சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

பணம் தின்னும் பிணங்கள்


                       வணக்கம், வெல்கம் அண்ட் ஹாய், ஹலோ டூ த வியூவர்ஸ் ஆஃப் அதிரடி டி.வி. வாரா வாரம் பல வித்தியாசமான ஈவண்ட்ஸோட தில் இருந்தா பண்ணு நிகழ்ச்சி மூலமா நான் உங்கள சந்திதிச்சுகிட்டு இருக்கேன் , என்று சொல்லிக் கொண்டே போனான் அந்த அறிவிப்பாளன். ”அதிரடி டி.வி”, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி. மக்கள் தங்களால் நிறைவேற்ற முடியாத சில குரூர ஆசைகளை இத்தொலைக் காட்சியை பார்ப்பதன் மூலம் போக்கிக் கொள்வார்கள். அதிலும் முக்கியமாக நமது அறிவிப்பாளன் நடத்தும் ”தில் இருந்தா பண்ணு” நிகழ்ச்சி குரூரத்தின் எல்லை. அதாவது அறுவறுப்பான, செய்யக்கூசக் கூடிய வேலையை எவன் செய்கிறானோ அவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு. இந்த ஒரு லட்ச ரூபாயை ஜெயிப்பதற்காக மலையில் இருந்து தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று குதித்தவர்கள், மூக்கின் வழியாக கம்பியை விட்டு வாயின் வழியாக எடுத்தவர்கள் என்று ஒரு பெரிய அட்டவணையே போடலாம். 
                    அது போல இந்த வாரமும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நான்கு பேர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தான் நமது அறிவிப்பாளன். இதில் உன்னிப்பாக கவனிக்கப் பட வேண்டியவன் நான்காவதாக நின்ற நமது கதையின் முக்கிய கதாபாத்திரம். அவனை கதையின் நாயகன் என்று அறிமுகப் படுத்த முடியாது ஏனென்றால் கதையின் முடிவில் அவனை நீங்கள் காறித் துப்பும் நிலை வரலாம். சரி நாம் போட்டிக்குள் செல்லலாம். முதலாவதாக வந்தவனிடம் நம் தொகுப்பாளன் விதிமுறைகளையும் ஆட்டமுறைகளையும் விவரித்துக் கொண்டிருந்தான். அதாவது முதலில் 1,2,3 ஸ்டார்ட் என்று கூறியவுடன் வேகமாக முள் நிறைந்த பாதையக் கடந்து, அப்பால் உள்ள எருமை சாணி நிரம்பிய ஊற்றில் மூழ்கி எழுந்து பின் கட்டெறும்புகள் நிறைந்த குகைக்குள் நுழைந்து அங்கே வைக்கப் பட்டிருக்கும் சட்டியில் நெளிந்து கொண்டிருக்கக் கூடிய மண்புழுக்களை பிசைந்து மென்று விழுங்க வேண்டும். இவை அனைத்தையும் 150 விநாடிகளுக்குள் முடிக்க வேண்டும்.
                             போட்டி ஆரம்பமானது, மக்கள் ஆரவாரமுடன் போட்டியாளனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதலாமவன் ஸ்டார்ட் என்ற வார்த்தையை கேட்டவுடன் வெறி கொண்ட வேங்கை என முள்ளில் பாய்ந்து அந்தப் பக்கம் சென்றான். முள் நிறைந்த பாதை அவனை வெகுவாக பாதிக்கவில்லை, ஏனென்றால் அவனும் முள் நிரம்பிய ஸ்பைக் ஷூ என்றழைக்கப்படும் காலணியை அணிந்திருந்தான். முள்ளை முள்ளால் வென்றுவிட்டான். எப்படியோ எருமை சாணி ஊற்றிலும் கஷ்ட்டப்பட்டு மூழ்கி அக்கறை சென்றான்.
