான பொண்ணுங்ககிட்ட
அட்ரெஸ் கேக்குற அளவுக்காவுது இந்தி கத்துக்கணும்னு ஒரு ஆசை. ஊர்ல இருந்தப்
போது ஓயாம வாயடிகிட்டு இருந்தேன். இங்க வந்து பெரும்பாலும் தனியாதான்
பேசிருக்கேன். இந்தில யாராவது பேசுனாக் கூட பெரும்பாலும் தமிழ்ல தான் பதில்
சொல்றது. இந்த ஊர் பயபக்கிக சில பேருக்கு தமிழ் சொல்லிக்குடுத்தும்
இருக்கேன். ஆனா எக்காரணம் கொண்டும் அவிங்களுக்கு கெட்ட வார்த்தை சொல்லிக்
குடுக்குறது இல்ல. பின்னாடி நம்மளையே திட்டினாலும் திட்டிருவானுக. மாதங்கள்
கடந்தன நல்ல சாப்பாடு சாப்டாம நாக்கும், நல்ல தமிழ் கேட்க முடியாம காதும்
சாகத் தொடங்கின.எங்க ஊட்ல தோசை கொஞ்சம் முருகலா இல்லைன்னாலும தோசை தட்டோட
பறக்கும். இங்க வந்து ஒரு தோசை திங்கிறதுக்கு கட கடையாய் ஏறி எறங்கி கடசியா
ஒரு பீத்த கடையில் அம்பது ரூபா குடுத்து தோசைங்கிற பேர்ல ஏதோ ஒன்ன
தின்னுட்டு வந்தேன்.இந்த வெளி மாநில வாசம் எனக்குச் செய்த மிகப்பெரிய
புண்ணியம் என் மாநிலத்தின் அருமையை எனக்கு எடுத்துரைத்ததே. இந்த ஊர்
சாப்பாடு ஒவ்வொரு நாளும் சொல்லிக் குடுத்த பாடம் என் அம்மாவின் சமையலே
சிறந்ததென்று.
இந்த ஊரிடம் நான் கற்றுக் கொண்டது
நிறையவே.ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் சத்யஜித் ரே,
விவேகானந்தர்,ரபீந்திரநாத் தாகூர்,பங்கிம் சந்திரா சட்டர்ஜியின்
புகைப்படங்கள். பழைமையை மிகவும் மதிக்கத் தெரிந்தவர்கள். உதாரணத்திற்கு
இவர்கள் விவாசய நிலம் எதையும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு
கொடுக்கவில்லை. மாறாக ஊருக்கு வெளியே குப்பை கொட்டும் பீக்காடாய் இருந்த
நிலப்பரப்பை கம்ப்யூட்டர் கம்பெனிக்கு கொடுத்துவிட்டார்கள். ஒருவேள
ரெண்டும் ஒண்ணுதான்னு நெனைச்சிருப்பாய்ங்களோ அதுபோகட்டும்.இங்கே விவசாயம்
எந்த அளவிற்கும் பாதிக்கப்படவில்லை. உருளை கிழங்கு கிலோ ஏழு ரூபாய்.
சாத்துக்குடி கிலோ ஐந்து ரூபாய். நான் கற்றுக் கொள்ள நிறையவே இருந்தது அந்த
மக்களிடம்.
எனக்குள் அடிக்கடி எழும் ஒரு கேள்வி. நாம
எல்லாம் நல்ல படிச்சி வேலைக்கு சேந்துட்டோம். அப்பிடியே சென்னை போன்ற
பெருநகரங்களில் வீடு வாங்கிசெட்டில் ஆக வேண்டும் என்பதே பெரும்பாலானோரின்
கனவும்கூட. சரி சென்னையில வீடு வாங்கி செட்டிலும் ஆயிட்டோம்.நம்ம
புள்ளைங்கள சென்னையில சிறந்ததா ஒரு பள்ளிக் கூடத்துல சேத்தும் விடுவோம்.
எப்பவாது தாத்தா ஊருக்கு போவோம்னு அவனை நம்ம சொந்த ஊருக்கு கூட்டிபோவோம்.
அவனுக்கு அங்க விளையாட வீடியோ கேம் கூட இல்லாம போரடிக்கும். அவனும் வளந்து
பெரியாளா ஆயிடுவான்,நாம சென்னையில செட்டில் ஆக ஆசைப்பட்ட மாதிரி அவனும்
வெளிநாட்டுல செட்டில் ஆக ஆசைப் படலாம்.அப்புறம் நம்ம பேரனக் கூட்டிட்டு
அவனும் எப்பவாவது தாத்தா நாட்டுக்கு வருவான். நல்லா கவனிங்க இன்னும் அம்பது
வருசத்துல பல பேருக்கு இந்தியா தாத்தா நாடு ஆயிடும்.இப்பவே பாதி பேருக்கு
ஆயிடுச்சு.அப்போ தென் தமிழகத்தில ஏதோ ஒரு மூலையில இருக்கிற என் ஊர்
என்னவாயிருக்கும் அங்க யார் இருப்பாங்க. இது தான் என்னுள் எழுந்த கேள்வி.