 சாணி நிறைந்த அவன் மேனியை பார்த்த பார்வையாளர்கள் பலர் அங்கேயே வாந்தி எடுத்துக் கொண்டிருந்தனர். டி.ஆர்.பி புள்ளிகளை அதிகரிப்பதற்காக ஒளிப்பதிவாளன் இவையெல்லாவற்றையும் அண்மைக் காட்சியில் படம் பிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் லாவகமாக செய்ய முடிந்த முதலாவது போட்டியாளனால் மண்புழுக்களை மட்டும் தின்ன முடியவில்லை. அவன் அவ்ற்றை கையில் பிடித்து ஒரு அருவருப்பு உணர்வுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நேரம் முடிந்து விட்டதென அறிவிப்பாளன் அறிவித்துவிட்டான். பின் வந்த இரண்டாவது போட்டியாளன் நாத்தம் தாங்காமல் ,எருமை சாணி ஊற்றில் மூழ்க முடியாமல் வெளியேறி விட்டான். 
                               ”ஹாய் வியூவர்ஸ் ஐ வில் மீட் யூ ஆஃப்ட்டர் ய ஷார்ட் கமெர்சியல் ப்ரேக், எங்கயும் போய்டாதீங்க அங்கயே இருங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தான் அந்த தொகுப்பாளன். ஒரு வேளை அவன் வெளிநாடாக இருக்கலாம், ஏனென்றால் என் நாட்டு மக்கள் பல காலமாக எங்கேயும் போகாமல் அங்கேயேதான் இருக்கிறார்கள் டி.வி நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டு. ஆக ,அப்படிச்சொன்னதற்காக நாம் அவனை மன்னித்து விடலாம். விளம்பர இடைவேளையின் போது ஒரு நடிகை வந்தார் தன் பளபளப்பான மேனி அழகிற்கு அந்த சோப்புதான் காரணம் என்றார். பின் அதே நடிகை இன்னொரு விளம்பரத்திற்கு வந்து தன் மேனி அழகிற்கு இன்னொரு சோப்பை காரணமாகச் சொன்னார். அதிலும் தலையில் கைவத்து சொன்னார். பின் ஒரு விளம்பரத்தில் ஒரு நடிகர் தென்னை மரத்தில் இருந்து இளநி பறித்த களைப்பில் இறங்கிக் கொண்டிருந்தார், இறங்கிய பின் அவரது கூடையில் வைத்திருந்த வெளிநாட்டு குளிர் பானத்தை கையில் எடுத்து, “புதிய கக்கா சோடா இப்போது இளநி ஃப்லேவரில், இயற்கையான இளநியை விட வேகமாக எனது தாகத்தை தணிக்கிறது “ என்று அந்த குளிர்பானத்தை மடக் மடக் என்று ஒரே மூச்சில் குடித்து முடித்தார். 
                              ஒரு வழியாக விளம்பரங்கள் முடிந்து மறுபடியும் நிகழ்ச்சி தொடங்கியது. மூன்றாவது போட்டியாளனும் அவ்வளவாக சோபிக்கவில்லை. தான் தோற்று விட்ட காரணத்தினால் எழுந்த கட்டுப்படுத்த முடியாத அழுகையை வெடித்து சிதறச் செய்தான். லட்ச ரூபாய் கனவு அவனுக்கு பொசுங்கிப்போனது. கேமராவை மிக அண்மைக் காட்சியில் காட்டிக் கொண்டிருந்தனர். உடன் போட்டியிட்ட போட்டியாளர்கள் அவனை தேற்றிக் கொண்டிருந்தார்கள், நம் நான்காவதாக போட்டியாளனை தவிர. உள்ளூர அவனுக்கு இதில் சந்தோசமே. பார்வையாள்ர்களில் சிலரும் அழுதுக்கொண்டிருப்பதை கேமரா பதிவு செய்து கொண்டது. 