கொஞ்சம் பெரிய கேள்விதான். ஆனால் என்னால் இதற்கு விடை கண்டு பிடிக்க
முடியும். இதையெல்லாம் ஒரு பெரு நகரத்தில் வாழ்ந்து இல்லை பிழைத்துக்
கொண்டிருக்கும் எனக்கு சொல்ல கொஞ்சம் கூட தகுதி இல்லை. ஆனால் என்னுடைய
பயணம் என் சொந்த ஊரை நோக்கியே இருக்கும்.இது கூட இந்த பெரு நகரங்கள் எனக்கு
சொல்லிக் கொடுத்த பாடமே.
தினங்காலையில்
பள்ளிக்குக் செல்லும்முன்
பெட்டிக்கடை பாட்டியிடம்
வாங்கி தின்னும்
புளிப்பு மிட்டாயின் சுவை வந்து மறைகிறது
அடிநாக்கில்
இன்று உலக புகையிலை தினம், இன்று மட்டும் புகை பிடிக்க வேண்டாம் என்று
டிவிட்டரிலும், முகநூலிலும் மாறி மாறி மக்கள் தகவல் பரிமாறிக்
கொண்டிந்தார்கள் மக்கள். எனக்கொன்றும் அவசியம் இல்லை அதை கடைபிடிக்க. உச்சி
வெயில் மத்தியம இரண்டு மணியளவில் கடைக்கு சென்று ஒரு கிங்க்ஸ் வாங்கி பத்த
வைத்துக் கொண்டேன். தணலென எறிந்த வெயிலை மேலும் சூடாக்கியது என் புகை.
என்னைக் கண்டு ஒரு நாய் விலகிச் சென்றது. கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு
பிச்சை கேட்கும் பிச்சைக்காரி என்னை மட்டும் தவிர்த்துச் சென்றாள். நான்
எதையும் கண்டு கொள்ளாதவனாய் வானத்தை நோக்கி வட்டமாய் புகை விட்டுக்
கொண்டிருந்தேன். எனக்கு என்ன ஆனதென தெரியவில்லை, சட்டென நான் ஏன் புகை
பிடிக்கிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் சமுதாய நோக்கத்தோடு சில
கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியதுண்டு. ஆனால் என்னைக்குமே நான் அதை
பின்தொடந்து நடந்ததில்லை. என்னால் இதுவரை இந்த உலகத்திற்கு எந்த பயனும்
கிடைத்ததில்லை, மாறாக நான் ஊதி தள்ளிக் கொண்டிருக்கும் இந்தப புகை சுற்று
சூழலை மாசுபடுத்துவதாகவே அமைகிறது. என் தனிமை என்னை இவ்வாறெல்லாம்
யோசிக்கக் செய்தது. ஊருக்கு மட்டும்தாண்டா நீங்கெல்லாம் உபதேசம் பண்ணுவீங்க
என்று எள்ளி நகையாடியது என் மனசாட்சி. அடித்துக் கொண்டிருந்த சிகரட்டை
அப்படியே கீழே போட்டேன், பாதி மீதம் இருந்தது. இனிமேல் சிகரெட் பிடிக்கப்
போவதில்லை என்றும் அப்படி பிடித்தால் எழுதவே போவதில்லை என்றும் உறுதி
எடுத்துக் கொண்டேன். நீங்கள் கேட்கலாம் ஏண்டா நாயே நீ எழுதலேன்னா பெட்ரோல்
விலை கொறஞ்சிடப் போகுதா இல்ல இந்தியாதான் வல்லரசாகிடப் போகுதான்னு?.
உண்மைதான் நான் எழுதாமல் இருந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்
போவதில்லை. ஆனால் அது என்னை பாதிக்கும் . ஒருவேளை என் மனநிலை கூட
பாதிப்படையலாம். ஆகவே நான் எடுத்த முடிவு முழுக்க சுயநலமானதே. நான் இதை
எழுதுவது என் உணர்ச்சியின் வெளிப்பாடே தவிர யாரையும் திருத்துவதற்காகவோ
கருத்து சொல்வதற்காகவோ அல்ல. உலகத்தை திருத்த நான் ஒன்றும் ஏசுவோ புத்தனோ
அல்ல. என்னை நானே திருத்த ,உலகத்திற்கு பயனுள்ளவனாக மாற முயற்சிக்கும்
மனிதன், மிக மிக மிக சாதாரணமான மனிதன். நான் அடித்துப் போட்ட அந்த
சிகரெட்டே என் கடைசிப் பாதி சிகரெட்டாக இருக்க கடவதாக. இதுவரை நான் ஏதாவது
மரம் நட்டிருப்பேனா? ஒரு சாதாரண பறவையின் எச்சம் கூட விதை தூவி இந்த
மண்ணிற்கு உபயோகம் உள்ளதாக இருக்கிறது. ஆறறிவு படைத்த நான் அந்த பறவையின்
எச்சத்தை விட கேவலமானவனே. என்ன செஞ்சிருக்கிறேன் இதுவைரைக்கும். பூமி
ஏளனமாக என்னைப் பார்த்து சொன்னது நாயே நீ எதுவுமே செய்யாம இருந்திருந்தாலே
பூமி நல்லா இருந்திருக்கும். மனிதக் கழிவை மிதிக்கும் போது மேலெழும் அதே அறுவறுப்பு என்னிலும் இப்போது.
அதுசரி அதிர்ச்சி தகவல்னு சொன்னியே அது என்ன? இன்னுமாயா உங்களுக்கு புரியல நான் சிகரெட்ட விட்டுட்டேன்.
பின் குறிப்பு : இது எனக்காக நான் எழுதிய பதிவு. நான் என்று வரும்
இடங்களிலெல்லாம் நீங்கள் உங்களை நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல
உலகநாதா உனக்கு ஞாபகம் இருக்கா, செகண்ட் இயர் படிக்கும்போது சீனியர் ப்ரவீண் ரூம்ல இருந்து ஃபாரின் ஷாம்ப்பூனு சொல்லிகிட்டு என்னத்தையோ எடுத்துட்டு வந்து தந்த. நாங்களும் அதப்போட்டு குளிக்க, எவ்வளவு போட்டும் கொஞ்சம் கூட நுறையே வராம நாங்க என்னனு கேக்க, நீ உடனே அத தைரியமா பிரவீண் ரூமுக்கு தூக்கிட்டுப்போய் நியாயம் கேக்க, நாயே இது தலைக்கி தேக்கிற ஜெல்லுடானு அவர் சொல்ல. ஒரு வாரத்துக்கு எங்கள மங்கூஸ் மண்டையனாட்டம் சுத்த விட்டியே அத மறக்க முடியுமா? இப்பிடி ஹாஸ்ட்டல்ல எங்கெங்க இருந்தோ தேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்ப்பூ, பவுடர் டப்பானு ஆட்டயப் போட்டு எங்களுக்காக எடுத்து வந்து தருவியே நீதாண்டா நாங்கள் கண்ட ராபின் ஹுட். அலிபாபா குகைக்கு இணையான பொக்கிஷங்கள் நிறைந்த திலிபனோட பெட்டிய ஓப்பன் பண்ணி முந்திரி பருப்பு, ஒயின், ஃபேர் அண்ட் லவ்லி எடுத்து எங்களுக்கும் தருவியே உனக்குதான் எவ்வளவு பெரிய மனசு. இதையெல்லாம் விட உச்சகட்டமா ஒரு காரியம் பண்ணியே அத மறக்க முடியுமா? பரமசிவன் அண்ணிக்கு பிறந்த குழந்தைய பாக்க நம்மையெல்லாம் ஆஸ்பத்திரிக்கி கூட்டுபோனான். அங்க குழந்தைக்கு போட வச்சிருந்த ஜான்சன் பேபி பவுடர தூக்கிட்டு வந்து, உன் அக்குள்ல போட்டு சுத்துனியே குழந்த பையன் டா நீ. நைட்டு ஒரு மணிக்கு கைலியும், கருப்பு சட்டயும் போட்டு ஹாஸ்ட்டல்ல இருந்து கிளம்பி ப்ராஜகட் பண்ண கெளம்பி போவோமே அத மறக்க முடியுமா. காலேஜுல நம்மலால பாதிக்கபட்ட கன்ஸ்ட்ரக்ஷன் ஏராளம். இரும்பையெல்லாம் ஒத்த ஆளா தூக்கி வந்த இரும்பு மனிதன்டா நீ. உனக்கு ஞாபகம் இருக்கா ஒருநாள் இரும்பு தூக்க போன எடத்துல , கொத்தனார் குடிசையில ரேடியோல ஏ.ஆர் ரஹ்மான் பாட்டு ஓடிக்கிட்டு இருந்தது. அதகேட்டு காக்காவடி மெய் மறந்து அங்குனகுள்லயே நின்னுட்டான். அவன் பொறடில அடிச்சு ப்ராஜக்ட் பண்ண வந்த எடத்துல என்ன நாயே பாட்டு வேண்டிகிடக்கு, வேலைய கவனினு சொல்லுவியே, இர்ந்தாலும் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபீஸர்பா நீ. நாம வெளியில வந்ததுக்கப்புறம் காலேஜுல நிறையா புல்டிங் எழுப்பிட்டாங்களாம்.
ஊர்ல இருக்கிற தீப்பட்டியெல்லாம் தூக்கிட்டு வந்து ரூம்ல வச்சிருவ. பத்த வைக்கிறதுக்கு ரூமுக்கு வற்ரவங்கிட்டெல்லாம் ரெண்டு பஃப் வாங்கி இழுப்பியே. ராஜ தந்திரிடா நீ. உனக்கு ராபின்ஹுட் அட்த ரேட் ஜிமெயில் டாட் காம்னு ஒண்ணு ஆரம்பிச்சு தந்தோம் , எங்களுக்கு தேவையானத மெயில் பண்ண அடுத்த செகண்ட் தூக்கிட்டு தருவியே நீ ஒரு ஏபிடி டா மச்சன். உன்னைய ஏன் இப்பிடி புகழ்றேங்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு. ரெண்டு வருஷமா நான் காணோம்னு தேடிகிட்டு இருந்த பீட்டர் இங்கிலாந்து சட்டைய போன வாரம் பெருந்தன்மையா ரிட்டர்ன் பண்ணியே. நீ போட்டு சுத்துனதினால மீடியம் சைஸ் சட்ட XXXXL சைஸுக்கு மாறிடுச்சு. இருந்தாலும் பரவாயில்ல உன்னோட பெருந்தன்மை அப்பிடியே புல்லரிக்க வச்சுடுச்சு. அப்பிடியே உன் பங்காளி காட்டுப் பூச்சி கருப்பு மணிகிட்ட சொல்லி என்னோட ரெண்டு ஃபாரின் சட்டய வாங்கி குடுத்தேன்னா உனக்கு புண்ணியமா போகும். இப்போ எல்லாரும் ஏதோ ஒரு மூளையில கம்ப்யூட்டர் கம்பெனில உக்காந்து பொட்டி தட்டினு இருக்கோம். போன வாரம் நீ ஆபீஸ்ல மௌஸ் தூக்கிட்டேனு கேள்விப் பட்டேன். அப்பிடியெல்லாம் பண்ணாத நாதஸ் நவ் வீ ஆர் ப்ரொஃபஷனல்ஸ் (அப்பிடினு நமக்கு நாமளே முகமுடி போட்டுகிட்டு இருக்கோம் வெங்காயம்).