                              கடைசியாக வந்தான் நமது போட்டியாளன், ஆரவார ஒலிகளுக்கிடையில் அலட்சியமாக தன் லட்சிய பயணத்தை மேற்கொண்டான். முள் நிறைந்த பாதை, சாணி ஊற்று இவை யாவற்றையும் துச்சமாக கடந்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் ஜெயித்தால் கிடைக்கும் லட்ச ரூபாய். கடைசியாக அவன் எறும்புக் குகைக்குள் நுழைந்தான். கடித்த எறும்புகளை துச்சமெனத் தள்ளி முன்னேறினான், மண்புழு நிறைந்த சட்டியை நோக்கி. சட்டியை கையில் எடுத்து மண் புழுக்களை லாவகமாக கையில் அள்ளி மென்று தின்னத் தொடங்கினான். கேமரா மெள்ளும் அவன் வாயை குறி வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த்தது. தின்று முடித்து அவ்வளவுதானா என்பது போல் கூட்டத்தை நோக்கி பார்வை வீசினான். அவனுடலில் ஒட்டியிருந்த சாணியைக் கூட பொருட்படுத்தாமல் தொகுப்பாளன் ஓடிவந்து அவனை கட்டிப் பிடித்து “ கன்ங்ராஜுலேஸன்ஸ்” என்றான். பின் அவனிடம் எப்படி நெளியும் புழுக்களை உங்களால் வாயில் வைத்து மெள்ள முடிகிறது என்று பேட்டி எடுக்கப்பட்டது. அதற்கு போட்டியாளன் ”லட்ச ரூபாய் கொடுப்பதென்றால் தான் எதையும் தின்னத்தயார்” என்றான். ”எதையும்” என்ற வார்த்தையை அவன் அழுத்தமாகக் கூறினான். மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு தினமும் இரவில் ஃபாஸ்ட் ஃபுட் வகை உணவகங்களுக்குச் சென்று நூடுல்ஸ் சாப்பிட்டு பழக்கப் படுத்திக் கொண்டதாகவும் கூறினான்.
                              வெற்றி களைப்புடன் தன் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டிற்குள் நுழைந்து தன் மனைவியிடம் சூடாக ஒரு கப் காஃபி போட்டுத் தருமாறு கேட்டான். அவன் மனைவி ஆவி பறக்க காஃபி போட்டுக் கொண்டு வந்து நீட்டினாள். அதை டேபிளின் மேல் வைக்கச் சொல்லிவிட்டு , பீரோவை நோக்கி நடந்தான். பீரோவை திறந்து தனக்கு பரிசாக கிடைத்த லட்ச ரூபாய்க்கான காசோலையை பத்திரமாக வைத்தான். இதற்கிடையில் ஒரு ஈ பறந்து வந்து அவனது காஃபி கோப்பைக்குள் விழுந்து இறந்தது. பின் மெல்ல காஃபி கோப்பை வைக்கப்பட்டிருந்த மேஜையை நோக்கி வந்தான். கோப்பையை கையில் எடுத்து முதலில் ஒரு உறிஞ்சு உறிஞ்சினான். இரண்டாவது உறிஞ்சு உறியும் போதுதான் காஃபியில் செத்து மிதந்த ’ஈ’யை பார்த்தான். அவனது முகம் அஷ்டகோணல் ஆகிப்போனது. உறிஞ்சிய காப்பியை துப்பினான். அறுவறுப்புடன் காப்பி கோப்பையை எறிந்து விட்டு, தன் மனைவியிடம் “அப்பிடி எவன் நெனப்புல ஈ வுழுந்ததுகூடத் தெரியாம காஃபி போட்ட சனியனே” என்று அவளை ஓங்கி அறைந்து விட்டு வெளியேறினான். அந்த அறை முழுதிலும் துற்நாற்றம் பரவிற்று. அது அவன் உடலில் இருந்து வந்ததா, மனதில் இருந்து வந்ததா என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

சொலவடை