இப்பிடி எல்லோருடைய கல்லூரி வாழ்க்கையிலயும் ஒரு ராபின் ஹுட் இருப்பார், நேரம் இருந்தா அவங்களப் பத்தியும் நெனச்சு பாருங்க. சிரிக்க மறந்து கிடக்கிறோம் நம்மை அறியாமலே நம்மை புன்னகை செய்ய வைக்கிறது நம்முள் புதைந்து கிடக்கும் கல்லூரி.
நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது, என்னிடம் நேராக வந்தவள் தனியாக பேச வேண்டும் என்றாள். தூண்டிலில் சிக்கிய மீனாய் மறு பேச்சு பேசாது அவள் பின்னே சென்றேன். தனிமையான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே நின்றவள், என்னை நோக்கி திரும்பினாள். உன்கிட்ட நிறையா பேசணும், இப்போ டைம் இல்ல, நிறையா பேசணும் போல இருக்கு, இன்னிக்கி ராத்திரி எங்க வீட்டுல எல்லோரும் திருச்செந்தூர் போறாங்க, நான் ஆபீஸ்ல வேலையிருக்குன்னு பொய் சொல்லிட்டேன். உன்கிட்ட நிறையா பேசணும், கண்டிப்பா நீ வரணும் என்று சொன்னவள் என் பதிலுக்கு காத்திராமல் வந்த திசை நோக்கி நடந்தாள். இதற்கு சராசரியான ஒரு ஆண் என்ன பதில் சொல்லியிருப்பானோ அதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன். ஆனால் பெண்களுக்கு நுண்ணறிவு அதிகம். அதனால் நான் சொல்ல நினைத்ததை அசடு வழிந்த என் கண்களிலே அவள் அறிந்து கொண்டாள். அவளுக்கும் எனக்கும் அதிகமாக பழக்கமில்லை, ஆனாலும் என் ஓரக்கண்ணும் அவளின் ஓரக்கண்ணும் அவ்வப்போது முட்டிக் கொள்ளும். சற்று முன் நடந்த நிகழ்வுகளை ஒன்று விடாமல் நண்பர்களிடம் ஒப்பு வித்தேன். நண்பனுக்கு ஒரு நல்லது நடக்கப் போவுதுன்னா நம்ம பயலுக உயிரையே கொடுப்பாய்ங்களே, ஆளாளுக்கு ஒண்ணு ஏத்தி விட்டானுக. அதுல ஒருத்தன் சொன்னான் "தம்ப் க்ளவுஸ்(thumb glouse)" வாங்கிட்டு போ மச்சினு, நான் ஒரு தத்தி எனக்கு முதல்ல புரியல, அப்புறம் தெளிவா விளக்கினான் அந்த அனுபவசாலி. ஆனால் உங்களிடம் அதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையிலேயே இப்போதான் முதன் முதல்ல தம்ப் க்ளவுஸ் வாங்கப போறேன். நான் செய்வது சரியா தவறா என்ற விவாதம் என் மனதில் ஓடினாலும் ஒரு தற்க்காபிற்காகவே இந்த தம்ப் க்ளவுஸ். சூப்பர் மார்கெடிற்குள் நுழைந்து தம்ப் க்ளவுஸ் அடுக்கப்பட்டிருக்கும் ரேக்கை நோக்கி நடந்தேன். ஆகா எத்தனை விதம், என்னென்ன டிசைன். அட்டைப் படத்தை பார்த்து புல்லரித்து நின்றேன். நம்ம வாழ்க்கையிலையும் இவ்வளவு சீக்கிரத்துல இதெல்லாம் நட்டக்கப் போவுதா? ஆர்ப்பரித்தது மனம். அங்கு இருந்ததிலேயே விலை அதிகம் உள்ள ஒன்றை எடுத்துக் கொண்டேன். நினைவெல்லாம் அவளின் முகம். மனமெல்லாம் ஏக கற்பனைகள். கையில் எடுத்த தம்ப் க்ளவுசை பில் போடவரிசையில் நின்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ யாரோ சத்தமாக என் பெயரை அழைப்பது போல ஒரு உணர்வு. சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினேன். "ஐயோ இவனா, இவன் லவுட் ஸ்பீக்கர் வாயனாச்சே, என் கையில இருக்கிறதப் பார்த்தான்னா பேஸ்புக்குல ஸ்டேடஸ் அப்டேட்டே போட்டுருவனே" என்று நினைத்துக் கொண்டே அவனிடம் இருந்து நழுவப் பார்த்தேன். அவன் விடுவதாயில்லை, நான் பில் போடும் வரை என்னுடன் இருப்பதாகக் சொன்னான். அவனை எப்படியோ சமாளித்து விட்டேன். எப்படி என்று விளக்க விரும்பவில்லை. ஒரு வழியாக பொருளை பத்திரமாக வாங்கி வெளியேறினேன். அவசரமாக பஸ்ஸில் ஏறி அமர்ந்து, ஒரு நூறு ரூபாயை நீட்டி டிக்கெட் கேட்டேன். ஏன்யா உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? சில்ரையே வச்சிருக்க மாட்டீங்களா என்று அன்பாக சொன்னார் மாண்புமிகு நடத்துனர். எவ்வளவு போராடியும் அவரிடம் சமாளிக்க முடியவில்லை.கடவுளே என்ன சோதனை , நேரம் ஆக ஆக என் முகம் வேர்த்து, சட்டை நனைந்து, வெறி கூடி அப்பப்பா!!! எல்லாத் தடைகளையும் தாண்டி அவள் வீட்டை அடைந்தேன். காலிங் பெல்லை அழுத்தினேன். வெள்ளை நைட்டி அணிந்து ஒரு தேவதை போல அவள் வருவது என் மனக்கண்ணில் தெரிந்தது. நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது. இரண்டாம் முறை காலிங் பெல்லை அழுத்தியதும் என்னை சுற்றிலும் மணியோசை கேட்கத் தொடங்கியது. அது காலிங் பெல்லின் ஓசை போல இல்லை. என் தலை எங்கும் அதே சத்தம். "அச்சம் தவிர். நைய்யப் புடை, ஆண்மை தவறேல் , மானம் போற்று" என்று மாறி மாறி ஒலித்துக் கொண்டு இருந்தது. சட்டென நினைவு வந்தவனாய் செல்பேசியை காதில் வைத்து என்ன என்றேன். மறுமுனையில் இருந்து "என்ன மச்சி தூங்கிகிட்டு இருக்கியா?" என்று குரல். ”டேய் நாயே கனவில கூட என்னை கன்னி கழிய விடமாட்டீங்களா? அப்பிடி என்னடா என் மேல உங்களுக்கு கடுப்பு” என்று சொல்லியவாறே போனை அணைத்தேன். மறுபடியும் தூங்க நினைத்து தோற்றுப் போனேன். இப்பொழுதெல்லாம் செல்போனை அணைத்து விட்டே தூங்கச் செல்கிறேன், பையில் சில சில்லறைகளையும் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடல் நன்றோ? சொல்வீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்திடல் வேண்டும்
யாமறிந்த புலவரிலே கம்பமைப் போல்
வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;
ஊமையராய் செவிடராய் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒருசொல் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணங்கச்செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வாழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
நான் இதைப் பற்றி எழுதியே ஆகவேண்டும். ஆனால் இதைப் பற்றி படிக்க வேண்டிய கட்டயாம் உங்களுக்கு இல்லை.
நாங்கள் வாழும் வாழ்க்கை பெரும்பாலும்
இருட்டில் ஆரம்பித்து அதிகாலையில் முடிந்து விடுகிறது. நிலா எங்களுக்கு
சூரியனாகவும், சூரியன் எங்களுக்கு நிலாவாகவும் செயல் படுகிறது. அதிகாலை
நேரத்தில் களைப்புடனும் கொட்டாவியுடனும் உறங்கச்செல்வோம். அந்தி வேளையில்
தான் எங்கள் காலை உணவு. நடு இரவில் பேய் கூட உறங்கச் செல்லும் நேரத்தில்
தான் எங்கள் மதிய உணவு. அதிகாலையில் இரவு உணவு உண்ணும் ஒரே ஜீவராசிகள்
அதாவது பிராணிகள் நாங்கள் தான்.
எங்களது வார இறுதி நாட்கள் பெரும்பாலும்
தூக்கத்திலேயே கழிந்து விடும். வார நாட்கள் துக்கத்திலேயே கழிந்துவிடும்.
எங்கள் கண்கள் பெரும்பாலும் ரத்த சிவப்பு நிறத்திலேயே காணப்படும். எங்களது
இதயத்தில் எப்பொழுதும் ஒரு வலி இருந்து கொண்டே இருக்கும். மயான அமைதிக்கு
நடுவில் நாங்கள் வேலை பார்ப்பதால் எங்கள் இதயம் துடிப்பது கூட பெரும்
இரைச்சலாகவே தோன்றும்.
நாங்கள் யார்? இரவு நேர கோட்டான்களா? கள்ளர்களா?
இல்லை மயான வெட்டியான்களா? இது எங்கள் பொருளாதாரக் கோளாறு மட்டும் இல்லை
பூலோகத்தின் கோளாரும் கூட. இந்தியாவில் இரவையும் அமெரிக்கவில் பகலையும்
வைத்த இறைவனின் கோளாரும் கூட. நான் இதைப் பற்றி எழுதியே ஆகவேண்டும். ஆனால்
இதைப் பற்றி படிக்க வேண்டிய கட்டயாம் உங்களுக்கு இல்லை.
இப்படிக்கு இங்கிருந்தே அமெரிக்காவிற்கு வேலை பார்க்கும்
கையாளாகத கணிப்பொறி விஞ்ஞானி.
வெளிமாநிலம் சென்றதிலிருந்து தியேட்டருக்கு சென்று பார்த்த முதல் ஹிந்திப் படம்.
மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். கதையை வெகுவாக
விவரிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய
படம். கொல்கத்தாவை மிக்க அழகாக காட்டியுள்ள ஒரே படம் (எனக்கு தெரிந்த வரை).
தன் கணவனை தேடி வெளிநாட்டில் இருந்து கொல்கத்தா வரும் புள்ளத்தாச்சி தமிழ்
பெண் வித்யா பாலன்(அங்கதாம்ல வச்சுருக்காய்ங்க ட்விஸ்ட்டு). ஒரே வரியில்
கதையைப் பற்றி சொல்லப்போனால் இந்தப்படம் ஒரு பெண்கதாப்பாத்திரம் நடித்த
உன்னைப் போல் ஒருவன் (ஒருத்தினு கூட வச்சுக்கலாம்).
படத்தில் தமிழ்ப்பெண்ணாக நடித்திருப்பதால்
வித்யாபாலன் ஒரு காட்சியில் “இதுதான், இதுதான்” என்று அவசரத்தில் பேசுவது
போல ஒரு வசனம் வரும். தியேட்டர்ல மத்த எவனுக்கும் புரியாத எனக்கு மட்டும்
புரிஞ்ச ஒரே டயாலக் அதுதான். ஆனா இந்தப் படம் பாக்குறத்துக்கு இந்தி
தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியம் இல்லை. காட்சிகள் அவ்வளவு கோர்வையாக
வடிவமைக்கப் பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியா சென்று
வித்யாபாலன் பல அருமையான திரைப்படங்கள் நடித்துவிட்டார். குறிப்பாக சொல்லப்
போனால் உமன் சென்ட்ரிக் என்று சொல்லக்கூடிய பெண்
கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்க கூடிய படங்கள் இனறையளவில் வெகுவாக
குறைந்து வருகிறது. அவ்வகை படங்களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியாக
வித்யாபாலன் நடித்துவருவது மகிழ்ச்சியான விஷயம். நம்ம தமிழ் நாட்டுலயும்
இதுபோன்ற பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்து
இருக்கின்றன. குறிப்பாக பாலச்சந்தர், பாலு மஹேந்திரா, மஹேந்திரன் மற்றும்
மணிரத்னம் படங்கள். (வேணும்னா விஜயசாந்தி படத்தையும் சேத்துக்குங்க). ஆனா
இப்போ பெருமளவில் இம்மாதிரி படங்கள் குறைந்து விட்டன. கஹானி நமக்கு
சொல்லும் பாடம் நாமும் இதுபோல் படங்கள் எடுக்க முன் வர வேண்டும் என்பதே.
இந்த விமரிசனத்தப் பற்றிய உங்கள் விமரிசனங்கள் வரவேற்கப் படுகின்றன.
கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் இந்திய நாட்டின் ஆஸ்கர் விருதான தேசிய விருதுகளை தமிழ் சினிமா உலகம் அள்ளி இருக்கிறது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதும், சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் ஆரண்ய காண்டம் பட்த்திற்கு கிடைத்துள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சிறந்த துணைநடிகருக்கான விருதுகளை அழகர்சாமியின் குதிரை படம் அள்ளியிருக்கிறது. தமிழில் சிறந்த படத்திற்கான விருதை வாகை சூடவா எதிர்பார்த்தபடியே வாங்கிவிட்டது.
ஒவ்வொரு
தேசிய விருதின் போதும் தமிழ் சினிமா விருதுகளை அள்ளிக் குவிக்கும் போது
தமிழன் என்ற முறையில் புல்லரிக்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட படங்களில்
எத்த்னை படங்களை நாம தியேட்டர் போய் பார்த்திருக்கோம். ஏன் ஆரண்ய காண்டம்னு
ஒரு படம் வந்த்தே பல பேருக்கு தெரியாதே. தமிழில் உள்ள பல நல்ல ரசிகர்களும்
திரை விமர்சகர்களும் இந்த மூன்று படங்களையும் தூக்கி கொண்டாடிய போதிலும்
இப்படங்கள் வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றியை அடையவில்லை. இப்போக் கூட
இந்த புல்லரிப்பு நமக்கு ஒரு வாரம் இருக்குமா? அதுக்கப்புறம் சிங்கம்,
சிறுத்தை, கரடி, யானை போன்ற விலங்கீனப் படங்களே நம்ம பாக்ஸ் ஆபீஸ்ல இடம்
பிடிக்கும்.
ஆக இந்த வருடத்திலிருந்தாவது கொஞ்சம் பகுத்தறிவுடன் நல்ல படங்களை தியேட்டர்
சென்று பார்ப்போம். ஃபேஸ்புக் ட்விட்டர் மூலமாக மற்றவர்களுக்கும் நல்ல
படங்களை பார்க்க பரிந்துரை செய்வோம்.
அப்போ நான்
திருநெல்வேலில படிச்க்கிட்டு இருந்த சமயம் , ஊருக்கு போறதுக்காக பஸ் ஏறி
உக்காந்தேன் . நான் ஏறின அதே பஸ்சுல அழுக்கு டிரஸ் போட்ட பெரியவர்
ஒருத்தர் மூணு பேர் உக்காரவேண்டிய ஒரு சீட்டுல படுத்துக்கிடந்தார் .
பஸ்சில் கூட்டம் சேர்ந்தவுடனே எழுந்து உக்காந்துட்டாரு ஆனா அவரு பக்கத்துல
உக்காரதுக்கு யாருக்குமே மனசு வரல , கடைசியா கூட்டம் அதிகமாகி அவர்
பக்கத்துல ரெண்டு பேரு உக்காந்துட்டாங்க . நான் கடைசி சீட்டுல உக்காந்து
இருந்தேன் . அவரு எனக்கு ஒரு ரெண்டு சீட்டு தள்ளி உக்காந்து இருந்தாரு,
மதுரைக்கி அவர் டிக்கெட் கேட்டது என் காதில் நன்றாகவே விழுந்தது .
அருவருப்பை மீறிய பரிதாபத்துடன் அவரை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க
அவரோ ஒரு சின்னக் குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த ரொட்டித் துண்டையே
பார்த்துக் கொண்டிருந்தார். பஸ் ஒரு மணி நேரம் கழித்து கேண்டீனில் நின்றது
, அவரர் தாங்கள் சாப்பிட ஏதாவது வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள் ,
என்னிடம் இருந்த கடைசி பத்து ரூபாயை கொண்டு ஒரு பிஸ்கட் பாக்கெட்
வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறினேன் .
எல்லோரும் தாங்கள் வாங்கிய தின் பண்டங்களை கொறிக்க தொடங்கினார்கள் .
எங்கேயாவது ஒரு பாக்கெட் பிரிக்கும் சத்தம் கேட்டால் ,அந்த சத்தம் வந்த
திசையை நோக்கி தலை திருப்பி கையை நீட்டுவார் அந்த பெரியவர் , அவர்களும்
பெரியவருக்கு தின்ன கொஞ்சம் தருவார்கள் . என் பக்கத்தில் சுமார் முப்பது
வயது இருக்கக் கூடிய ஒருவன் தான் வாங்கி வந்த கடலை பொட்டலத்தை மிகவும்
நுட்பமாக யாருக்கும் சத்தம் கேட்டகாமல் மெல்ல திறந்து அந்த பெரியவருக்கு
தெரியாமல் சாப்பிட்டு முடித்து விட்டான் . இன்னொருவனோ அந்த பெரியவர் கை
நீட்ட , அதை கவனிக்காதவன் போல சாப்பிட்டுக் கொண்டே இருந்தான் .
இவர்களுக்கு மத்தியில் கையில் பிஸ்கட் பாக்கெட்டுடன் என்ன செய்வதென
தெரியாமல் நான் உக்கார்ந்து கொண்டிருந்தேன் . பெரியவரின் கவனம் பிரிக்கப்
படாத என் ரொட்டி பாக்கெட்டின் மேல் திரும்பியது ,
அவருக்கு அப்படியே கொடுத்து விடலாம் என்று
எண்ணிக்கொண்டே இருக்கையில் என்னுடைய நிறுத்தம் வர இறங்கி விட்டேன் கையில்
அந்த பாக்கெட்டுடன். என் பக்கத்தில் உக்காந்திருந்த அந்த இரண்டு பேரை விட
என்னை நான் கேவலமாய் உணர்ந்தேன்.
ஒரு
முறை ஒரு நகரத்தின் வழியே ஒரு தமிழன், ஒரு ஆங்கிலேயன், ஒரு வட இந்தியன் ,
ஒரு சீனாக்காரன் பயணித்துக்கொண்டிருந்தார்கள் , அவர்களுக்கு பசி
ஏற்பட்டது , ஆகவே தாங்கள் கொண்டுவந்திருந்த காசுகளை ஒன்றாக போட்டு ஏதாவது
பழம் வாங்க முடிவு செய்தனர் , அவர்களுக்கு தங்கள் தாய் மொழி தவிர வேறு
ஏதும் தெரியாது ... தமிழன் எனக்கு வாழைப்பழம் தான் வேண்டும் என்றான் ,
ஆங்கிலேயன் I want banana என்றான் , வட இந்தியன் எனக்கு kēlē(கேளே)
வேணும் என்றான், சீனன் எனக்கு Xiāngjiāo(சியஞ்சியோ) வேண்டும் என்றான் ,
அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் தாங்கள் கேட்ட பழம் தான் வேண்டும்
என்று சண்டை இட்டுக்கொண்டனர் . அவ்வழியே வந்த ஒரு பெரியவர் இவர்களிடம்
பணத்தை வாங்கிக் கொண்டு பழக் கடைக்குப் போய் , ஒரு சீப்பு வாழைப்பழம்
வாங்கிக் கொண்டு வந்தார், அதைப் பார்த்த தமிழன் இது தான் நான் கேட்ட வாழை என்று ஒன்றை எடுத்துக் கொண்டான் ,ஆங்கிலேயனும் this is banana what I asked என்று ஒன்றை எடுத்துக் கொண்டான், வட இந்தியன் இது தான் நான் கேட்ட பழம் kēlē(கேளே) , என்று ஒன்றை எடுத்துக் கொண்டான் , சீனனும் இது தான் நான் கேட்ட பழம் Xiāngjiāo(சியஞ்சியோ) என்று ஒன்றை எடுத்துக் கொண்டான். அவர்கள் அனைவரும் பின் பயணத்தை தொடர்ந்தனர் .
இப்பிடித்தான் நாமளும் ஒரே கடவுளை பல மதங்களின் வழியாக கரெட்டா தப்பா புரிஞ்சிக்கிட்டு சண்ட போட்டுக்கிட்டே இருக்கோம் ......
மேக்ஸ்வெல் இன்று உனக்கு பிறந்த நாள்
1988 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் பதினாலாம் நாள் ஒருவேளை நீ பிறக்காமல் போயிருந்தால் ,
உலகநாதனுக்கு லேப் எக்சாமில் யார் பிட் கொடுத்து உதவியிருப்பார்?
பர்மா எனும் பன்னிக்கு யார் போர்வை கொடுத்திருப்பார் ?
வாங்கி என்னும் எனக்கு லேப்டாப்பை யார் அறிமுகப்படுத்தியிருப்பார் ?
காக்காவிடம் யார் கரிசனம் காட்டியிருப்பார் ?
நந்தாவிருக்கு யார் ஓசி சட்டை தந்திருப்பார் ?
கப்பு வாயனுக்கு யார் கடன் கொடுத்திருப்பார்?(திரும்பக் கிடைக்காதென்று தெரிந்தும்)
வாரம் ஒருமுறை நாய்வாயனுக்கு கரி சோறு யார் போட்டிருப்பார்?
சப்பிக்கு குளிக்க சோப்பு யார் கொடுத்திருப்பார் ? கரும் பல்லுக்கு யார் பதிலடி கொடுத்திருப்பார் ?
ஆபோவிடம் யார் அன்பாயிருந்திருப்பார் ?
இந்த தினம் நீ கொண்டாட வேண்டிய தினம் அல்ல
இது நாங்கள் கொண்டாட வேண்டிய தினம் ......
ஆக இந்த திருநாளை நாங்கள் உலக GCE PIRATES தினம்
என்றறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்
சரியாக மதியம் 12 :30 மணி அளவில் ஒலித்தது அந்த மெஸ்ஸின் மணி ,மணி
அடிச்சா சோறு என்பது போல தட்டை தூக்கிக் கொண்டு ஓடினான் அவன், மெஸ்ஸில்
நுழைந்து அவன் எடுத்து வந்த எவர்சில்வர் தட்டில் சோற்றை நிரப்பி , சாம்பார்
வாளியில் வலை வீசி மீன்களை பிடிப்பதை போல முருங்கைக்காய்களை பிடித்து
தட்டில் போட்டு, அப்பளங்களை அடித்து நொறுக்கி தட்டில் தூவி புடலங் காய்
கூட்டை சோற்றுடன் கலந்து , அந்த தட்டை எடுத்து மூன்றாவது டேபிளில் போய்
அமர்ந்தான். அவனுக்கு முன்னே மூன்றாவது டேபிளில் சாப்பிட்டு போனவனின்
எச்சில் உணவுப் பருக்கைகள் அவன் தட்டின் பின்னே ஒட்டிக் கொண்டன, மோர்,ரசம்
என்று பல ரவுண்டு வந்து ஒரு வழியாக சாப்பாட்டை முடித்தான். தட்டின்
முன்பக்கத்தை நன்றாக சோப்புப் போட்டு கழுவியவன் , பின் பக்கத்தை சுத்தம்
செய்ய மறந்து விட்டான். மெஸ்ஸில் இருந்து வெளியில் வந்தவன், சாப்பாடிற்காக
வெளியில் காத்து இருந்த இன்னொரு நண்பனிடம் தட்டை கொடுத்தக் கிளம்பினான்.
அது ஒரு மாணவர் தங்கும் விடுதி, பலருக்கு சாப்பாடு ஒரே தட்டில் தான். பின்
இரண்டாமவனும் பசி வெறியல் தட்டின் முன் பக்கத்தை நன்றாக கழுவி
பின்பக்கத்தை மறந்து விட்டான். அவனும் சாப்பிட்டுச் சென்றான், இப்போது
தட்டின் பின்புறம் மேலும் அழுக்காகி இருந்தது.பின்னர் தட்டு பலர் கை
மாறியது , யாரும் தட்டின் பின்பக்கத்தை கவனிக்கவே இல்லை, முன்பக்கம் எப்போதும் போல பளபளப் பாகவே இருந்தது. இது போலத்தான் இந்தியாவும் வல்லரசாகிக்கொண்டேஇருக்கிறது.
--முற்றும்
அன்னாஹசாரே ஊழழை எதிர்த்து
நியாயம் வேண்டி
உண்ணாவிரதம் இருந்தார்
எங்கள் வீட்டில்
ஒரு வாரமாக நாங்கள் உணவு வேண்டி
உண்ணாவிரதம் இருக்கிறோம்.
அவருக்கு நியாயம் கிடைத்தது
எங்களுக்கு இன்னும்
உணவு கிடைக்கவில்லை.